Thursday, December 10, 2009

வெண்மணி சம்பவம்: பெரியாரின் எதிர்வினை



பெரியார் தலித்துகளுக்கான போராட்டங்களில் பாரபட்சத்துடன் நடந்து கொண்டாரென்று தொடங்கிய விவாதம், இன்றைய தலித் புத்தி ஜீவிகளென வர்ணிக்கப்படுபவர்களால் அவரை தலித் விரோதியெனவும் நிலப்பிரபுத்துவ ஆதரவாளரென்றும் பழிசுமத்துமளவிற்கு வந்துவிட்டது. இந்து மதத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும் ஒழிக்காமல் ஜாதிப் படிநிலையை தவிர்க்கவியலாது என்பதிலும் பஞ்சமர்களின் விடுதலையின்றி சூத்திரர்களின் விடுதலையும் சாத்தியமில்லையென்பதிலும் பெரியார் கொண்டிருந்த தெளிவும் நம்பிக்கையும் அவரை மிகவும் மேலோட்டமாக வாசிக்கும் நபராலும்கூட இனங்கண்டு கொள்ளமுடியும் என்றிருக்க, இப்பழிசுமத்தல்களின் பின்னணி, திராவிடக் கட்சிகளில் சிதறிக்கிடக்கும் தலித்துக்களை ஒருங்கிணைத்து அவற்றிற்கிணையான ஓட்டுக்கட்சியாய் தம்மை ஸ்தாபித்து, ஆட்சியதிகாரங்களில் பங்கு கேட்கும் மலிவான அரசியல் உத்தியேயன்றி, சுத்த சுயம்புவான தலித் எழுச்சிக்கான முன்னேற்பாடுகள் அல்ல.

ஈரோடு ஆதிதிராவிடர் வாலிபர் சங்க விழாவில் தந்தைபெரியார் ஆற்றிய உரையிலிருந்து சிறுபகுதியொன்றை கோடிட்டுக்காட்டுவது இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக அமையும்:

"உலகமே வெறுத்துத் தள்ளிய சைமன் கமிஷனை, சுயமரியாதை இயக்கம்தான் உங்கள் நன்மைக்காக வரவேற்று, உங்கள் குறைபாடுகளைச் சொல்லிக்கொள்ளும்படி வேண்டிக் கொண்டதுடன் உங்கள் குறைபாடுகளையும் அது அறியும்படி செய்தது. அதன் பயன்தான் இப்போது எத்தனையோ பேர் தடுத்தும், சூழ்ச்சிசெய்தும் ஒரு அளவாவது நீங்கள் அவைகளிலும் ஸ்தானம்பெற முடிந்தது. உங்களுக்குத் தனிக்கிணறும், தனிக்கோவிலும் கட்ட வேண்டும் என்று சொன்ன தேசியங்களும் மாளவியாக்களும் உங்களுக்குப் பொதுக்கிணற்றில் உரிமையும், பொதுக் கோவில்களில் அனுமதியும் கொடுக்கிறோம் என்று வாயளவிலாவது சொல்லக்கூடிய நிலைமை எப்படி ஏற்பட்டது? சுயமரியாதை இயக்கம் உங்கள் நிலைமையை உத்தேசித்தும், தேசியத்தின் வண்டவாளத்தை வெளிப்படுத்தியும், தீண்டாமை விலக்கின் சூழ்ச்சியை வெளியாக்கியும் செய்த பிரச்சாரமல்லவா என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்''காந்தி தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக கூறிக் கொண்டதை அம்பேத்கரைப் போலவே வன்மையாகக் கண்டித்த பெரியார், சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்குமான வேறுபாட்டினை உணர்ந்திருந்ததன் காரணமாக தன்னை எச்சூழலிலும் தீண்டப்படாதவர்களின் பிரதிநிதியாக சொல்லிக்கொள்ளாத நேர்மையை அவர் ஆதிதிராவிடர்கள் மாநாடுகளில் கலந்துகொண்டு பேசியபொழுது ‘நீங்கள், உங்களுடைய' என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தியன் மூலமாக விளங்கிக் கொள்ளலாம். சூத்திரன் என்பதற்கான பொருள் தாசிமகன், வேசிமகன் என்றிருப்பதால் ‘பறையர்' என்பதை விடவும் ‘சூத்திர'னென்பது இழிவானதென்றவர் ‘ஆதிதிராவிடர் நன்மையைக் கோரி பேசப்படும் பேச்சுக்களும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களின் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்குமே' (குடி அரசு 11.10.1931) என்ற தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்கான தவிர்க்கவியலாத காரணங்களையும் சுட்டிக்காட்ட தவறியதில்லை.

பூனா ஒப்பந்தத்தின்போது பெரியார் ஐரோப்பியாவிலிருந்தபோதும் அம்பேத்கருக்கு ‘6, 7' கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரானது காந்தியாரின் உயிரைவிட கேலவமானதல்ல; காட்டுமிராண்டித்தனமான பூச்சாண்டிகட்குப் பயந்து சமூகத்தைக் கொலை செய்துவிடாதீர்கள்' என்று தந்தி கொடுத்ததுடன் ‘மகாத்மாவின் பொக்கவாய்ச் சிரிப்பில் மயங்கியும், மாளவியா, ராஜகோபாலாச்சாரியார் போன்ற பிரகஸ்பதிகளின் ஆசிர்வாதத்திற்கு ஏமாந்ததும் கையெழுத்து போட்டதும் தலித்துகளின் விடுதலையைப் பாழாக்கிவிட்ட'தென விமர்சனம் செய்தவர் பெரியார். மேலும் ‘பூனா ஒப்பந்தம் இதர இடங்களில் எப்படிப் போனாலும் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையாவது ரத்து செய்யப்பட வேண்டுமென'வும் (குடி அரசு 03.02.1935) பார்ப்பனரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முக்கியமானதெனவும் வலியுறுத்தினார். (குடி அரசு 8.11.1925).பெரியாரின் சமகாலத்தியவர்களும் அவரால் மதிக்கப்பெற்ற தலைவர்களுமான முகமது அலி ஜின்னாவும், அம்பேத்கரும் மதம், ஜாதி அடிப்படையில் முஸ்லீம்களாகவும், தலித்துகளாகவும் தம்மக்களை ஒருங்கிணைத்த சூழலில் பெரியாரோ, பார்ப்பனரல்லாதார் என்ற வகைப்பாட்டிற்குள் முகமதியர்கள், கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ-இந்தியர் முதலிய இந்துகளல்லாதவர்களையும், இந்து மதத்திற்குள் பிராமணர் நீங்கிய பலஜாதியினரோடு தீண்டத்தகாதரென தள்ளி வைக்கப்பட்டவர்களையும் ஒருங்கிணைக்கும் கடினமான செயல்திட்டத்தை முன்வைக்க, அது இன்னும் நிறைவேறாமல் காலம் நீடிக்கிறது. இந்நிலையில் பெரியாரின்மீது சுமத்தப்படும் தலித் விரோதியென்ற குற்றச்சாட்டை நிரூபிக்க 44 தலித்துகள் எரித்துக் கொல்லப்பட்ட வெண்மணி சம்பவம் குறித்து அவர் பேசவில்லையென்பது சான்றாக்கப்பட்டு வருகிறது.


‘நிறப்பிரிகை'யின் கூட்டு விவாதத்திலும் பலரால் இக்கருத்து சொல்லப்பட்டு, பெரியாரிய ஆய்வறிஞர்களுள் ஒருவரான பேரா. அ. மார்க்ஸ் அவர்களும் அது குறித்து தமக்கு தெரியவில்லையென்று கூறியுள்ள சூழலில் (பெரியார் : நிறப்பிரிகை கட்டுரைகள் டிசம். 1995-விடியல் வெளியீடு) வெண்மணி குறித்த பெரியாரின் எதிர்வினையைக் கவனப்படுத்துவது அவசியமாகிறது.வெண்மணி சம்பவத்தின்போது பெரியார் உடல்நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்து வந்தாரென்பதும் 28.12.68 அன்றுமாலையே இல்லம் திரும்பினாரென்பதும், டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் திரு.கி.வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக அறியக் கிடைப்பதால், பெரியாரால் அறிக்கையெதுவும் எழுதவியலாததை அனுமானிக்கலாம். எனினும், 12.1.69 அன்று செம்பனார் கோவிலில் அவர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து (விடுதலை 20.1.69) வெண்மணி குறித்த பெரியாரின் மதிப்பீடு வெளிப்படுகிறது:"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல.

இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''பெரியாரது வழமையான பாணியில் இவ்விமர்சனமும் பொதுப்புத்தி சார்ந்தும் சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் அமைந்திருக்கிறது.


சோவியத் ரஷ்யாவை பல்வேறு சந்தர்ப்பங்களில் விதந்தோதிய பெரியார் இந்திய கம்யூனிஸ்டுகளை எப்பொழுதுமே பொறுக்கித் தின்பவர்களென்றே அழைத்து வந்தார். அதைப் போலவே இந்திய கம்யூனிஸ்டுகளும் பெரியாரையும் அவர் வலியுறுத்திய இன, பிராந்திய உணர்வுகளையும் கண்டு கொண்டதில்லை. ‘இந்தியாவில் சமதர்மமும் பொதுவுடைமைத் தத்துவமும் ஏற்பட வேண்டுமானால், வருணாசிரமமும், பரம்பரைத் தொழில் முறையும், கைத்தொழில் முறையும் முதலில் ஒழியவேண்டும்.' (குடி அரசு 14.6.1931)‘வருணாசிரமத்தையும் பார்ப்பனீயத்தையும் பத்திரப்படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொதுவுடையை ஏற்படுத்திவிட்டாலும், திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பானிடம் தானாகவே வந்துவிடும் என்றும் சாதி இருக்கிறவரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும் பார்ப்பனர்களுக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன்போலவே நடைபெறும் என்றும் தைரியம் கொள்ளச்செய்யும்...' (குடிஅரசு 25.3.1934). அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொதுவுடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாகம் ஏற்படுகிறதென்ற பெரியாரின் அவதானிப்பு காலம்கடந்தே நமக்கு உறைக்கிறது.‘கம்யூனிஸ்ட்-எவன் காலை நக்கியாவது வயிறுவளர்க்கிறதுதான் அவன் வேலை; இன்னாரோடுதான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை; நாம் வலுத்தால் நம்கிட்டே; பார்ப்பான் வலுத்தால் அவன்கிட்டே; இன்னொருவன் வலுத்தால் அவன்கிட்டே; உலகத்திலே கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் நம் கம்யூனிஸ்ட்டுதான்' (திருச்சியில் 4.11.1973 அன்று பேசியது) என்ற கணிப்பும் இன்றையவரைக்கும் நீடிக்கும் நிலைதான் இருக்கிறதெனினும் சமீப காலமாக கம்யூனிஸ்ட்டுகள் பெரியாரை ஏற்றுக்கொள்வதும்; இனம், மொழி குறித்தெல்லாம் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.


இம்முடிவுகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தால் அதனுடைய விளைவுகள் மிகச் சிறப்பாக இருந்திருக்குமே.கூலி உயர்வுக்கான தொழிலாளர்களின் கிளர்ச்சிகளை பெரியார் ஒருபோதும் ஆதரித்ததில்லை. இது ஏதோ வெண்மணி விஷயத்தில் மட்டும் எடுக்கப்பட்ட முடிவல்ல. 1933-ஆம் ஆண்டிலேயே கொச்சி, ஆலப்புழை, திருநெல்வேலி ஆகியவிடங்களில் கீழ்க்கண்டவாறு பேசியிருக்கிறார்:"எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள்நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்றுசேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்கவேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம்கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள்.


முதலாளிகளுடன் கூலித்தக்கராறு என்பது, முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்'' (குடிஅரசு, 1.10.1933)."நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்கு கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படி செய்ய வேண்டும்'' என்ற பகுத்தறிவு கட்டுரையும் (2.12.1934) "முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்' என்ற 1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானமும் "அரசாங்கத்தின் சலுகையால் முதலாளி வாழமுடிகிறது. ஆகையால் முதலாளி கூடாதென்றால் அவனைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின்மீது திரும்பவேண்டு'மென்று பொன்மலையில் 27.9.1953 அன்று பேசியதும் இங்கு சேர்த்தெண்ணத்தக்கது.பெரியாரின் செம்பனார்கோயில் பேச்சிலிருந்து திராவிடக் கட்சிகளின்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை விளங்கிக்கொள்ள இயல்கிறது. அந்நம்பிக்கையும் சிதறுண்டுபோய் அவர் "ஓட்டுகளுக்காக கூட்டிக் கொடுக்கவும் செய்வார்கள்' என்று இறுதிக்காலத்தில் பேச வைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி திராவிடக் கட்சிகள் ஆட்சியிலமர்ந்ததை சுயமரியாதை இயக்கத்தின் வெற்றியென அவர் கருதிக்கொண்டதும், அவர்கள் ஆட்சியிலிருப்பது சுயமரியாதை இயக்கப் பணிகளுக்கு ஆதரவாக இருக்குமென்பதும் அவர் நம்பிக்கைகளுக்கு காரணமாயிருந்தன.கம்யூனிஸ்டுகளிடம் விவசாயக் கூலித் தொழிலாளிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்ற பெரியாரின் அறிவுரையில் இப்பொழுது திராவிடக் கட்சிகளையும் தலித் அமைப்புகளையும் தயக்கமின்றி இணைத்துக் கொள்ளலாம். தலித் அமைப்புகள் பெரியாரை முற்றாகப் புறக்கணிப்பது பார்ப்பனீயத்திற்கு துணைசெய்வதே ஆகும். ஜாதி, மத ஒழிப்பிற்கான பெரியாரின் நுட்பமான அவதானிப்புகளை புறந்தள்ளுகிறபட்சத்தில், நெடிய காலம் தள்ளி அதன் பெருந்தீங்கை உணர வேண்டியிருக்கும்.


- நன்றி - செல்வன் -

Friday, November 13, 2009

புலி அரசியலால் விடுதலை அடைவோம்..



ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. “எத்தனை மக்களை போராடவைத்தான்” என்பதிலிருக்கிறது.


“அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம்புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை.


புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை… சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை.
சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது… ” தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பிரபாகரனின் இருப்பு மற்றும் உயிர்ப்பு சர்ச்சையானது தமிழின அறிவீனத்தின் வெளிப்பாடே. தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் வரவேண்டும் அவர் வெளிப்பட்டு வருவார் என்று உறுதி கூறுவதும் அடம் பிடிப்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்.


ஒரு தனி மனிதனின் தோளில் சுமையை ஏற்றி வைத்துவிட்டு சுகம் காணும் சோம்பேறித்தனம். நடந்து முடிந்த முள்ளி வாய்க்கால் மனித நரபலி வேட்டைக்கு பின்னும் தமிழினம் தமது கடமையை இன்னும் உணர்ந்தபாடில்லை. ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. எத்தனை மக்களை போராடவைத்தான்.,எத்தனை மக்களை சுயாதீனமாக களம் அமைத்து, தனக்கு பின்னும் போராட உருவாக்கினான் , எத்தனை மக்களை சுதந்திரமாக வாழ தகுதிப்படுத்தினான் என்பதிலிருக்கிறது.


தலைவரின் பின்னால் மொத்த வன்னி மக்களும் உலகத்தமிழினமும் சென்றதை பார்க்கும் போது தலைவனின் ஆளுமையும் வெற்றியும் புரிகிறது. உலக அரசியல், பொருளாதார,சமூக,பிராந்திய நலன் சார்ந்த கூறுகளை உள்வாங்கிக்கொண்டு நமது இலட்சியமான ஈழ விடுதலையை ,தற்சமயத்தில் உலக வல்லாதிக்க சக்திகளின் முறுகல் மற்றும் பிணைவுகளின் ஊடாக நகர்த்தி செல்ல வேண்டும்.

விடுதலை போராட்டங்கள் யாவும் பயங்கரவாதமாகி போன, இக்காலத்தில் ஆயுத போராட்டத்திற்கான தளமானது சுருங்கி போய் கிடக்கிறது. அமெரிக்கா , இந்தியா உட்பட ஏனைய பிற அரசுகளும் இன்னும் புலிகளை பயங்கர வாதியாகத்தான் பார்க்கிறது. ஆயுத போராட்டமானது இப்போதைக்கு ஈழ விடுவிற்கு எதிராகவே அமையும் போல தெரிகிறது .என்றாலும் மாவீரர்களின் தியாகத்தையும் தீரத்தையும் போற்ற வேண்டியது நம் கடமை. ஈழவிடுதலை போராட்டமானது காந்திய வழியில் பயணித்து ஆயுத வழியில் உரமேறி விசுவரூபமேத்த போது உலகமே ஒருவித கலக்கத்தோடு நம்மை பார்த்தது. அது மற்ற தேசிய இனங்களையும் உசிப்பிவிடுமோ என்று உலகமே அஞ்சியது. வல்லாதிக்க சக்திகள், தமது அழுத்தத்திலிருக்கும் தேசிய இனங்கள் விடுபட எத்தனிக்குமோ என்று மிரண்டன.


தத்தமது தேச எல்லைக் கோடுகளை மாற்றி வரைய வேண்டிவருமோ என பயந்தன. போராட்டத்தின் நோக்கம் உண்மையானது உயர்வானது என தெரிந்து கொண்டே கண்ணை மூடிகொண்டன. சிங்களமும் இதை சரியாக புரிந்து கொண்டு சதிராட்டம் ஆடிவிட்டது. அதனாலேயே தான் , நாம் பார்த்த காந்திய , கம்யூனிச , முதலாளித்துவ, புத்த ,நவ நாகரீகாக தேசங்கள் அவற்றுக்கிடையேயான முறுகலை ஒதிக்கிவிட்டு ,தத்தமது அடிப்படை தேசிய கட்டுமான கொள்கை கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு புலிகள் ஒழிப்பு என்ற ஒரே புள்ளியில் நின்றன.


இதையேதான் தமிழீழ தேசியத் தலைமையும் உள்வாங்கிக்கொண்டு தங்களை தாங்களே சுருக்கி கொண்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்வாங்கல் என்பது ஒரு நேர்த்தியான தொலை நோக்குடன் நன்கு சிந்தித்து செயல் படுத்திய ஒரு நிகழ்ச்சியாகத்தான் தெரிகிறது.


எந்த அளவிற்கு அவர்களின் விசுவரூபம் எதிரியை மிரட்டியதோ அந்த அளவிற்கு ஒரு படி மேல போய் இன்று அவர்களின் ஒடுங்களும் ,சுருங்கலும் எதிரியை மிரட்டிக்கொண்டே இருக்கிறது. புலிகளே தமது ஆயுதத்தை மௌனித்து விட்டார்கள். அவர்கள் தமது லட்சியத்தை அடைய போராட்டத்தையும் போராட்ட தலைமையையும் மக்களிடமே கொடுத்துவிட்டார்கள்.


இன்றைய உலக ஒழுங்குக்கேற்ப எந்த நாட்டோடும் தொடர்பேற்படுத்தி பணியாற்ற கூடிய ஒரு உலகந்தழுவிய அமைப்பாக. ஒன்றை உருவாக்கி அதனூடாக நமது பெருவிருப்பையும், விருப்பின் நியாயத்தையும் . உலகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நினைத்தார் போல தெரிகிறது. அதுவும் ஓரளவு வெற்றியடைந்திருக்கிறது. உலகும் போராட்டத்தின் நியாயத்தை விளங்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இந்தளவில் இது புலிகளுக்கு மிக பெரிய வெற்றியே. புலிகளும் எதிரியின் கண்களுக்கு தெரியாமல் நின்று களமாடுகிறார்கள். போரின் வீச்சானது எதிரியை கடுமையாக தாக்குவது வெளிப்படையாகவே தெரிகிறது.


எதிரியும் வாயில் நுரை தள்ள மூச்சிரைக்க திக்கு தெரியாமல் அலைகிறான் . மேலும் மேலும் தவறு செய்கிறான்.. குற்றவாளியாக நிற்கிறான். எந்த சமுகம் நம்மை தூற்றியதோ அது இன்றைக்கு போற்றுகிறது. உலகம் இப்போது நம்மை திரும்பி பார்க்கிறது. இந்த நிலைபாடுதான் இப்போதைக்கு நமது இலக்கைஅடைய சரியானதாக தெரிகிறது. மற்றபடி தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் வரவேண்டும் அவர் வெளிப்பட்டு வருவார் என்று உறுதி கூறுவதும் அடம்பிடிப்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம். ஒரு தனி மனிதனின் தோளில் சுமையை ஏற்றி வைத்துவிட்டு சுகம் காணும் சோம்பேறித்தனம். ஒரு புலி உயிரோடு இருப்பது தெரிந்தாலும் சிங்கள வேதாளம் பயங்கரவாத கூச்சலோடு மறுபடியும் முருங்கை மரம் ஏறும். மற்ற வல்லாதிக்க வேதாளமும் அதனை பின்தொடர்ந்து ஓடும்.

எத்தனை மக்களை சுயாதீனமாக களம் அமைத்து தனக்கு பின்னும் போராட உருவாக்கினான் , எத்தனை மக்களை சுதந்திரமாக வாழ தகுதிப்படுத்தினான், என்பதிலிருக்கிறது. தலைவரின் பின்னால் மொத்த வன்னி மக்களும் சென்றதை பார்க்கும் போது தலைவனின் ஆளுமையும் வெற்றியும் புரிகிறது. எதோ ஒரு தேவன் வந்து நம்மை மீட்பான் என்று எண்ணியிராமல் பொதுவான வேலை திட்டத்தில் நமக்கான பணியினை செய்ய முயலவேண்டும். தமிழகத்தில் தனி மனித துதியிலே நாம் மூழ்கிகிடப்பதால் தலைவரும் போராளிகளும் சொல்லும் செய்தி புரியாமலே போய்க்கொண்டிருக்கிறது. கலி முற்றும் போது கிருஸ்ணர் வருவார். அதர்மத்தை அழிக்க இறைவன் வருவான் என்று சோம்பியிராமல் மானமுள்ள அறிவுள்ள மக்களாக நாம் போராட்டத்தை தோளில் ஏந்த வேண்டும். இல்லையேல் வரலாறு நம்மை மன்னிக்காது. நமக்கு உலக பார்வை வரவேண்டும்.


நமது கிணற்று தவளை வாழ்க்கையே நமது இந்த நிலைக்கு காரணம். நாம் தமிழனின் கண் கொண்டுதான் உலக நடப்புகளை பார்க்கவேண்டும். நமக்கான தெரிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா எக்காலத்திலும் ஈழவிடுதலையை ஆதரிக்காது. நெடுமாறன், வை.கோ, சீமான்,இராமதாஸ், தொல் திருமாவளவன், மற்றும் தமிழக ஆதரவுச்சத்திக்களை நாம் மதிக்கின்றோம். . இந்திய தமிழக ஆட்சியாளர்கள் எக்காலத்திலும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை தெளிவாக உள்வாங்கிக் கொண்டோமானால் நமது பாதையமைப்பு தெளிவாகவும் விரைவாகவும் இலக்கை அடையும்.


நன்றி:தமிழ்

Wednesday, November 11, 2009

கற்பு -ஒழுக்கம் - பாலுறவு: புனைவுகள்


பாலியல் குறித்த விடயங்கள் புலமைத்துவ மட்டத்தில் பேசுபொருளாக ஆக்கப்பட்டு வருகிறது. இதே வேளை பெண்களின் மீதான பாலியல் வன்முறைக­ளின் சமீபகால அதிகரிப்பையும் அதன் கொடுரத்தையும் கூடவே அறிந்து அனுபவித்து வருகிறோம்.

இளையதம்பி தர்சினி (வயது 20) எனும் பெண் இரு வருடங்களுக்கு முன் டிசம்பர் 18 அன்று கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்து பின் கல்லொன்­றுடன் கட்டி கிணற்றொன்றில் போட்டிருந்த செய்தி அனைவருக்கும் தெரியும். இந்தச் செய்தி வெளியான போது கூடவே இந்தப் பெண்ணின் ஒழுக்கப்பண்புகள் குறித்த செய்தியும் சிலரால் பரப்பப்பட்டன. படையி­னரின் இந்த காடைத்தனத்தை மூடிமறைக்க அரச இயந்திரமும், பேரினவாத கட்டமைப்பும் அப்பெண்ணின் ஒழுக்கப்­பண்புகள் மீது கேள்வியெழுப்பும் வண்ணம் கதைபரப்பியதை பெண்கள் அமைப்புக்கள் கண்டித்தன.

இத்தனை கோரத்தனத்தின் பின்னும் கூட அதிகாரத்துவம் படைத்த ஆணாதிக்கம் தனது ”ஆண்மைத்துவ” செய்கையை மறைக்கவென, பலியாக்கப்பட்ட பெண்ணையே மீண்டும் மோசமாக சித்தரித்து அக்காடைத்தனத்தை நியாயப்படுத்தவோ அல்லது அதனை சமப்படுத்தவோ முனைவதைக் காண்கிறோம்.

இதுவரை காலமும் பாலியல் வல்லுறவுக்­குள்­ளான பெண்ணை ஆபாசமான உடைய­ணிந்­திருந்தாள், ஆபாசமாக காட்சி தந்தாள், மோசமான இடத்திலிருந்தாள், பிழையான பாதையில் வந்தாள், பிழையான நேரத்தில் வந்தாள் என வல்லுறவுக்கு நியாயம் சொல்லும் வழக்கம் சாதாரண சமூக பேச்சாடலில் மாத்திரமல்ல, சட்டத்தின் முன் கூட காணப்படுகிறது. இது ஒரு சட்ட வலுவாகவும் எதிரிக்கு சாதகமாக அமைந்த எத்தனையோ வழக்குகளைக் காண முடிந்திருக்கிறது.

எனவே தான் இந்த கற்பொழுக்கம் குறித்தும் பாலுறவு குறித்தும் நிலவுகின்ற விடயங்களை ஆராய்வது அவசியமாகிறது.
பெண்ணின் உயிரியல் அம்சமான பாலுறுப்புகள் மீதான அதிகாரத்துவத்துக்கு ஆணாதிக்க மரபு வழிவந்த சமூக-பண்பாட்டுக் காரணிகள் முக்கியத்துவம் செலுத்துகின்றன.


ஆண்மை-பெண்மை குறித்த மரபுப் புனைவுகளின் வாயிலாகவும், ஐதீகங்களின் வாயிலாகவும் இது பலமாக வேரூன்றியுள்ளன. இவற்றை எமது கல்வி, தொடர்பூடாக, மத விவகாரங்கள் பாதுகாத்து, வற்புறுத்தி வந்துள்ளன.
தனது கன்னித்தன்மையைப் பாதுகாக்க வேண்டியவளாக பெண் பழக்கப்படுத்தப்பட்­டுள்­ளாள். பாலியல் பற்றிய புரிதல் பெண்க­ளுக்கு மறுக்கப்பட்டதாகவும், வரையறுக்கப்­பட்டதாகவும் ஆக்கப்பட்டுள்ளன. பாலியலா­னது இரகசியத்துக்கும், அந்தரங்கத்­துக்கும் உரிய ஒன்றாகவும் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாலியல் குறித்த வேட்கைகள், நாட்டங்கள் செயற்கைத்தனமானதாக கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. பேசாப்பொருளாக வைத்­தி­ருக்­கப்பட்டாலும் கூட அது பெண்களுக்கு மட்டும்தான் என வரையறுக்கப்­பட்டது. பெண்கள் மத்தியில் இவை பேசாப் பொருளாக இருக்கும் வரை அவர்களின் பாலியல் வேட்கைகள் தணிக்கப்படுமென்ற நம்பிக்கை ஆணாதிக்கச் சூழலில் நிலவுகின்றது.

ஒரு தாரமணம், குடும்பம், வம்சாவழி, ஒழுக்க மரபுகள் என்பன தனிச்சொத்துட­மையின் வழிமுறைகள். இதில் ஒரு தார மணமானது தந்தை வழிச்சமூகத்தின் இருப்புக்கு (அதாவது தனது விந்தின் விளைவே­யென்பதை நிறுவுவதற்கு முன்நிபந்­தனையாக திகழ்கிறது.) அவசியமாக இருக்கிறது. குறிப்பிட்ட குழந்தை தனது ஆண்மைத்துவத்தின் விளைவு-வெளிப்பாடு எனக் கருதுகிறது.
எனவே தான் ஆணாதிக்கமானது ”கற்பு” என்பதை பெண்ணின் மீதான விதியாக ஆக்கிய அதே நேரம் ஆணின் ”கற்பு மீறலை” அது தனது ஆண்மையின் வெற்றியாகவும் நிறுவி விட்டிருக்கிறது.

இந்த கற்பொழுக்கமானது வரலாற்று பூர்வமாகவே பெருங்கதையாடலாக சித்திரித்து வரப்பட்டுள்ளது. அதன் விளைவாக இது இன்றும் பலமாக நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கதையாடலின் மத்தியில் விஞ்ஞானபூர்வமான உண்மைகள் வைதீக பிற்போக்கு சக்திகளால் காலாகாலமாக காயடிக்கப்பட்டு வருகின்றன.

பெண்ணின் இந்த கற்பொழுக்கத்துக்கு பெண்ணின் மீதான ”யோனி மைய வாதம்” ஆற்றுகின்ற பாத்திரம் கரிசனைக்குரியது. இது தான் பெண்ணின் மீதான இயற்கையான உயிரியல் ”கொடுமை”. இனப்பெருக்க மையமாக அமைந்திருக்கிற உயிரியல் இயல்பை பெண்ணின் கர்ப்பம் குறித்த பயத்திற்கும் அடிப்படையாக இது ஆகியது. இந்த பயத்தின் அடிப்படையிலேயே ஆண்-பெண் உறவு கட்டமைக்கப்பட்டு குடும்ப அமைப்பு எனும் அதிகாரத்திற்கு ஒடுக்கியது. ”ஒருத்திக் கொருவன்” எனும் சித்தாந்தத்தை பெண்ணுக்கு திணித்தது. இவை கெடாம­லிருக்க ஒழுக்கநியதிகள், கண்காணிப்புகள், விட்டால் போதுமென்ற உடனடித் திருமணங்கள்,
ஆணுறுப்பு லிங்கமாகவும் வழிபாட்டுக்­குரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. (இது எப்படி வழிபாட்டுக்கு வந்தது என்பதை பெட்டியில் உள்ள கதையைப் பார்க்க) அதற்கு கோவில் கட்டி கும்பிடுகின்ற அதே நேரம் பெண்ணின் யோனியானது தீட்டு, தூய்மை, துடக்கு, விலக்கு, அசிங்கம், அருவருப்பு, அவமானம் என்கின்ற புனைவுகளையும், அதன் மீதான வெறுப்­பையும் ஏற்படுத்தியுள்­ளது.

பாலுறவு தவிர்த்தால் யோனியை ஒரு வேண்டத்தகாத ஒன்றாகவே ஆணாதிக்க சூழல் கற்பிதம் கொண்டிருக்கிறது. இன்றுள்ள தூஷண வார்த்தைகளைப் பார்த்தால் இதன் விளை­வினை விளங்கிக் கொள்ள முடியும். நிலவுகின்ற தூஷண வார்த்தைகள் அனைத்­துமே பெண்களின் பாலுறுப்புகளைக் குறித்து கேலி செய்கின்றவையாகவே உள்ளன. இதன் மூலம் வேண்டாதவரை அவமானப்படுத்த முடியும் என்கின்ற ஐதீகம் நிலவுகிறது. ஒருவரைத் துன்புறுத்த முடிவு செய்தால் எதிhpக்கு நெருக்கமான பெண்ணின் (தாய், சகோதரி, மனைவி) பாலுறுப்புகள் மீது கேலி செய்தால், அவமானப்படுத்தினால் கோபம் கொள்ளச் செய்யலாம் என்கின்ற ஐதீகமும் நிலவுகிறது.

அதே வேளை இதே யோனி புனிதம் கெடா­மல் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்­புகளும், அவற்றுக்கான விதிகளும் கட்டுப்பா­டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. ஆண் பல பெண்களுடன் கொள்ளும் பாலுறவுத் தொடர்புகள், ஆண்மையின் சிறப்பாகவும் பெண் தனது கணவனைத் தவிர்ந்த எவ­ருடனும் வைத்துக் கொள்கின்ற பாலுறவுத் தொடர்புக­ளினால் அவளது ”கன்னித்தன்மை” புனிதம் கெட்டதாகவும், கற்பிழக்கப்பட்­டதாகவும், நடத்தை கெட்டதாகவும், ஒழுக்க மீறலாகவும் புனை­யுமளவுக்கு கருத்தியல்கள் கட்டமைக்கப்­பட்டுள்ளன.

இன்றும் பாலுறவானது விஞ்ஞான பூர்வமான பரஸ்பர புரிதலுடனான கூட்டுச் செயற்­பாடாக இல்லை. பாலுறவின் போது பெண்ணானவள் வெறும் போகப் பொருள் மாத்திரமே ஆண் விரும்பிய போது ”சகலவற்றையும்” சகித்துக் கொண்டு இசைந்து கொடுக்கும் இயந்திரம் மாத்திரமே.

எனவே இந்த யோனி மையவாதம் தான் யோனியை மையமாகக் கொண்ட பாலுறவுக்கு அப்பால் - எல்லாமே வக்கிரம் என்ற புனைவை­யும் ஏற்படுத்தியது.


எதிர்பாலுறவுக்­கூடாகத்­தான் (retro sexual) பாலியல் இன்பம் கிட்டும் என்கின்ற புனைவுகளும் இதன் வெளிப்பாடே. எனவே தான் பின்னர் புட்ட உறவு, வாய் உறவு மற்றும் ஒரு பாலுறவு வரை எல்லாமே அபத்தமானதா­கவும், வக்கிரம் கொண்டதாகவும், இயற்கைக்கு முரணானதாக­வும், சட்டவிரோதமானதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டன. இது ஆணின் பாலாதிக்கத்­துக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது.

மேலும் நிலவுகின்ற சமூக அமைப்பைப் பொறுத்தளவில் தனது சொந்த பாலுறுப்பு தவிh;த்து ஏனையோரின் பாலுறுப்புக்களை அருவருப்பாக பார்க்கின்ற உளவியல் ஆண்களிடம் இருப்பதாக சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிர்மாறாக, பெண்கள் இருக்க கற்பிக்கப்பட்டுள்ளனர். கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக குழந்தைகளுக்கு குண்டி கழுவுவது முதல் கொண்டு ஏனையோரின் உள்ளாடைகளை கழுவுவது மற்றும் குழந்தைகள், பிள்ளைகளின்-ஏன் வீட்டிலுள்ள அனைவரதும் பாலுறுப்புகள் உள்ளிட்ட சுகாதார மருத்துவ விடயங்களில் அக்கறை கொள்வதும், ஏன், சொந்த பாலுறுப்பு மீதான சுகாதார மற்றும் மறு உற்பத்தி குறித்தும் சகல வழிகளிலும் பெண்ணே, பொதுவாக எந்தவித அருவருப்­புக்­குமுள்ளாகாமல் சகிப்புடன் பாலுறுப்பு நலன்களில் ஈடுபாடு கொள்ள கற்பிக்கப்பட்­டுள்ளாள். இப்படியான பொறுப்­பு­க­ளி­­லிருந்து விலகி வரும், ஆணாதிக்கத்திடம் இப்படிப்­பட்ட அருவருப்புகள், வெறுப்­புணர்வுகள் இருப்பது குறித்து பின்னென்ன ஆச்சரியப்­பட இருக்கிறது.

எனவே தான் இந்த கற்பு, கன்னித் தன்மை, போன்ற மரபான ஐதீகங்கள் இன்று பாலியல் வல்லுறவை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கொண்டு சென்று விடுகிறது. சமூகத்தில் உள்ள பாலொடுக்­குமுறைகளை இனங்காணாமல் செய்து விடுகிறது. குடும்பத்தில் கணவனால் பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படு­கின்ற வேளைகளில் அது அவனின் உரிமையாக கொள்ளப்படுகிறது. பெண்கள் அதனை சகிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்­படுகிறது. இருக்கின்ற ஆணாதிக்க கட்டமைப்புடன் சமரசம் செய்து கொள்ளச் செய்துள்ளது. இந்த கட்டமைப்பின் மீதான மீறல் மேற்கொள்ளப்­படுமாயிருந்தால், மீறியவளை நடத்தை கெட்டவளாக ஆக்கிவிட்டுள்ளது.

பாலியல் குறித்த இந்தப் புனைவுகளைத் தகர்ப்பதே பெண் விடுதலையை சாத்தியமாக்கும்.


இன்றைய பெண்கள் மீதான வன்முறைக­ளில் பாலியல் வன்முறையானது அதிகரித்து வருவதானது அதிகாரமற்ற பாலாரின் மீதான ஆண்களின் கையாலாகாத்தனத்தையே குறிக்கிறது. அதிகாரத்துவத்தின் அடக்கு­முறைக்குள்ளாவதால் அதிகாரம் முதலில் அவசியம். இன்று இந்த அதிகாரத்துக்கான ஒரு பயணத்தையே மேற்கொள்ள வேண்டியிருக்­கிறது. ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்கான பயணத்தில் தங்களின் விடுதலைக்கான பாத்திரத்தை ஆற்றுவது, விடுதலையில் அக்கறையுள்ள அனைத்து பெண்களினதும் கடமை.


பறை இதழ் - 3

ஓவியம் - சால்வடார் டாலி

Monday, November 9, 2009

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !



அந்தந்த காலத்துக்குரிய பொது அபிலாசைகளைக் கண்டறியாத, கண்டபின் அதனை நிறைவு செய்யாத ஒரு தலைமைதனது லட்சியத்தில் வெற்றிகொண்ட ஒரு தலைமையாக இருக்கமுடியாது.ஆனால் இந்த "பொது" என்கிற விடயமானது கூர்ந்து நோக்க வேண்டிய ஒன்று. .பெரும்பான்மை அபிலாசைகளை நிறைவேற்றுதல். என்பது ஜனநாயகப் பண்பின் பிரகாரம் சரியானதாகவே பட்டாலும், அடிப்படை தர்மத்தை (ethics) நிறைவு செய்வதாகத்தான் அது இருக்குமென்றில்லை. சில பலமான கருத்துக்கள், நியாயமானதாகவும் சிறுபான்மையானதாகவும் கூட இருக்கமுடியும். எளிமையாக சொல்லப்போனால், நாம் இன்று நம்பி ஏற்றுக்கொண்டுள்ள அத்தனையும் உண்மையாகவும் நியாயமாகவும் தான் இருக்குமென்பதில்லை. அது அப்போதைய நேரத்தின் இன்பமூட்டுபவையாகவும், சுயகளிப்பூட்டுபவையாகவும் இருக்கும். மாறாக நாம் மறுக்கின்ற பல விடயங்கள் நமக்கு கசப்பானவையாகவும் உண்மையாகவும் இருக்க முடியும்.

இந்த இடத்தில் மீண்டும் பொது என்கிற விடயத்துக்கு வருவோம். பெரும்போக்காக (mainstream) இருக்கிற அனைத்தும் நிச்சயம் உண்மையாகவும், சரியாகவும்தான் இருக்கும் என்றில்லை. மாறாக சிறுபான்மை கருத்துக்களாக இருப்பதால் அது பிழையாகத்தான் இருக்குமென்றில்லை.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது என்பதை நாம் அனைவரும் உணர்வோம்.


ஒரு இனத்தின் சமூக கட்டமைப்பானது, வரலாற்று ரீதியில் பல மரபுகளையும், அந்த மரபோடிணைந்த பல்வேறு புனைவுக் கூறுகளையும், மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மாயைகள், புனைவுகள், திரிபுகள் என்பன கலாசார பண்பாட்டு படிமங்கள் மீது குந்திக்கொண்டு தான் இருக்கும். இது நமது தமிழ் மரபில் மட்டுமல்ல உலகின் பல இனங்களின் மரபிலும் காணக்கிடைக்கின்ற கூறுகள்.சமூக உருவாக்கமானது, பல கட்டங்களைத் தாண்டி சமூகமாற்றங்களை கால வளர்ச்சிக்கமைய எதிர்கொள்கிற பொழுது, இவற்றில் இருக்கின்ற பல்வேறு பிழையான கூறுகளைக்களைவதில் தான் அந்த சமூகத்தின் ஆரோக்கியமான, புரட்சிகர சமூக மாற்றத்தின் வெற்றி தங்கியிருக்கிறது.நாட்டில் நமது போராட்டமானது ஒரு தேசிய போராட்டம் என்கிற ரீதியில், தேசிய உணர்வையும், அதன் கூறுகளையும் பாதுகாப்பதிலேயே நமது தேசியவாதத்தை தக்கவைக்கலாம் என்கிற வாதத்தின் விளைவாக புரையோடிப்போயுள்ள பல பிழையான மரபுகளைத் தோளில் சுமந்தபடி நமது சமூகம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை உளச்சுத்தியுடன் ஒப்புக்கொள்வோம்.


நம்மை வழிநடத்தும் உண்மைகள் பல நமக்குக் கசப்பானவை, நம்மால் ஜீரணிக்க முடியாதவை, நம்மை மகிழ்வூட்டடாதவை. மாறாக நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பல பிழையான ஐதீகங்கள், மற்றும் புனைவுகள் நமக்கு களிப்பூட்டுபவையாக உள்ளன.கசப்பான உண்மைகளை விட்டுத் தப்பியோடுபவர்களாகவும், களிப்பூட்டும் பிழையான ஆதிக்க மரபுக்கூறுகளை தொடர்பவர்களாகவும் நாம் உள்ளோம். இதனை பண்பாட்டின் பேரால், கலாசாராத் தின் பேரால், தேசியத்தின் பேரால் நாம் தொடர்ந்து வருகிறோம் என்பதே யதார்த்தம்இந்த யதார்த்தத்தை உணராதவரை, இதன் மீது எமது தேடலை செய்யாதவரை, இதில் தேவையான மாற்றங்களை கொணடுவராதவரை, நமது உள்ளார்ந்த வளர்ச்சியில் மாற்றம் காணப் போவதில்தில்லை நாம். அது போல நமது அடுத்த சந்தியினரின் ஆரோக்கியமான வெற்றியையும் இது பாதிக்கச்செய்யும். இது நமது ஆரோக்கியமான சமூகமாற்றத்தில் வெற்றியையும் இறுதியில் ஒட்டுமொத்த பாதிப்பை ஏற்படுத்தும்.


(டென்மார்க்கிலிருந்து வெளிவரும் "இனி" )

Wednesday, November 4, 2009

AIDS : Made in America



AIDS : Made in America - பேரழிவு ஆயுதம் - Dr. புகழேந்தி (இந்தியா)



(மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare? நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். )



இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப்பட்ட செய்திகளைத் தலைகீழாக மாற்றியுள்ளது.எய்ட்ஸ் பீதியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஊசி தயாரிக்கும் குழுமங்களும், இரத்தம் செலுத்தும் மையங்களும், ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்களும் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டன.



எய்ட்ஸ் என்பது இயற்கை வியாதியா?



எய்ட்ஸால் இறந்த பலரையும் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ ஆய்வாளர்களின் அறிக்கை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது. எயிட்ஸ் என்பது இயற்கையான வியாதியுமல்ல, ஓரினச் சேர்க்கையாளர்களை (Homo Sexuals) ஒழிக்க மட்டும் வந்த வியாதியுமல்ல. கருப்பின மக்களை மட்டும் அழிக்கவந்த வியாதியுமல்ல. எய்ட்ஸ் என்பது மனிதர்களால் சோதனைச் சாலையில், மனிதர்களுக்கு எதிராக கிருமியை உருவாக்க முடியும் என்பதற்கான ஆதாரத்திலிருந்து..


1) எய்ட்ஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பது இன்று உறுதியாகின்றது.


(2) இத்தகைய ஆட்கொல்லிக் கிருமி உருவாக்கங்களின் தேவை என்ன? இது எத்தகைய அழிவுகளை உருவாக்க வல்லது என்பதனையும், இதன் பின்புலம் என்ன என்பதனையும் அறிந்தோமானால், அதிர்ச்சியளிக்கக்கூடிய பல உண்மைகள் புரியவரும்.



எய்ட்ஸின் பின்னணி



அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவவும், மூன்றாம் உலக மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் எய்ட்ஸ் போன்ற கிருமியை உருவாக்கத் திட்டமிட்டது. இதற்கான நிதியை அமெரிக்க காங்கிரஸ் இடமிருந்து (60 மில்லியன்டாலர்கள்) பெற்று அமெரிக்க இராணுவத் தலைமைக்கு (பென்டகன்) வழங்கியுள்ளது. இதற்கு பின்புலமாக செயற்பட்டவர் ஹென்றி கிஸ்சிங்கர் (அமெரிக்காவின் முன்னாள் Secretary of State) என்பதும், இந்த இரகசிய உயிரியல் கிருமியை உருவாக்கும் திட்டத்திற்கு MK-NAOMI (Negroes Are Only Momentary Individuals) எனப் பெயரிடப்பட்டது என்பதும், சீ.ஐ.ஏ.யின் துணையுடன் இத்திட்டத்தின் முழுக் கட்டுப்பாடும் கிஸ்சிங்கர் மற்றும் அவருடன் இருந்த மிகச் சில MK NAOMI விஞ்ஞானிகள் கைகளிலேயே இருந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.



இந்த இராணுவ உயிரியல் கொல்லி ஆராய்ச்சித் திட்டத்தின் விளைவாக மனிதனில் நோய் எதிர்க்கும் திறனை சீர்குலைக்க உருவாக்கப்பட்ட ஆற்றல் மிக்க கிருமியால் ஏற்படும் (இறப்பும்) முடிவுகளையும், அதற்கான விரிவுபடுத் தப்பட்ட திட்டங்களையும் அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். வழக்கம்போல இச்செய்திகள் வெளிவராமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டுமுள்ளன.



செயல்திட்ட வடிவங்கள்



1964 இல் உலக நாடுகளிலிருந்து பலதரப்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை சேகரிப்பதும், புற்றுநோய் உருவாக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை பெருமளவில் சோதனைச் சாலைகளில் வளர்ப்பதற்குமான சிறப்பு வைரஸ் புற்றுநோய்த் திட்டமும் (SVCP - Special Virus Cancer Program 1962-77) தேசிய புற்றுநோய் நிறுவனமும் (NCI - National Cancer Institute) அரசின் நிதி உதவியோடு ஒன்றாக இணைக்கப்பட்டு அனைத்து புற்று நோய்களையும் உள்ளடக்கக்கூடிய ஆய்வுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.இவ்வாய்வுத் திட்டத்தின் கீழ், சிம்பன்சி குரங்கின் உறுப்புகளை மனித உடம்பில் பொருத்தி, சோதனை செய்துள்ளனர். 1964 இல் சிம்பன்சி குரங்கின் சிறுநீரகங்களை ஆறு மனிதர்களுக்குப் பொருத்தியதில் ஆறு பேரும் இறந்துள்ளனர். பின்னர் மனிதர்களுக்கிடையே உறுப்பு மாற்றம் செய்ததில் விஞ்ஞானிகள் வெற்றிகண்டுள்ளனர்.



SVCP திட்டத்தின் மூலமே விலங்குகளைப் பாதிக்கும் பல வைரஸ் கிருமிகளை மனிதர்களிடையே பரப்பும் சோதனைகள் நடந்தேறியுள்ளன. இத்திட்டத்தின் வாயிலாக புற்றுநோயை உண்டாக்கவும், மனித நோய் எதிர்ப்புத் திறனை சீர்குலைக்கக்கூடிய பல விலங்கு வைரஸ் கிருமிகள் மனித செல்களுக்கும்(Cells), திசுக்களுக்கும் மாற்றம் செய்யும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இக்குழுவில் Robert GalloTk (எய்ட்ஸ் கிருமியின் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்) இடம்பெற்றிருந்தது முக்கிய அம்சமாகும்.



இத்திட்டத்தில் ஜப்பான், ஸ்வீடன், இத்தாலி, நெதர்லாந்து, இஸ்ரேல், உகண்டா, ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.



பின்னர் இத்திட்டத்தில் அமெரிக்க இராணுவ உயிரியல் போர்முறை (Biological Warfare) ஆய்வாளர்களும் இணைக்கப்பட்டனர். அக்டோபர் 18, 1971 இல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் உத்தரவின்பேரில் இராணுவ உயிரியல் போர்முறைச் சோதனைச் சாலைகளை SVCP இன் கீழ் கொண்டுவரும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் ஆய்வகத் தேவைகளுக்கான புற்றுநோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை தொடர்ந்து கிடைக்கும் வகையில் செய்தலே அதன் முக்கிய பணி என்றும் மனிதர்களுக்கு நெருக்கமான விலங்குகளைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, (எய்ட்ஸை உண்டாக்கும் HIV அத்தகைய இனத்தைச் சேர்ந்தது) மனிதர்களை பாதிக்கும் வைரஸ் கிருமிகளை பெருமளவு வளர்த்தெடுப்பது போன்றவை பிற பணிகளாகவும் இருக்கும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.



இந்த ஆய்வகங்களில் தான் சுண்டெலி, பூனை போன்ற வற்றைப் பாதிக்கும் புற்றுநோய் வைரஸ் கிருமிகளை குரங்குகளுக்குச் செலுத்தி அதன்மூலம் குரங்குகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் சோதனையில் வெற்றி அடைந்தனர். இத்தகைய சோதனைகளில், இனம் விட்டு இனம் தாவும் (Species jumping) கிருமிகள் உருவாக்கப் படுவது பொதுவான விசயமாக இருந்து வந்தது.1970 இல் எய்ட்ஸ் ஏற்படுத்தும் HIV கூடவே ஒரு புதுவகை Herpes வைரஸ் ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து மட்டும் பாதிப்பை ஏற்படுத்தியது.



இந்த Herpes வைரஸ் தற்போது எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படும் Kaposis Sacroma (Gay Cancer of AIDS) என்ற நோய்க்குக் காரணம் என நம்பப்படுகின்றது. உலகில் எய்ட்ஸ் தாக்கம் வருமுன் ஆரோக்கியமான இளைஞர்களுக்கு Kaposis Sacroma பாதிப்பு இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.


எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் கழித்து தெரியவந்த (1994இல்) Kaposis Sacroma வைரஸ்களுக் கும் மனிதர்களை ஒத்த தன்மையுள்ள விலங்கினங்களுக்கு (குரங்குகளுக்கு) வியாதியை ஏற்படுத்தும் Herpes வைரஸ்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதும், அத்தகைய வைரஸினைத் தான் பத்தாண்டுகளுக்கு முன்னர் விலங்குகளிடமிருந்து மனித உடலில் வெற்றிகரமாக செலுத்தும் ஆய்வுகள் மும்முரமாக நடைபெற்றன என்பதும் தெளிவாக உள்ளது.



மேலும், கலப்படம் செய்யப்பட்ட தடுப்பூசிகளால் எய்ட்ஸ் வரும் என்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ள துடன், HIV வைரஸ் புற்றுநோயை உண்டாக்கவல்ல கிருமியே எனவும், எய்ட்ஸ் என்பது கொள்ளை நோயாகவரும் ஒருவித புற்றுநோயே என்பதை 1984 இல் Robert Gallo (எயிட்ஸ் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்) தெளிவுபடுத்தி உள்ளார்.



போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்த ஜோன்ஸ் சால்க்ஸ் செய்த பல ஆய்வுகளில் அவருக்குத் தெரியாமலேயே Hela செல்கள் கலந்திருந்தது அவருக்குப் பின்னர் தெரியவந்துள்ளது. அதே போல் புற்றுநோய் தடுப்பூசி ஆய்வுகளில் Hela செல்கள் அதிகம் கலந்திருப்பது பிறகு தெரியவந்துள்ளது. (4)1951 இல் முதன் முதலில் சோதனைச்சாலைகளில் மனித செல்களை வளர்த்தெடுத்தனர். இதற்கு பால்டிமோர்நகரைச் சேர்ந்த Hennrieta Lacks என்னும் இளம் கறுப்பின பெண்ணின் கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட திசுவே Hela செல் என அழைக்கப்படுகின்றது.இதே போல் இரண்டாம் உலகப் போரின் போது மனித இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட Yellow Fever Vaccine இல் மஞ்சள் காமாலை வைரஸ் (Hepatitis Virus) கலந்திருப்பது பின்னர் தெரியவந்துள்ளது.



1970 - 80 களில் குடர காய்ச்சலுக்கு எதிரான தடுப் பூசிகளில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் தயாரான Mycoplasma, வைரஸ் கிருமிகள் கலக்கப்பட்டிருந்ததுடன் இதை டெக்சாஸ் மாநில ஹன்ட்ஸ்விலி சிறைக் கைதிகளுக்குக் கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதை இராணுவமும், மருத்துவ மையங்களும் இணைந்து நடத்தியது. இந்த மனித விரோத பரிசோதனைக் குழுவில் DNA வடிவத்தைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான ஜேம்ஸ் வாட்சனும் ஒருவர் என்பது வெட்கக்கெடான செய்தி. (இவர் தற்போது Human Genome Project இன் முக்கிய அலுவலர்)ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இரகசியமாக செலுத்தப் பட்ட Mycoplasma Penetrans எனும் கிருமியைப் பற்றிய தகவல்களும் மறைத்தே வைக்கப்பட்டுள்ளது.



கலிபோர்னியாவில் டேவிட் என்னுமிடத்தில் ஒரு வகை குரங்குகளிடம் ஏற்பட்ட எயிட்ஸ் கொள்ளை நோய் (Simian AIDS) காரணமாக பெரும்பாலான குரங்குகள் இறந்துள்ளன. இதுவே முதலில் பதிவுசெய்யப்பட்டது. இதுபோன்று நான்கு இடங்களில் இது நிகழ்ந்துள்ளது. இந்த வகை குரங்குகள் இறந்துபோக HIVNa காரணம் எனப் பின்னர் தெரியவந்தது. இச்சம்பவத்தை மறைக்க பல குரங்குகள் அட்லாண்டாவி லுள்ள எர்கிஸ் பகுதிக்கு கடத்திவரப்பட்டன. இவ்வாறு கடத்தப்பட்ட குரங்குகள் அனைத்தும் 1980 வாக்கில் Simian AIDS நோயால் தாக்கப்பட்டு இறந்துள்ளன.



1974ல் கால்நடை மருத்துவர்களால் சிம்பன்சி குரங்குக் குட்டிகளிடம் எயிட்ஸ் போன்ற நோய் உருவாக்கப்பட்டது. இளம் சிம்பன்சி குரங்குக் குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து, Bovine C Type Virus என்னும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளான மாடுகளிடமிருந்து கிடைக்கும் வைரஸ் கலந்த பாலை மட்டும் கொடுத்தால் அக்குரங்குக் குட்டிகள் ஒரு வருடத்துக்குள் நியுமோனியா காய்ச்சல் (The Gay Pneumonia of AIDS) கண்டு இறந்துள்ளன.



1979இல் பெண்டகன் மையத்தின் உயிரியல் விஞ்ஞானி Dr. Mac Arthur இன் உத்தரவுக்கிணங்க சோதனைச் சாலைகளில் உருவாக்கப்பட்ட HIV அமெரிக்காவில் முற்றிலும் வெறுக்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து அவர்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும் பரிசோதனை செய்யப்பட்டது.


அதன் விளைவாகவே AIDS கிருமி அவர்களுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தின் மூலம் பரப்பப்பட்டது. அதன் காரணமாக அமெரிக்காவில் AIDS ஆல் பாதிக்கப்பட்டவர்கள் நியுயோர்க் மன்ஹட்டன் நகரைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களே. மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்திற்கு ஒத்துக்கொண்ட 20 சதவீதமான ஓரினச் சேர்க்கையாளர்கள் இரத்தத்தில் 1980 - 81 வாக்கில் செய்யப்பட்ட ஆய்வில் HIV Positive இருப்பது தெரியவந்தது. இது 1983 இல் 30 சதவீதமாக உயர்ந்து உள்ளது. 1981இல் தான் HIV எயிட்ஸ் க்கு காரணம் என வெளியிடப்பட்டது.



நியுயார்க் நகர மன்ஹட்டன் (Manhatton) தான் எய்ட்சின் பிறப்பிடம். ஆபிரி;க்காவில் 1982ஆம் ஆண்டின் பின்னரே உறுதிசெய்யப்பட்ட AIDS நோயாளிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எய்ட்ஸ் வல்லுநர்கள் சிம்பன்சி குரங்குக ளிடம் இருந்துதான் மனிதனுக்கு எயிட்ஸ் கிருமி தொற்றி உள்ளது எனும் கருத்தை மட்டும் ஏற்றுக்கொள்கின்றனர்.1970களில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசி சிம்பன்சி குரங்குகளின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதும், குரங்குகளிடமிருந்து எய்ட்ஸ் தோன்றி வளர்ந்திருக்கிறது என்பதும் தற்செயல் நிகழ்வு அல்ல.ஆபிரிக்காவில், உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், பல மில்லியன் மக்களுக்கு, எய்ட்ஸ் கிருமி கலந்த பெரியம்மை தடுப்பூசி கொடுத்ததன் காரணமாக எயிட்ஸ் பரவியது என்பதை மே 11 1987 டைம்ஸ் பத்திரிகை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது



சோதனை விலங்குகளாக சொந்த நாட்டு மக்கள்
1965இல் உருவாக்கப்பட்ட LEMSIP (The Laboratory for Experimental Medicine and Surgery) என்ற ஆய்வுக்கூடம் 1997 வரை, விலங்குகளிடமிருந்து மனித செல்களில் பரவக்கூடிய வைரஸ் கிருமிகளை ஆய்வுசெய்யும் நியுயார்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகளுக்கு விலங்கின் உறுப்புகளை தொடர்ந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.நியுயார்க் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் தான் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டார்கள் என்பது கவனிக்கத்ததக்கது.1994இல் மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே பல கதிர்வீச்சு தொடர்பான சோதனைகளை அமெரிக்க மக்கள் மீது அரசு நடத்தியுள்ளதற்கு எதிராக பல்வேறு ஜனநாயக அமைப்புகள் நடத்திய போராட்டத்திற்கு இணங்கிய அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், இவற்றை விசாரிக்க அறிவுரைக் குழுவினை ஏற்படுத்தினார். தனது அறிக்கையில் (3 ஒக்டோபர் 1995) 1960 வரை மருத்துவர்கள் நோயாளிகளின் ஒப்புதல் பெறாமலே அவர்கள்மீது சேதனை செய்துள்ளதை அக்குழு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.



ஆனால் 20 வருடங்களுக்கு மேலாக The U.S.Code annotated title 50, Chapter 32, Section 1520, dated July 30, 1977 என்கின்ற இச்சட்டத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சகம் தனது சொந்த மக்களையே சோதனை விலங்குகளாக நடத்த ஒப்புதல் அளித்து வந்துள்ளது.
எய்ட்ஸ் யாரையும் தாக்கலாம் என இருந்தாலும், ஆபிரிக்காவில் ஆண் - பெண் புணர்ச்சிக்குப் பின்பே எய்ட்ஸ் ஏற்பட்டது என்பதும், அமெரிக்காவில் அது ஓரினச் சேர்க்கையாளர்களிடம் (ஆண்களிடம்) அதிகமாகக் காணப்பட்டது என்பதும் தெளிவான விசயங்கள்.



HIV கிருமி இனம், மொழி, பாலினத்தை மதிக்காது எனக் கொண்டால் ஏன் அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டும் எய்ட்ஸ் அதிகம் வரவேண்டும்?
எய்ட்ஸ் வல்லுநர்கள் அமெரிக்காவில் எய்ட்ஸின் பாதிப்பு ஆபிரிக்காவில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களைப் பாதிக்குதம் எய்ட்ஸ் கிருமி வகை ஆபிரிக்காவில் இல்லவே இல்லை. பின் இது எப்படிச் சாத்தியம்?



1990களில் அணுவியல் உயிரியல் வல்லுநர்கள் எய்ட்ஸ் கிருமியில் எட்டு வகைகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் D வகை தான் பெருங்குடலைக் (Rectum) தாக்கும் திறனைக் கொண்டது. இந்தவகை எய்ட்ஸ் கிருமி அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களைத் தாக்குகின்றது. மாறாக ஆபிரிக்க எயிட்ஸ் கிருமி பிறப்புறுப்பு செல்களை (Vaginal Cervical Cells) தாக்கும் திறன் இருப்பது தெரியவந்தது. டீ வகைக் கிருமிகளால் அச்செல்களில் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை.



1997 ஆய்வுகளில் பத்தில்; ஒரு அமெரிக்கருக்கு (வெள்ளை இன) எய்ட்ஸ் எதிர்க்கும் மரபணுக்கள் இருப்பதா கவும், ஆபிரிக்காவில் உள்ள கறுப்பின மக்களில் ஒருவர் கூட எய்ட்ஸ் பாதுகாப்பு மரபணுக்கள் பெற்றிருக்கவில்லை என்பதையும் தெளிவாகக் கூறுகையில் எயிட்ஸ் கிருமி என்பது சில இனக் குழுக்களையும் (கறுப்பர்களையும்) ஓரினச்சேர்க்கையாளர்களையும் திட்டமிட்டு ஒழிக்க உருவாக்கப்பட்ட Designer Virus என்பது தெளிவாகின்றது.
எய்ட்ஸ் கிருமி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான Robert Gallo 1987இல் Play Boy சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் "எனக்குத் தெரிந்து அமெரிக்காவில் ஆண் -பெண் புணர்ச்சிக்குப் பின் ஏற்பட்ட எய்ட்ஸ் பாதிப்பு இல்லவே இல்லை என்று கூறலாம்" என்றும், "அமெரிக்க பொது மக்களுக்கு எய்ட்ஸ் வியாதி என்றும் பெரும் பிரச்சினையாக இராது" என்றும் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்."அமெரிக்க அதிகார மையங்களை விரிவுபடுத்த ஆற்றல் கொண்ட கிருமியை (Super Germ)உருவாக்குவதன் தேவை அரசுக்கு உள்ளது" A.H.Passerella - Director, Department of Defence, USA.



ஆக எயிட்ஸ் கிருமி அமெரிக்க ஆய்வகங்களில் உருவாகி பல ஆயிரம் மக்களை அழிக்கும் எண்ணத்துடன் (Weapon of mass destruction WMD) உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் இவ்வளவு ஆதாரங்களுடன் தெளிவான பின்பும், அமெரிக்கா மற்றவர்களிடம் உயிரியல் ஆயுதம் இருப்பதாகக் கூறி அவர்களைத் தாக்கும் இவர்களின் யோக்கியதையை நாம் என்னவென்பது?



Reference:1.


Dr. Alan Cantwell Jr. Queer Blood: The secret AIDS Genocide plot.


2. John Seale, M.D. "Origins of AIDS viruses HIV-1 & HIV-2: Fact or Fiction?" The British Journal of the Royal Society of Medicine- 1988 (81: 617-619)


3. Dr Leonard G. Horowitz. "Emerging virusus: AIDS. Ebola", Accident or International (1996)


4. M.Gold, A conspiracy of cells: one woman's immortal legacy and the medical scandal it caused.


5. William Blum, Rough State.


6. "Small pox Vaccine Triggered AIDS Virus" The London Times Front page story 11.05.1987

Tuesday, October 20, 2009

எழுத்து வன்முறையும், எழுத்து விபச்சாரமும்



தமிழகம் தற்போது ஒரு நிரந்தரக் கொதிநிலையில் உள்ளது. இது கடந்த ஓராண்டாகவே நீடித்துக் கொண்டுள்ளது. இது தமிழர் மனிதினில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. 16 தீக்குளிப்புகள், பலப்பல உண்ணாவிரதங்கள், போராட்டங்கள், ஆரப்பாட்டங்கள், எல்லாமே அறவழிப் போராட்டங்கள். ஆனால், இந்த "காந்தி தேசம்" அசைந்து கொடுக்கவில்லை. எனவே மக்கள், தமது மனதில், வன்முறைதான் அரசை வழிநடத்தும் என்ற புதிய நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.


இது விபரம் தெரிந்த தமிழர் அனைவரும் கொண்டுள்ள உணர்வு. அதன் வெளிப்பாடாக எனது மொழிநடையும் தேவைப்படும் இடங்களில் மட்டும் அதை பிரதிபலித்தது. சில விமர்சனங்கள் வந்தன; எதிர் கொண்டேன். பாராட்டுகளும் வந்தன. என்னை அறிந்தவர்கள் பலர் தொடர்பு கொண்டு ஆதரித்தனர். இது பற்றி எனது தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு இளைய தோழர், காந்தியின் "எழுத்து விபச்சாரம்" பற்றிப் பேசி அதிர்வலைகளை உண்டாக்கினார். அவர் சொன்னார், உலகிலேயே தமிழில் தான் எழுத்திலக்கியத்தையே அகம் என்றும் புறம் என்றும் பகுக்கும் பாங்கு இருந்தது.
அதிலும் வெளிப்படையான மென்மையான காதலை மட்டும் வெளிப்படுத்தும் பண்பாட்டுப் பாங்குதான் தமிழின் அக எழுத்தாக இருந்தது. அதே நேரம், ஒருவர் சட்டத்திற்கும், சமூக ஒழுங்கிற்கும் உட்பட்டு, தனது உறவோடு அடையும் அந்தரங்கமான காதலின்பத்தை வெளியில் பகிர வேண்டியதில்லை. பகிரவும் கூடாது. அப்படிச் செய்வது நாகரிகமல்ல. அது ஒரு வேசித்தனம்! அப்படி இருக்கும் போது காந்தி, "சத்திய சோதனை" என்ற தனது நூலில், தனது அந்தரங்கங்களின் வக்கிரங்களைப் பச்சையாக எழுதினார். ஏதோ பாவ விமோசனத்திற்காகத்தான் என்பது போல அவரது எழுத்து தெரிந்தாலும், அதன் நோக்கம் மக்கள நடுவில் தன்னைப்பற்றிய ஒரு பிம்பத்தைக் கட்டுவதற்காகத் தான்.


யாருமே சொல்லக் கூசும் அந்தரங்கங்களை அவர் சொன்னதால், அவர் ஒரு சுத்த சத்தியவான் என்ற எண்ணமே அனைவரின் மனதிலும் மேலோங்கும். அதைப்போலவே, அவரை அனைவரும் வியப்பாகவும், அதிசயமாகவும் பார்த்தனர். இவர் ஒரு அக்மார்க் சத்தியவான் என்றே கருதினர். ஆனால், அவர் பிரதாபப் படுத்திக்கொண்டது போல அவரது நேர்மை இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் சத்தியத்திற்கு முரணாக, தெரிந்தே, உணர்ந்தே நடந்துள்ளார் என்பது தான் சத்தியத்தை உணர்ந்தவர்கள் தெரிந்து கொண்ட செய்தி. ஒரு அரசியல் உத்தியாக, தனது அந்தரங்கத்தை எழுதி, எதிர்பார்த்த விளைவுகளை அடைந்த அவரை, ஒரு "எழுத்து விபச்சாரி" என்பது தான் சரி என்றார் அந்த இளைஞர். உண்மைதான்! அகில இந்தியாவெங்கும் விரவிக்கிடக்கும் பார்ப்பன, பனியா ஊடகங்கள் அம்பேத்கர் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்ததால், காந்தி பற்றிய பல உண்மைகள் வெளிவருவதில் தாமதம் இருந்து வருகிறது.


வட்டமேசை மாநாட்டில் ஆங்கிலேயர்கள் ஒத்துக் கொண்ட இரட்டை வாக்குரிமை முறையை, தனது உண்ணாவிரதத்தால் காந்தி முறியடித்தார். அம்பேத்கர், பெரியார், சுபாஸ் சந்திரபோஸ் போன்ற எண்ணற்றோரை இருட்டடிப்பு செய்தார். பகத்சிங்கின் தூக்குத்தண்டனையை விரைவுபடுத்தினார், இந்திய விடுதலைப் போராட்டம் ஒரு புரட்சியாக வடிவெடுத்த போதெல்லாம், அதை நீர்த்துப் போகும்படியான நடவடிக்கைகளை எடுத்து, "தனது திட்டப்படி" சுதந்திரம் கிடைக்குப்படிப் பார்த்துக்கொண்டார்.


இதற்கெல்லாம் காரணங்கள் உண்டு. எனது மாணவப் பருவத்தில், 1979 என்று நினைவு, The Illustratted Weekly of India என்ற இதழில் பிரத்தீஷ் நந்தி என்பவர், காந்தியின் பாலியல் ஒழுக்கம் பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதி இருந்தார். அதில் அவர், ஆச்சார்யா கிருபளானியின் மனைவியாரை காந்தி பயன்படுத்திய விதம் பற்றி எழுதி இருந்தார். அது பல விமர்சனங்களை எழுப்பியது. விபரம் தெரியாத நானும், பிரதீஷ் நந்தி அவர்களை வசைபாடிக் கொண்டிருந்தேன். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது கிருத்துவசமயத்தை ஏற்றுக் கொள்ளலாமா என்று கிருத்துவத்தைப் படித்தேன், ஆனால், வாரத்தில் ஆறு நாட்கள் தவறு செய்துவிட்டு, ஏழாவது நாள் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்ற தொனியில் அமைந்த அதன் தத்துவம் என்னைக் கவரவல்லை என்று எழுதியவர், இந்தியாவின் சமயங்களை அதைப்போல் அணுகிப்பார்த்தாரா? பௌத்தத்தை அவர் தழுவாதது ஏன்? ராமனின் அட்டூழியங்களை அவரிடம் எடுத்துக் காட்டியபோது, தான் வணங்குவது மனித ராமனல்ல, இறைவ ராமன் என்றார்.
மனித ராமனாகப்பட்டவர், இறைவ ராமனின் பல அவதாரங்களில் ஒன்று என்ற இந்துமதக் கருத்தை இவர் அறியாதவரா? இது போன்ற சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர் தான் புத்தர் என்பதை அறியாதவரா இவர்? பல சமய இந்தியாவின் தலைவர் வெளிப்படையாக ஒரு மதக்கருத்தை ஆதரிப்பது சரியில்லையென்று அறியாதவரா? தான் ஒரு இந்துவாக இருக்கட்டும், தனிப்பட்ட முறையில் அவர் இந்து மதத்தை அனுசரிக்கட்டும், ஆனால், பொதுவான சபைகளில் ராம்பஜனை என்பது அபத்தமல்லவா? "ஈஸ்வரு, அல்லா தேரே நாம்" என்ற இவரது "பஜனையை" அவ்வம்மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?


தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் அம்பேத்கர், அன்பையும் சாதிகளற்ற சமூகத்தைப் போதித்த, பௌத்தத்தைத் தழுவியதும், இந்து சமயத்தில் பிறந்த ராமசாமிப் பெரியார் நாத்திகவாதியாகவும், சாதியை எதிர்ப்பவராகவும் இருந்ததும், மேட்டுக்குடி காந்தி என்ற அக்மார்க் சத்தியவான், வர்ணாசிரமக் கோமானான ராமனின் "பஜனை" பாடியதையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். சபர்மதி ஆசிரமத்தை மேற்பார்வை செய்துகொண்டிருந்த ஓரு பிரபல அம்மையாரிடம் ஒருவர், காந்தி இவ்வளவு எளிமையாக வாழ்கின்றாரே என்றபோது, அவர் சொன்னாராம் We only know, how much we are spending to keep him starving (இவரை இப்படி அரைப்பட்டினியாய் வைத்திருக்க, நாங்கள் எவ்வளவு செலவு செய்கிறோம் தெரியுமா?) என்று.


காந்தியாரின் "வேஷத்தை" இதைவிட யாரும் இப்படி நச்சென்று அம்பலப் படுத்த இயலாது. (அந்த அம்மையார் அம்பலப் படுத்துவதற்காக சொல்லவில்லை என்றாலும்!). எளிமை என்பது செலவில்லாமல் வாழ்வது. செலவு செய்து எளிமையாக வாழ்வது தான் நடிப்பென்பது! இந்த நடிப்பு காந்திக்கு தேவைப்பட்டது. தனது சேட்டு சமூகம் அகில இந்தியாவெங்கும் விரவி வாழ்கின்றனர். பார்ப்பனர்களும் அவ்வாறே! இவர்கள் உற்பத்தியோடு சம்பந்தமில்லாமல் வாழும் சுரண்டல் சமூகங்களே! ஒட்டுமொத்த இந்திய சமூகத்தை பணத்தால் சேட்டும், சூழ்ச்சியால் பார்ப்பனர்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். இந்தியா தேசிய இன அடிப்படையில் பிரியுமானால், இந்த இரு சமூகங்களுமே சிறுபான்மை சமூகங்களாக, அதிகாரமிழக்க நேரிடும். அதே நேரம் பல்தேசிய இந்தியாவை ஒரு குடைக்குள் கொண்டுவருவதும் அவ்வளவு எளிதான செயலல்ல. தனது மொழியைப் பேசாதவனை மக்கள் தங்களது தலைவனாக ஏற்கமாட்டார்கள். இந்தியாவின் அனைத்து மொழிகளையும் ஒரு மனிதனால் கற்றுத் தெளிய இயலாது.


மாறாக, ஒருவன் தியாகி, யோகி, அஹிம்சாவாதி என்று பலவாரெல்லாம் தன்னைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டால், மொழிகளைக் கடந்த ஒரு "தியாக" தேசியத்தைக் கட்டிவிடலாம். இதை உணர்ந்து, கேம்பிரிட்ஜிலே (மேற்குலகின் சூழ்ச்சிகளைப்)பயின்ற காந்தி, தன்னைப் பற்றிய பிம்பங்களை உருவாக்கிக் கொண்டார். அனைத்தையும் அறிந்த பார்ப்பனீயம் உறுதுணையாயிருந்தது.


வடநாட்டிலே ஏழைகளெல்லாம் பட்டும் பீதாம்பரமுமா உடுத்துகின்றனர்? அவர் மதுரையில் வந்து தனது உடைகளைக் களைந்து, பிச்சைக்கார வேடம் போட்டது, தனித்துவமான மொழியும், பண்பாடும் கொண்ட தமிழனை இந்தியாவோடு சேர்க்கும் குயுக்தி தான். இவருக்கு முன்னால், தமது புரட்சிவழி விடுதலை அடைந்த மக்களுக்கு "தேசிய இனத் தன்னுரிமையைக்" கொடுத்த லெனினை இவர் தனது வழிகாட்டியாக ஏற்கவில்லை! இது காந்தி தெரிந்தே செய்த பெருங்குற்றம்! வரலாற்று ரீதியாக ஆய்ந்தால், காந்தி தன்னை நம்பிய மாற்றின மக்களுக்கு துரோகம் செய்தார் என்றே உணரவைக்கிறது. தனது இன நலத்துக்காக, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, சிறுபான்மை தேசிய இனங்களை சிறைவைத்துச் சென்றார் என்பது தான் உண்மை.


தனது இன மக்களுக்கான பாதுகாப்பாக அவர் இந்தியாவை உருவாக்கிக் கொள்ளட்டும். அதேநேரம், இந்திய மண்னின் ஒவ்வொரு இன மக்களுக்கும், அவர்களது தாயகம், மொழி, பாண்பாடு போன்றவற்றைக் காக்க, இந்திய அரசமைப்பில் வழி கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். இங்குள்ள சிறுதேசியங்களின் உரிமையைக் காக்க குறைந்தபட்சம் ஒரு கூட்டாட்சி முறையையாவது அவர் திட்டமிட்டிருக்க வேண்டும்.


விடுதலைக்கு முன்பாகவே அவர் இந்தியாவிற்கான அரசியல் கோட்பாட்டை வகுத்திருக்க வேண்டும். தேசியப் பாதுகாப்புக் குழுவில் அனைத்து தேசிய இனங்களும் கண்டிப்பாக பங்குபெற வேண்டும், இந்திய வெளியுறவுத் துறையில் அனைத்து இனங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்றெல்லாம் இருந்திருந்தால், இன்று ஈழம் இந்த நிலையில் இருந்திருக்காது. இன்று பார்ப்பானும், மலையாளியும், சேட்டும் மட்டுமே நமது தலைவிதியை தீர்மானிப்பவராக இருக்கின்றனர்.


மேற்குலகெல்லாம் தேசிய இன அடிப்படையில் தேசங்களாக மலர்ந்த காலகட்டத்தில், உலகின் உயர்ந்ததாகக் கருதப்படும் பல்கலையில் பயின்ற அவர், தேசிய இனச் சில்கல்களை அறியாதவரா? ஒரு குடும்பத்தந்தை தனது இறுதியைக் கருதி உயில் எழுதுவார். ஒரு பொறுப்புள்ள தந்தை, தனக்குப் பின் சிக்கல் வராமல் இருக்க முன்கூட்டியே திட்டமிடுவார். அதுபோன்றதொரு தொலைநோக்குப் பார்வை இல்லாதவரா நமது "மஹாத்மா?". இந்த காந்தி ஒரு தேசத்தந்தையா? இப்படிப்பட்ட காந்தி தேசம் தான் ஈழ விடுதலையை நசுக்கியது. ஈழ ஆதரவுப் போராட்டங்களை நசுக்கியது.


"காந்தி தேசம் சொல்லுது, புத்த தேசம் கொல்லுது" என்று முழக்கம் செய்தார்கள். இந்தியா என்பது காந்தி தேசம் மட்டுமல்ல, இது புத்தனைப் பெற்றெடுத்த தேசமும் தான். இந்தியாவின் 1974ன் அனுகுண்டு வெடிப்புக்கு "Smile of Buddha" என்று பெயரிட்டிருந்தார்களாம். அது வெற்றிகரமாக வெடித்தவுடன் "Buddha Has Smiled" என்று தயிர்சாதப் பசு அப்துல் கலாம், இந்திரா அரசிற்குத் தெரியப் படுத்தினாராம்!


என்ன...வக்கிரம் பாருங்கள்!!! இவர்களின் ரகசிய குழூஉக்குறி மொழிக்கு புத்தன் தான் கிடைத்தானா? பௌத்தத்தைப் பற்றிய இவர்களிது மதிப்பீடு அவ்வளவே! உலகின் ஒவ்வொரு தத்துவ நாயகனின் வாழ்க்கைக்குப் பிறகு, அவரது தத்துவங்கள் கேவலமாக திரிக்கப்படுவது தான் வரலாறாய் இருக்கிறது. இந்தியாவில் கார்ல் மார்க்ஸ் படும் அவதி நாம் அறியாததா? புத்தனைப் பெற்ற ஆரிய தேசமும் (இந்தியா), புத்தனை ("வெற்று")அடையாளமாகப் பெற்ற ஆரிய தேசமும் (இலங்கை), ஒரே லட்சணத்தில் தான். அது தான் ஆரியத்தின் லட்சணம்!!!


தமிழத் தேசியத்தைக் கட்டியெழுப்பும் நாம் "மஹாத்மா காந்தி" என்ற பொய்ப்பிம்பத்தை உடைக்க வேண்டும். நமது கத்தியில்லாப் போரின் முக்கியக் கட்டம் அதுவாக இருக்கட்டும். காந்தியைப்பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தில் படிப்போம். அவரின் உண்மைத் தன்மைகளை தமிழ் மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவோம்.


- முனைவர் வே.பாண்டியன் -

Wednesday, October 14, 2009

யார் தேசத் துரோகிகள் பார்ப்பனரல்லாதாரா? பார்ப்பனர்களா?


“நாம் எந்த விதத்தில் தேசத்துரோகிகள்? இந்த தேசத்துக்கு அன்னிய ஆட்சியென்பதை அழைத்து வந்தவர்கள் யார்? அவர்களுக்கு இங்கு என்றும் நிலைபெறும்படியான ஆட்சிக்கு கட்டடம் கட்டிக் கொடுத்து அவற்றிற்கு தூண்களாய் நின்றவர்கள் யார்? சரித்திரங்களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள்.


நாம் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையிலோ, ஆதிதிராவிடர் என்கின்ற முறையிலோ, முஸ்லீம்கள் என்ற முறையிலோ இந்து தேசத்துக்குத் துரோகம் செய்தாக ஏதாவது ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்டட்டும். நாம் உடனே அதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளத் தயாராய் இருக்கிறோம். வெள்ளைக்காரர்களைத் தங்கள் தெய்வம் என்றும், விஷ்ணுவின் அம்சம் என்றும் அவர்களும் தாங்களும் ஒரே ஜாதி என்றும், அவர் முகச்சாயலும் தங்கள் முகச்சாயலும் ஒரே மாதிரி இருக்கிறது என்றும், அவர்களும் தாங்களும் ராசியாய் போய் இந்த நாட்டில் நிரந்தரமாக வாழவேண்டும் என்றும் நேற்று வரையிலும் சொல்லிக் கொண்டிருந்த கூட்டத்தார்கள் யார்? பார்ப்பனர்களா? அவர்கள் ஒழித்த மற்றவர்களா என்று யோசித்துப் பாருங்கள்.


இன்று கூட பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட விடுதலை கேட்டாலும் சரி, அதற்கு ஆக என்ன தியாகம் செய்ய தீர்மானித்தாலும் சரி, எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்கப்புறம் நடப்பதென்ன? அதில் எங்கள் பங்கு என்ன? என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு நாங்களும் கையொப்பம் போடுகிறோம்.


அதற்குச் சக பார்ப்பனர்கள் எத்தனை பேர் சாகிறார்களோ அதற்கு இரண்டு பங்கு உயிர் கொடுக்கின்றோம். பிறகு யார் தேசபக்தர்கள்? யார் கோழைகள்? யார் தேசத்தைக் காட்டிக் கொடுத்து கக்கூசில் போய் ஒளிந்து கொள்பவர்கள்? என்று பார்க்கலாம். அதை விட்டுவிட்டு உண்மைக் காரணம் என்ன என்பதை மறைத்துவிட்டு எங்களைக் கோழைகள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் சொல்லி விடுவதாலேயே எங்களை ஒழித்துவிடுவது என்று நினைத்தால் அது முடியுமா? என்று தான் கேட்கின்றேன்”.


சேலம் -பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு ”குடி அரசு” 14-06-1936

Tuesday, October 13, 2009

நேரலை நிகழ்ச்சி . சூப்பர் சாங்ஸ்

.
.
வயது வந்தவர்க்கு மட்டும். அதுவும் ஆண்களுக்கு மட்டும்.

ஹலோ .. ஹலோ மூன் ப்ளவர் சூப்பர் சாங்ஸ் நிகழ்ச்சியிலிருந்து பேசுறோம்ங்க .. ஹலோ

ஹலோ ..திவ்யா மேடம்களா ?

ஆமாங்க .. உங்க பேர் சொல்லுங்க.

எம் பேருங்களா மேடம் .. சுப்புரமணிங்க...

எங்கிருங்து பேசறிங்க ?

டெலிபோன் பூத்துல இருந்து மேடம்.

ஹஹஹா .. அதைக்கேட்கலீங்க சுப்புரமணி எந்த ஊருலிருந்து நீங்க பேசறீங்க ?

மொடக்குறிச்சில இருந்து பேசுறேன் மேடம்.

மொட்டக்குதிச்சியா ? எங்க இருக்கு ? எந்த மாவட்டம் ?

மொடக்குறிச்சிங்களா மேடம் .. ஈரோடு மாவட்டத்துல இருக்குங்க
.
சரி என்ன பாட்டு உங்களுக்கு வேணும் ?

ஏதாவது புதுப்படத்துல இருந்து புது சாங் போடுங்க மேடம்.

சரிங்க சுப்பிரமணி .. பாட்டை யார் யாருக்கு எல்லாம் டெடிகேட் பண்ணறீங்க ?

உங்களோட நிலா டீவிக்கும்,உங்களுக்கும் , உங்க ஆத்தாவுக்கும்.

ஓ! தேங்க் யூ சுப்பிரமணி.சரி எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

நானா மேடம் .. நான் அஞ்சாம் கிளாஸ் பாஸ் மேடம்.

சரி என்ன தொழில் பண்ணிட்டு இருக்கீங்க ?

செரைச்சுட்டு இருக்கேன் மேடம்.

புரியல எனக்கு .. என்ன தொழில் அது ?

பார்பர் மேடம் நானு.

ஓ! சரிங்க சுப்பிரமணி இந்த நிகழ்ச்சியில நேயர்களுக்கு ஒரு குட்டி ஜோக் சொல்லுங்களேன்.

சின்னதா சொன்னா போதுங்களா மேடம்.. ஒரு அப்பாவும் பொண்ணும் பாரின்ல இருந்து பிளைட்டில வந்து சென்னையில இறங்குனாங்க.வெளி நாட்டுல இருந்து ஏகப்பட்ட பொருட்களை வாங்கீட்டு வந்திருக்காங்க. எல்லாத்தையும் அங்கேயே புடுங்கீட்டு ஒரு சூட்கேசும் அதுல துணிமணிகளையும் மட்டும் போட்டு குடுத்து தாட்டி உட்டுட்டாங்க.பொண்ணும் அப்பாவும் வீடு வந்துட்டாங்க சோகமா !.பொண்ணு மட்டும் பாரின்ல வாங்கின டிவிடி பிளேயரை ஆன் பண்ணி பாட்டுக்கேட்டுச்சு. அப்பா மகள்கிட்ட எப்படிம்மா இதை மட்டும் அவிங்ககிட்ட காட்டாம மறைச்சு கொண்டுவந்தே ? அப்படீன்னூ கேட்டாரு. அதுக்கு பொண்ணு தன்னோட சக்கரையில மறைச்சு எடுத்துக்கொண்டுவந்தேனு சொன்னா, அதைக்கேட்ட அப்பா உங்க அம்மாவையும் கூட்டிட்டு போயிருந்தா 21 இன்ஞ் டிவியையே கொண்டுவந்திருப்பான்னார். அவ்ளோதானுங்க மேடம் ஜோக்கு .

இது ஜோக்கா ? ஆமா சக்கரைனு சொன்னிங்களே அது அஸ்க்காவா?சக்கரைனா என்ன சுப்பிரமணி ?.

அதுவா மேடம் .. நீங்க ஊரின் போறீங்களே அதுதான் !

(அதுக்கு அப்புறம் டீவிக்காரங்க ஆளைத்தேடி அலைஞ்சது இன்னொரு கதை)
நன்றி.... வா.மு.கோமு
.
.

Friday, October 9, 2009

குவார்ட்டர் + பிரியாணி+ கவர் =பத்திரிகையாளர்!

கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத் தூக்கி மனையில வைன்னானாம்...இது எங்க ஊரு பழமொழி.

அவனவன் திங்கறதுக்கு சோறு இல்லாம முகாம்ல சாகறான் கேரளக்காரன் முல்லைப் பெரியாறுல ஆப்பு வைக்குதுங்க. மீன் புடிக்கப் போறவன் கருவாடா திரும்பறான். வன்னி முகாம்ல என் அக்கா தங்கச்சிக சிங்கள பன்னிக் கூட்டத்துக்கிட்ட சிக்கி சின்னா பின்னமாகுது. தமிழ்நாட்டுல ஒரு கிலோ கத்திரிக்காய் 22 ரூவா விக்குது. அரிசி 42 ரூவா ஆயிடுச்சி. ஒரு ரூவா அரிசிய வாங்கித் தின்னா வேளைக்குப் பத்து ரூவாய்ய்க்கு வயித்து வலி மாத்திரை திங்க வேண்டியிருக்கு.

தினமலர் பரதேசிக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையாவே தெரியலையாம். எந்த சினிமா நடிகை ’தொழில்’ நடத்தறாங்கன்னு பட்டியல் போடுது. நடிகர் சங்கம் இதைக் கண்டிச்சு கூட்டம் போடுது. சின்னக் கலைவாணர்னு நம்மள மாதிரி நாலு இளிச்ச வாயங்க நம்பிக்கிட்டிருந்த தேவர் சாதி வெறி பிடிச்ச விவேக் அந்தக் கூட்டத்துல ’பத்திரிகைக்காரன்லாம் குவார்ட்டர் சாராயத்துக்கும் பிரியாணிக்கும் அலையறவனுக...பத்திரைகையில எழுதினவனோட அக்கா ஆத்தா போட்டோ குடுங்க...கிராபிக்ஸ் பண்ணி அவளுகளும் தே....ன்னு விளம்பரம் கொடுப்போம்’ ....இப்பிடியெல்லாம் காமெடி பண்ணியிருக்கு.

இப்ப பத்திரிக்கையாளரகள் (என கௌரவமாக தங்களை அழைத்துக்கொள்ளும் சதை புரோக்கர்கள்) ஆஹா...எங்க இனத்துக்குக் கேவலம்னு கிளம்பிட்டாய்ங்க.

நான் தெரியாமத்தான் கேக்கறேன்.விவேக் சொன்ன, குவார்ட்டர் + பிரியாணி விசயத்துல என்ன தவறு? கருத்து சொல்ற அளவுக்கு விவேக் பெரிய பருப்பா இல்லாம இருக்கலாம். ஆனா...இந்த சதை புரோக்கர்கள் குவார்ட்டர் + பிரியாணி கொடுத்தால் ‘ஐயோ...யார்கிட்ட என்ன கொடுக்கறீங்க...? நாங்கள்லாம் சுத்த நேர்மைக்குப் பொறந்தவங்க’ன்னு மறுக்கிற ஜாதியா?

இப்பல்லாம் ப்ரஸ் மீட் வச்சாலே டாஸ்மாக்குக்கும் தலப்பாக்கட்டு கடைக்கும் மொய் வச்சே தீர வேண்டியிருக்கே. இது போதாதுன்னு நம்ம துரைங்க கிளம்பும்போது சும்மா ஜெண்டிலா ‘ம்ம்ம்...பாத்துக்கலாம்...மேட்டர் வந்துரும்...அப்பறம்...அவ்ளோதானா?’ன்னு காசு புடுங்க பேசுற பேச்சு இருக்கே...யப்பா...அந்த நிமிசத்துலதான் சரஸ்வதி தேவியும் தர்ம தேவனும் நமக்கு தரிசனம் தருவாங்க.

நடிகைங்க உடம்பக் காட்டி காசு பாக்கராங்கதான். யார் இல்லன்னது? ஆனா அதுக்குப் பேரு விபசாரம்னா...அட ங்கொய்யால...நடிகைங்க தொப்புளையும் தொடையையும் கலர் கலரா போட்டு காசு சம்பாதிக்கிறியே...உன் தொழிலுக்கு என்னா பேரு...?
தலைல இருந்து கால் வரைக்கும் வாயாலவே பாட்டுலவே நிர்வாணமா எழுதி சம்பாரிக்கிறானே அந்த பொழப்புக்கு பேரு என்ன ?

மீடியா...!ப்ரஸ்...!நான்காம் தூண்!-நல்லா வாயில வருது.

இதுல ஒரு பெரிய வித்தியசம் இருக்கு. நடிகைங்க தங்களோட ஒடம்பக் காட்டி...மானம் மரியாதய விட்டுக் காசு சேக்குதுங்க...! இது நியாயம் இல்லதான். ஆனாலும் அவங்க ஒடம்பு அவங்க காட்ட்றாங்கன்னு ஒரு மொக்கையாவாவது நியாம் பேசிக்கலாம்.

ஆனா...இந்த சதை புரோக்கருங்க...அடுத்த பொம்பளைங்க ஒடம்பக் காட்டற படத்த ஓசியில வாங்கிப் போட்டு...பொழைக்குதுங்க. இது எப்படி இருக்கு?அதாவது...நடிகைங்க விபசாரம் செய்யறாங்கன்னா...பத்திரிகைக்காரதுங்கதான் அந்த நடிகைங்களுக்கு மாமா வேலை பாக்குதுங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒடம்ப விக்கற பொம்பளைங்களை விட...அந்த ஒடம்புக்கு புரோக்கர் வேலை பாக்கற மாமாக்கள்தான் கேவலமான பிறவிங்க.

ஆனா...இந்த புரோக்கருங்களுக்குத்தான் சமூகத்துல பெரிய மரியாத.
சரக்கடிச்சிட்டு பைக் ஓட்டும்போது போலீஸ் புடிச்சா...’சார் நான் ப்ரஸ் சார்...என்ன என்னையே புடிக்கிறீங்க...?’ன்னு கேக்கறது.
ரயில்ல டிக்கெட் பதிவு செய்யப் போனா...’சார்...நான் மீடியா பர்சன்...’ன்னு பந்தா பண்ணி சீட்டு வாங்கறது.

நாலு நடிகைங்க படங்களை போட்டு...’இவங்கெல்லாம் விபசாரம் பண்றாங்கன்னு’ செய்தி போட்டதுக்காக...தினமலர் பரதேசி மேல நடிகர் சங்கம் புகார் கொடுத்துச்சு. நியாயமா என்ன செஞ்சிருக்கணும்?
அவதூறு பரப்பினதுக்காக தினமலர் பொறுப்பாசிரியர் ரமேக்ஷ்சைத் தூக்கி உள்ளே போட்டிருக்கணும். ஆனா...லெனின்னு ஒரு உதவி ஆசிரியரைக் கைது பண்ணிச்சி நம்ம போலீசு.

போறாளாம் பொன்னாத்தா...எம்மேல வந்து ஏறாத்தாங்கற கதையா...இந்த விசயத்துல இரு உதவி ஆசிரியர் என்ன செய்ய முடியும்?சட்டப்படியும் நியாயப்படியும் பொறுப்பாசிரியரைத்தானே கைது பண்ணணும்?ரமேக்ஷ் மேல கை வைக்கக் கருணாநிதிக்கு அவ்ளோ அச்சமா?

சரி...லெனினைக் கைது செஞ்சாச்சு.

பத்திரிகையாளர்கள்னு சொல்லிக்கிட்டிருக்கிற பல இதுகள்...கடந்த ரெண்டு நாளா தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடத்திக்கிட்டிருக்குக.லெனினைக் கைது செஞ்சது தப்பாம். அப்ப...? அவனுக எழுதினது மட்டும் ரைட்டா...?கேட்டா...இதெல்லாம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கையாம்!அரசின் அடக்குமுறையாம்!

ஆஹா...ஆஹா...இதுகளுக்குத்தான் கருத்துச் சுதந்திரத்து மேல என்னா அக்கறை...?
மரியாத கெட்ட பத்திரிகை உலக மாமாக்களே...

திசைநாயகம்னு ஒரு பத்திரிகையாளர் பேரைக் கேள்விப்பட்டிருக்கீகளா..?சிங்கள அரசின் போர் வெறிக் கொள்கையைக் கண்டிச்சு எழுதினதுக்காக...ராஜபக்சேவால கைது செய்யப்பட்டு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிங்கம் போல் உள்ளே இருப்பவர்!

அவர் பேசினது கருத்து!அதுக்கு சுதந்திரம் இல்லங்கறது அடக்குமுறை!இன்னும் சொல்லப் போனா...அவர் மனுசன்!

நீங்கள்லாம் ஒட்டுண்னிங்க...! ஆட்சியில இருக்கறவங்க...அதிகாரத்துல இருக்கரவங்க...போலீசுக்காரங்க கூட சேர்ந்துக்கிட்டு பீறாய்ஞ்சு...காசு சேத்துக்கிட்டு ஒடம்பு வளர்க்குற ஒட்டுண்ணிங்க!
நீங்க மொதல்ல அரசாங்கத்தை எதிர்க்கத் துப்பு இல்லாதவங்க.

அட...அவ்வளவு ஏன்....?
எந்தப் பத்திரிகை ஆபீஸ்ல பத்திரிகையாளருங்க ‘ஒண்ணா’ சேர்ந்து சங்கம் வைச்சிருகீங்க?கட்ட வண்டி இழுக்கறவ தொழிலாளி, ஆட்டோ ஓட்டுறவங்க, மூட்ட தூக்கறவங்க கூட சங்கம் வச்சிதான் போராடறாங்க.நீங்க பேப்பர் கிழிய குமுறிக் குமுறி எழுதறீங்களே...உங்களுக்குன்னு ஒரு ஆபீசுல கூட சங்கம் வச்சுக்க வக்கில்லையே...ஏன்னு சொல்லவா?

நீங்கல்லாம் கடைஞ்செடுத்த சுயநலமிங்க...எல்லாத்துக்கும் மேல...நீங்கள்லாம் முதுகெலும்பு இல்லாத கோழைங்க! உங்களால பத்துப் பேரோட ஒத்துப் போக முடியாது. உங்களால உங்க முதலாளிங்ககிட்ட ஒரே ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடியாது!

அட...விபசாரம் பண்ற பொம்பளைங்க கூட ’பாலியல் தொழிலாளிகள்’ பேர் போட்டு சங்கம் வச்சிருக்காங்க...!
ஆனா...நீங்க...ஊர் ஒலகத்துல இருக்கிற உரிமைப் பிரச்சினைங்களையெல்லாம் எழுதுவீங்க. உங்க ஆபீசுல அடிமையா பம்முவீங்க!

இந்த லட்சணத்துல இருந்துக்கிட்டு ’பத்திரிகையாளர்கள் சங்கம்’னு ஒண்ணை ஆபீசுக்கு வெளில வச்சிருக்கீங்களே. யாரை ஏமாத்த?
ஏன்யா...ஒரு மன்னார் அன் கம்பெனியில வேலை பாக்க்குறவன் மன்னார் அன் கம்பெனி யூனியன்ல இருப்பானா...? இல்ல...தனியாப் போயி ’பல கம்பெனி பரதேசிகள் சங்கம்’னு ஒண்ணு ஆரம்பிச்சு அதுல இருப்பானா...?
பதில் சொல்லுங்க ’உரிமைக் காவலர்களே..’
இந்த நாட்டுல,,,போலீசு, பத்திரிகைக்காரதுக...இந்த ரெண்டு பேருக்கும் சங்கம் வச்சிக்கிற உரிமை இல்ல.

போலீசும் நீங்களும் சம்பாதிக்கிற விதமும் ஒண்ணுதானே!
சங்கத்தைப் பத்தி ஏன் கேக்கறேன்னா...உங்களுக்குன்னு ஒரு சங்கம் இருந்தா...லெனின் கைது செய்யப்பட்ட அடுத்த நிமிசமே...தினமலர் ஆபீசுல வேலை நிறுத்தம் செஞ்சி...’பொறுப்பாசிரியர் செஞ்ச தப்புக்கு...உதவி ஆசிரியர் பலியாகணுமா?ன்னு கோசம் போட்டிருக்கலாமே!
அதானே முறை?

அட...எக்ஸ்போர்ட் கம்பெனியில பனியன் நூல் பிரிஞ்சிருக்குன்னு கட்டரை சஸ்பெண்ட் பண்ணினா...தொழிலாளிங்கல்லாம் வாசலுக்குப் போயி...’சூப்பர்வைசர் என்ன புடுங்க்கிட்டா இருந்தான்...அவனை சஸ்பெண்ட் பண்ணுடா’ன்னு இந்நேரம் ஸ்ட்ரைக் பண்ணியிருப்பாங்க!

ஆனா...உங்களுக்கு அந்த துப்பில்லை! ஏன்னா நீங்கள்லாம் தினமும் வீட்லேருந்து கிளம்பும்போதே மானத்தை கக்கூஸ்லயும் மரியாதைய செருப்பு ஸ்டாண்டிலயும் வச்சுட்டுத்தான் ஆபீஸ் போறீங்க!

ஆக மொத்ததுல...சினிமா, அரசியல், கட்டப் பஞ்சாயத்து...ன்னு மாமா வேலை பார்த்துப் பொழைக்கற ஜென்மமா வாழற உங்களுக்கு...எந்த நடிகை என்ன ‘தொழில்’ செஞ்சா என்னா...?இதுதான் கேள்வி.
இதோட சில கொசுறுக் கேள்விங்களும் இருக்கு.

1. எந்தெந்த நடிகருங்க (ஹீரோக்கள்) விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு...இதே மாதிரி போட்டோவோட செய்தி போட முடியுமா?
2. எந்தெந்த தலைவருங்க விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு போட்டோவோட செய்தி போட முடியுமா?
3. எந்தெந்த பத்திரிகை ‘அதிபர்கள்’ விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு போட்டோவோட செய்தி போட முடியுமா?இந்தக் கேள்விக்கெல்லாம் உங்களால பதில் சொல்ல முடியாதுன்னு எனக்குத் தெரியும்.

கடைசியா...இந்தக் கேள்வியையும் கேட்டுடறேன்.
மரியா மக்தலீனா..ங்கற பொண்ணு விபசாரம் செய்யுதுன்னு ஊரே திரண்டு அடிச்சப்ப...ஏசு சொன்ன வாசகம் இது:

‘உங்களில் எவரொருவர் கள்ளமில்லாதவரோ...அவர் இந்தப் பெண் மீது கல் எறியலாம்!’

இப்ப சொல்லுங்க...உங்களில் எவர் கள்ளமில்லாதவர்?

நன்றி :- உளறுவாயன் aka சேட்டைக்காரன் aka பட்டிக்காட்டான்

Thursday, October 1, 2009

கலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக?


சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற காலத்தில் அதற்குச் சரியான சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் நிழலில் போய் மறைந்து கொண்டு, "சுயமரியாதை இயக்கத்தார் பழைய கலைகளை நாசம் செய்கின்றார்கள்' என்று பழி சுமத்துவதன் மூலமே அவைகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.

கோயில்களைக் குற்றம் சொல்லி, அவற்றில் உள்ள விக்ரகங்களின் பாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த பாசத்திற்காக இவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்து கொண்டு "அவைகள் அவசியம் இருக்க வேண்டும்' என்றும் "அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்' என்றும், "சாமி பக்திக்காகத் தாங்கள் கோயில்களைக் காப்பாற்றுவதில்லை' என்றும் "ஓவியக் கலை அறிவுக்காகக் கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்' என்றும் சொல்லுகின்றார்கள்.

நமது பண்டிதர்களின் ஓவியக் கலையும், காவியக் கலையும் போகின்ற போக்கைப் பார்த்தால், அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக் கலை எவ்வளவில் இருக்கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும். மக்களுக்கு ஓவியம் வேண்டுமானால், இந்தியக் கோயில் ஓவியமும் இந்துக் கடவுள்கள் ஓவியமும் கடுகளவு அறிவுள்ள மனிதனும் ஒப்ப முடியாத, மதிக்க முடியாத ஓவியங்கள் என்பதோடு, அவை மனிதத் தன்மையும் பகுத்தறிவும் உள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஓவியம் என்று சொல்ல முடியாததான நிலையில் இருப்பதையும் காணலாம்.

எப்படியெனில், இந்திய ஓவியம் என்பது இந்து மத சம்பந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அரிது என்றே சொல்ல வேண்டும். அது மாத்திரமல்லாமல், அவைகளில் இயற்கைக்கு முரண்பட்டவையே 100க்கு 99 ஓவியங்கள் என்றும் சொல்ல வேண்டும்.

சாதாரணமாக மனிதனும் மிருகமும் புணர்வதும், மிருக முகத்துடன் மனிதன் இருப்பதும், மிருகங்கள் பறப்பதும், மிருகங்களின் மீது அளவுக்கு மீறின மக்கள் இருப்பதும், பட்சிகளின் மீது மக்கள் இருப்பதும், மக்கள் பறப்பதும்; 4 கைகளும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து, ஆறு முகங்களும்; சிறிய உருவத்தின் மீது பெரிய உருவங்கள் இருப்பதும், தாமரைப் பூவின் மீது ஒரு பெண் நிற்பதும், இன்னமும் இதைவிட எத்தனையோ பொருத்தமற்ற, சாத்தியமற்றதான உருவங்களே இன்று ஓவியமாகக் கருதப்படுகின்றன.

சாதாரணமாக, மேல் நாட்டு ஓவியங்களைப் பார்த்தால் இது ஓவியமா, உண்மைத் தோற்றமா என்று மருளும்படியாகவும், அவைகளுடைய சாயல் முதலியவைகளிலிருந்தே குணம், காலம், இடம், நடவடிக்கை முதலியவைகள் தெரிந்து கொள்ளும்படியாகவும், அவைகள் பிரத்தியட்சமாக இயங்கிக் கொண்டிருப்பது போலவும், எவ்வளவோ அருமையான காரியங்கள் வெகு எளிதில் மிகச் சாதாரண தன்மையில் அறியும்படியாகவும், நாமே பார்த்த மாத்திரத்தில் சுலபத்தில் பழகிக் கொள்ளும்படியாகவும் இருப்பதைக் காணலாம்.

ஆகவே, அப்படிப்பட்ட அருமையான ஓவியங்களையும், சித்திரங்களையும், புதுமைகளையும் விட்டு விட்டு அநாகரிகமும், காட்டுமிராண்டித்தனமுமான, மிருகப் பிராயமும் கொண்டதான உருவங்களை வைத்துக் கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவைகளுக்குப் பணம், காசு, நேரம் ஆகியவை செலவு செய்து, கீழே விழுந்து அவைகளிடம் பக்தியையும் காட்டிக் கொண்டு, "ஓவியக் கலைக்காக அக்கலையைக் காப்பாற்றுவதற்காக அவைகளிடம் இப்படிச் செய்கின்றோம்' என்றால், இது பகுத்தறிவும் யோக்கியக் குணமும் அடைந்த மனிதர் என்பவர்களின் செய்கையாகுமா பேச்சாகுமா என்று கேட்கின்றோம்.

இந்த இடத்தில் நாம் முக்கியமாய்க் குறிப்பிடுவது என்னவென்றால், நமது பண்டிதர்கள் என்பவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும், புத்தக வியாபாரத்திற்கும், வாழ்க்கை நிலைமைக்கும் இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான காவியங்களும் ஓவியங்களுமல்லாமல் வேறுவகை ஒன்றில்லாமல் போனதால், அவர்கள் இத்தனை மோசமான பொய்யையும், புரட்டையும் வஞ்சகத்தையும் சொல்லிக் கொண்டு, இவைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

ஆகவே, இம்மாதிரி பாசமும் அநாகரிகமுமான காவியமும், ஓவியமும் அழிக்கப்பட வேண்டுமானால், முதலாவதாக நமது பண்டிதர்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு வாழ்க்கை நலத்திற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டியது, பகுத்தறிவையும் நாகரிகத்தையும் விரும்பும் பொதுமக்கள் கடமையேயாகும்.

'குடி அரசு' பெரியார் 26.4.1931

தமிழைப் புதுமொழியாக்க முயல வேண்டும் - பெரியார்


எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம்மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துகளைப் பொறுத்துத்தான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துகளைக் கொண்டுதான் பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட, அறிவைக்கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு மொழியின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் மற்றொரு காரணம் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கு எவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாகக் கற்றுக் கொள்ளப்படுவதற்கு, எழுத்துகள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி ‘தமிழ்'தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. இத்தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது, ‘தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது' என்று கிளர்ச்சி செய்தேன்.

அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின் எதற்காக?

தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற எம்மொழியையும் விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் - மற்ற வேற்று மொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் நன்மையடைவோம் எ‎ன்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்பு கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள் கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடையே புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்.

வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல.

நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுவோம். "ஜாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தை இல்லையே! ஆதலால், நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும், இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதிபேத உணர்ச்சி அற்றுப்போகுமா, இல்லையா? கூறுங்களேன்.

இதேபோல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம்; சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள் வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்.தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பால் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. ‏இந்நிலைக்கு முக்கிய காரணம், மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழ், சைவமொழி ஆக்கப்பட்டதால்தான் சைவத்திற்காக வேண்டி வடமொழியும், வடமொழிக் கலைகளும் அதிகமாக தமிழ் நாட்டில் புகத் தொடங்கின.

தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று, ஒரு நியூட்டன் தோன்றமுடியவில்லை; ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க, சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமது மேன்மைக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றதும் நம் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டக்கூடியதும், நம் இழிவைப் போக்கக் கூடியதுமான எம்மொழியிலிருந்தும் நம் மொழிக்கு ஆக்கம் தரக்கூடியதும், அவசியமானதும் ஆகிய சொற்களை எடுத்துக் கொள்ளலாம். எம்மொழித் தொடர்பிருந்தாலும் பரவாயில்லை. நமக்கு வடமொழித் தொடர்பு மட்டும் கூடவே கூடாது. தமிழ் ஒன்றுதான் இன்றுவரைக்கும் வடமொழிக் கலப்பை ஓரளவுக்காவது எதிர்த்து வந்திருக்கிறது.
வேற்றுமொழிக் கலப்பின்றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ் பெற்றிருக்கிறதென்று மேனாட்டு மொழி வல்லுனர்களே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

'மொழி - எழுத்து' நூலிலிருந்து

மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள்


பொருளா சிந்தனையா என்ற கேள்வி தத்துவ துறையின் மிக அடிப்படையான பிரச்சினையாகும். அதாவது பொருளுக்கும் சிந்தனைக்கும் உள்ள உறவுதான் இன்றுவரை முதன்மையான விசயமாக இருக்கின்றது. வாழ்நிலை சிந்தனையைத் தீர்மானிக்கின்றதா? சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கின்றதா? இந்த கேள்விகளுக்கு விடைத் தேடமுற்படும் போதுதான் சிந்தனையின் ஒரு பகுதியான கலை இலக்கிய துறைக்கான கோட்பாடுகள் உருவாகின்றன.

வாழ்நிலை சிந்தனையைத் தீர்மானிக்கின்றது. சிந்தனை வாழ்நிலையைப் பிரதிலிபலிக்கின்றது என்பது மார்க்சியக் கோட்பாடு ஆகும்.இந்தத் தத்துவ‌ கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கீழ்கண்ட இலக்கிய கோட்பாடுகள் தோன்றின.

1. அடித்தள மேற்கட்டுமான உறவு

2. பிரதிபலிப்புக் கோட்பாடு

3. சோசலிச எதார்த்தவாதம்

அடித்தள மேற்கட்டுமான உறவுஅடித்தளம் என்பது சமூக, பொருளாதார வாழ்வைக் குறிக்கும். மேற்கட்டுமானம் என்பது அரசியல், கலை இலக்கியம், தத்துவம் போன்ற சிந்தனை வாழ்வைக் குறிக்கும். மேற்கண்ட மார்க்சிய தத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகும்போது அடிக்கட்டுமானம்தான் மேற்கட்டுமானத்தைத் தீர்மானிக்கின்றது என்ற மார்க்சிய இலக்கியக் கோட்பாடு உருவானது. ஆக பொருளாதார வாழ்வுதான் கலை இலக்கியம் போன்ற சிந்தனை வாழ்வைத் தீர்மானிக்கின்றது என்ற முடிவு எட்டப்படுகின்றது.இது ஒரு முழுமையான கோட்பாடாக புரிந்துக்கொள்ளக் கூடாது என‌ மார்க்சும் எங்கெல்சும் அறிவுறுத்தியுள்ளனர். அதாவது சமுதாய யதார்த்தம்தான் கலை இலக்கியப் போக்கைத் தீர்மானிக்கும் என்ற ஒற்றைப் பரிணாமத்தில் புரிந்துக் கொள்வது எந்திர தனமான புரிதலுக்கு இட்டுச் செல்லும்.

கலை இலக்கியத்திற்கும் சமுதாய யதார்த்த‌திற்கும் உள்ள உறவை இயங்கியல் ரீதியில் புரிந்துக் கொள்ளப்படவேண்டும். சமுதாய யதார்த்தம்தான் கலை இலக்கியப் போக்கைத் தீர்மானிக்கும் என்று கராறான பார்வையில் புரிந்துக் கொண்டால் சிந்தனையின் பாத்திரத்தைக் குறைத்து மதிப்பிடும் தவறிழைக்க நேரிடும். சமுதாய யதார்த்தத்தின் மீதான கலை இலக்கியத்தின் செல்வாக்கு குறிப்பிடத் தக்கதாகும். சில சமயங்களில் சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கின்ற பாத்திரத்தை வகிக்கும் என்பதை மறுத்தலாகாது.இதைத்தான் ஏங்கல்சு கீழ்கண்டவாறு கூறினார்."வரலாற்று பொருள்முதல் வாதக் கருத்தின்படி, வரலாற்றிலே இறுதியான நிர்ணயிக்கும் அம்சம் யதார்த்த வாழ்க்கையின் உற்பத்தியும் பெருக்கமும்தான். இதற்கு மேல் நானோ அல்லது மார்க்சோ என்றும் உறுதி கூறியதில்லை. எனவே பொருளாதார அம்சம் மட்டுமே நிர்ணயிக்கும் அம்சமென எவரேனும் இதனைத் திரித்து கூறுவாரேயானால் அவர் அந்தச் சித்தாந்தத்தையே ஒரு அர்த்தமற்ற அபத்தமான சொல்லாட்சியாக மாற்றி விடுகிறார்

"இது குறித்து மாவோவின் கருத்தைப் பார்ப்போம். "சில நிலைமைகளில் உற்பத்தி உறவுகள், சித்தாந்தம், மேற்கட்டுமானம் ஆகியன தங்கள் தரப்பில் பிரதானமான, நிர்ணயகரமான பங்கை ஆற்றுகின்றன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்"பொருளாதார வாழ்வு எவ்வாறு கலை இலக்கியம் போன்ற சிந்தனை வாழ்வைத் தீர்மானிக்கின்றதோ அதே போன்று சில நிலைமைகளில் கலை இலக்கிய சிந்தனை, பொருளாதார வாழ்வைத் தீர்மானிப்பதாகவும் இருக்கின்றது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.பிரதிபலித்தல் கோட்பாடுசமுதாயத்தில் நிலவுகின்ற வர்க்கமுரண்பாடுகளையும் போராட்டங்களையும் கலை இலக்கியத்தில் பிரதிபலிக்கின்றது என்ற கோட்பாடு மார்க்சியத்தில் பிரதிபலித்தல் கோட்பாடு என்றழைக்க‌ப்படுகின்றது.

வர்க்க உணர்வுகளை கலைஇலக்கியம் பிரதிபலிப்பதைக் காணலாம். சமூக நிலைமைகளைப் பிரதிபலிப்பதோடு தனது பணி முடிந்துவிடவில்லை. மாறாக, சமூகத்தை மாற்றி அமைக்கும் நோக்கிலும் மார்க்சிய இலக்கிய கோட்பாடு செயலாற்ற இயலும் என்று பிரதிபலித்தல் கோட்பாடு வலியுறுத்தப்படுகின்றது.

பிரதிபலித்தல் கோட்பாடு இரு வகைப்படும்.

1), இருப்பதை அப்படியே பிரதிபலித்தல்;

2), இருப்பதற்கு எதிர்வினை ஆற்றுதல்.

இவ்வாறு பிரதிபலிப்பு என்பதை இருவகைப் பொருள்களையும் உள்ளடக்கி லெனின் பயன்படுத்துகின்றார்.சோசலிச எதார்த்தவாதம்யதார்த்தவாதம் என்பது உள்ளதை உள்ளவாறே சொல்வதாகும். விமரிசன யதார்த்தவாதம் என்பது முதலாளித்துவச் சூழலை விமர்சனம் செய்வது, முதலாளித்துவ சமுதாய முரண்களை வெளிப்படுத்துவது ஆகும். சோசலிச யதார்த்தவாதம் என்பது மனிதன் இன்று எப்படி இருக்கிறான் என்பதை மட்டும் அல்ல், நாளை எப்படி இருப்பான், இருக்க வேண்டும் என்பதையும் சித்தரிப்பதாக அமையவேண்டும் என்று விளக்குகின்றது.

கலை இலக்கியம் என்பது சமுதாய மாற்றத்திற்கு பயன்பட வேண்டும் என்பதே சோசலிச எதார்த்தவாதத்தின் நோக்கம் ஆகும். இக்கோட்பாட்டில் அரசியல் முதன்மை இடம் வகிக்கிறது. ஆகவே இந்த வாதம், கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது.சோசலிச யதார்த்தவாதத்தின் அழகியல் அடிப்படைகளைக் காண்போம்.

1. பொதுவுடைமைத் தத்துவத்தில் ஈடுபாடு

2. மக்களுக்குத் தொண்டு செய்தல்

3. சுரண்டப்படும் வர்க்கத்திற்கு சார்பாக நிற்றல்

4.தொழிலாளர் போராட்டங்களில் நெருங்கிய தொடர்பு வைத்தல்

5. சோசலிச மனித நேயம்

6. உலகப் பார்வை

7.சமுதாயம் முன்னேக்கித்தான் வளரும் என்ற நம்பிக்கை

8. உருவ வாதம், அகநோக்கு பழமைவாதம் ஆகியனவற்றுக்கு எதிர்ப்பு.

நன்றி - philsophydebate

Friday, September 4, 2009

அமைப்பியல் வாதம்


(அமைப்பியல் - பின்-அமைப்பியல்)

இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியைத் தாண்டியும் மார்க்சியக் கொள்கைகள் அறிவியல், சமூகவியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் புத்தொளிப் பாய்ச்சிப் புதிய தெளிவையும் புரித¬லையும் அளித்து வந்தன. அறுபதுகளுக்குப் பின்னர் அமைப்பியல், பின்-அமைப்பியல் போன்ற தத்துவங்கள் தோன்றி வளர்ந்தன.

மார்க்சியத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்த்து விட்டதாக அமைப்பியல் உரிமைப் பாராட்டிக் கொள்கின்றது. சமூகத்தின் மேற்கட்டுமானம், பொருளாதார அடித்தளமானத்தைப் பிரதிபலிக்கின்றது என்பது மார்க்சியக் கோட்பாடு ஆகும். இதிலிருந்து மேற்கட்டுமானமாகிய இலக்கியம் போன்றவை தனித்து இயங்கவியலாது என்பது பெறப்படுகின்றது. ஆனால் கலை, பண்பாடு போன்ற மேற்கட்டுமானம் பொருளாதார உறவிலிருந்து தனித்து இயங்க வல்லது என்று அல்தூசர் என்ற அமைப்பியலறிஞர் கூறுகின்றார்.

அதுமட்டுமின்றி அடித்தளம் மேற்கட்டுமானம் என்பவற்றில் எந்த ஒன்றும் மையம் அல்லது குவிமையம் அல்லது சாராம்சம் எதையும் பெறமுடியாது என்று அவர் கூறுகின்றார். இதன் மூலம் அடித்தளம் மேற்கட்டுமானம் ஆகியவற்றை சாராம்சப்படுத்தும் மார்க்சியப் பார்வையை விமரிசனத்துக்குட் படுத்துகின்றார்.

ஒரு பொருளில் பல உறுப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அவை பிரிக்க இயாலாதவாறு இணைந்திருக்கின்றன. ஒன்று மற்றொன்றை பாதித்து மாற்றி வளர்ப்பதாக உள்ளது. இந்த உறுப்புக்கள் முழுமை ஒன்றில் உயிர்ப்புடன் ஒன்றிணைந்து இருக்கின்றன. இந்த அமைப்பு அப்பொருளின் கட்டுமானத்தைக் குறிக்கின்றது. இதுதான் அமைப்பு குறித்து அமைப்பியல் தரும் விளக்கம் ஆகும்.

அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அந்த அமைப்பினைப் படைப்பு எனக் கொள்ளாமல் பனுவல் என அது கொள்கிறது. பனுவலுக்குள்ளேயே ஒரு கலை வடிவத்தின் அல்லது இலக்கியத்தின் அழகும் பொருளும் எல்லாமும் இருக்கின்றன; வெளியே அல்ல என்று அமைப்பியல் கூறுகின்றது.
படைப்பாளி மற்றும் படைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் வழங்காமல் வாசகனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது அமைப்பியல். இது அமைப்பியலின் ஒரு முக்கிய கோட்பாடாகும்.

பனுவல் என்பது இயங்குதல் தன்மை கொண்ட பல பகுதிகள் கொண்டது. அந்தப் பகிதிகள் ஒரு முழுமையின் பகுதிகளே யன்றித் தனிமை யானவை அல்ல என்றும் அத்தகைய பகுதிகளை வாசகன் எவ்வாறு புரிந்து கொள்கிறான்; வாசகனுனுடைய புரிதல் தன்மைகள் பனுவலின் விசேடத் தன்மைகள் எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்றும் அமைப்பியல் விளக்குகின்றது.

அமைப்பின் ஒரு பகுதியை அல்லது ஓர் உறுப்பை ஆராய்கின்ற போது அந்த ஒழுங்கிணைவுக்குள்ள அதன் உறவோடு ஆராய வேண்டும் என்பதை அமைப்பியல் வலியுறுத்துகின்றது.
இது தவிர, கதைப்பின்னல், இருநிலை எதிர்வு ஆகியன அமைப்பியலின் இதர சிறப்பான அம்சங்களாகும்.

அதாவது கதை அல்லது நிகழ்ச்சி வருணனையில் நிகழ்வுகளின் பண்புகள் முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வகையான பண்புகளை அடிப்படையாகக் கொண்டுதான் அமைப்பு கட்டமைக்கப்படுகின்றது என்று லெவி ஸ்ட்ராஸ் என்ற அமைப்பியல் அறிஞர் கூறுகின்றார். அத்தகைய பண்புகளின் எதிர்நிலையான அம்சங்கள்தான் அமைப்பு கட்டமைக்கப்படுவதற்கு காரணமாக அமைகின்றன. உதாரண்மாக தொல் மானுடவியல் அடிப்படையில் பண்பு மற்றும் பண்பாடு என்பது ஒரு இருநிலை எதிர்வு ஆகும். இதை விவரித்தவர் லெவி ஸ்ட்ராஸ் ஆவர்.

மேலும், கதைப்பின்னல் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் கதைத்தன்மை உடையனவாக எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

பனுவலுக்கு வெளியே அழகும் செய்தியும் இல்லை; அதற்கு உள்ளேதான் இருக்கின்றது என்று அமைப்பியல் கூறுகின்றது; அதேபோல் ஒரு முறை வாசித்தவுடன் கிடைக்கிற பொருள் அதன் பொருள் அல்ல; மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது பொருள்களின் பல உண்மைகள் புலப்படுகின்றன என்றும் அந்தப் பனுவல் பல வாசிப்புத் தளங்களைக் கொண்டது என்றும் அந்த வாசிப்புத் தளங்கள் இன்னொரு இணை பனுவலைக் கட்டமைக்கின்றன என்றும் பனுவலின் உண்மை அது கட்டவிழ்க்கப்படுகிற போது வெளிப்படுகின்றது என்றும் பின்-அமைப்பியல் கூறுகின்றது.

அமைப்பியலின் வளர்ச்சியாகவும் அதன் பல்வேறு அம்சங்களை மறுப்பதாகவும் பின்-அமைப்பியல் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. இதற்கு வித்திட்டவர்கள் ரோலந் பார்த், டெர்ரிடா, மிக்கேல் பூக்கோ, லக்கான், ஜுலியஸ் கிறிஸ்தோவா மற்றும் பால் டிவேர் ஆகியோர் ஆவர்.

மார்க்சிய திறனாய்வுக்கு படைப்பு, படைப்பாளி, சமுகப் படிமாணங்கள் முக்கியமானவை ஆகும். அமைப்பியல் பனுவல், வாசகன் ஆகியவற்றை முதன்மைப் படுத்தியது. படைப்பிலிருந்து நகர்ந்து அதன் முக்கியத்துவம் பனுவல் எனும் கட்டுக்கோப்பான அமைப்பை என்று போலன் பார்த் என்ற பிரபல பிரஞ்சுத் திறனாய்வாளர் கூறுவார்.

இலக்கியம் என்பது வரையறைக்களுக்கு உட்பட்ட பொருள்களைக் கொண்டதாகும். அதாவது அது தன்னுள் முடிவு பெற்ற ஓர் அமைப்பு என்று கருதப்பட்டது. ஆனால் பன்முகமான தளங்களை நோக்கிப் பனுவலின் விளக்கம் பயணம் புரிகின்றது.
அமைப்பியல் என்பது ஒரு கலை வடிவம் அல்லது சிந்தனை வடிவத்தின் கட்டமைப்புப் பற்றிப் பேசுகின்றது. அமைப்பு என்பது தன்னளவில் முழுமையானது; அதன் அழகு, அதன் செய்தி எல்லாம் அமைப்புக்கு உள்ளேயே இருக்கின்றது; வெளியே அல்ல என்று சொல்லுகிறது. அமைப்பியல் படைப்பாளிக்கு முக்கியத்துவம் தருவதில்லை; வாசகனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.

பின்-அமைப்பியல் பனுவல் என்ற கருத்து நிலையை முன்வைத்து அது எவ்வாறு தனக்குள் முடியாமல் அதனைச் சார்ந்து புறத்தே இருக்கின்ற வற்றோடும் உறவு கொண்டிருக்கின்றது என்று பேசுகின்றது. பனுவலின் உள்கட்டமைப்புக் கூறுகள் தமக்குள் பிணைந்தும் முரண்பட்டும் புதிய தளம் நோக்கி நகர்கின்றது என்றும் அது பேசுகின்றது. அதனுடைய சிறப்பான கருத்தியல்களில் பன்முக வாசிப்பு என்பதும் கட்டவிழ்ப்பு என்பதும் மிக முக்கியமானவை ஆகும்.

தமிழவன், அ.மார்க்ஸ் போன்றோர் அமைப்பியலைத் தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தி யவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.

நன்றி (philosophical debates )

பின் நவீனத்துவம்


கலை, இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் பெரிதும் தாக்கம் பெற்றுவரும் பின்நவீனத்துவம், பின் அமைப்பியலுக்கு பிறகு உருவான கோட்பாடாகும். இது மார்க்சியத்தின் தொடர்ச்சியாக வந்த பிந்தைய சிந்தனையாகும். இப்போக்கானது, இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச் சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது என்றுக் கூறப்படுகின்றது.
நவீனத்துவத்தை மறுத்து பின் நவீனத்துவம் வளர்ந்தது எனலாம்.

நவீனத்துவம் வளர்த்துவிட்ட கருத்தாக்கங்களை எல்லாவற்றோடும் முரண்பட்டு மறுத்து விடுகின்றது எனப் புரிந்து கொள்ளலாம். இறைவன், தனிமனிதன், உணர்வு, அறிவு, சமூகம், மானுடவிடுதலை போன்ற நவீனத்துவ கருத்தாக்கங்களை மையமாகக் கொண்டு மொத்த உலக நோக்கும் கட்டியெழுப்பப் படுவதைப் பின்நவீனத்துவம் மறுதலிக்கிறது.


பின் நவீனத்துவம் வரலாற்றுத் தொடர்ச்சியை ஏற்காது. சமூக முழுமையை ஏற்காது. ஒருமையை ஏற்றுக் கொள்ளாது. துண்டு துண்டானவை, தொடர்பற்றவை, பன்முகத் தன்மை கொண்டவை போன்றவற்றை அங்கீகரிக்கும்.


பின் நவீனத்துவம் குறிப்பிட்ட எந்த ஒரு குறிப்பிட்ட தத்துவக் கருத்தாக்கத்தை மட்டும் எதிர்க்கவில்லை. சமூகம் இதுவரை கண்ட அனைத்து கருத்தாக்கங்களையும் மறுத்து விமர்சிக்கின்றது. அனைத்தையும் சந்தேக மனப்பான்மையைக் கொண்டு பார்க்கின்றது.
பூக்கோ, லக்கான், தெரிதா போன்ற பின் அமைப்பியல் அறிஞர்களும், லியோதார்த், பூதலியார்த், பார்த், ஜேம்சன், எட்வர்டு சயது போன்றோரும் பின் நவீனத்துவக் கருத்தை பிரபலபடுத்தியவர்களாவர்.


இவர்களில் பின் நவீனத்துவச் சிந்தனையின் ஆதாரமான தத்துவ, அரசியல் வரையறைகளை முன் வைத்தவராக லியோதார்த்தைக் குறிப்பிடுவார்கள். இவர் 1979-ல் பிரெஞ்சு மொழியிலும், 1984-ல் ஆங்கில மொழியாக்கத்திலும் வெளிவந்த அவரது ' பின் நவீனத்துவ நிலை ' என்ற நூல்தான் பின் நவீனத்துவம் குறித்த தத்துவ வரையறைகளை தெளிவுபடுத்தியது.


தத்துவங்கள் கூறுகின்ற உண்மைகள் மீதும் விஞ்ஞானம் கூறிவருகின்ற உண்மைகள் மீதும் தீவிர ஐயப்பாடுகளை எழுப்பியவர்தான் மைக்கேல் பூக்கோ என்ற பின் நவீனத்துவ அறிஞர் ஆவர். இவர் மனித மனங்களின் மீது படிந்துக் கிடக்கும் வரலாற்றுக் காலங்களின் கருத்தாக்கங்களின் தொகுப்பான கதையாடல் மூலம் மனிதர்களை எவ்வாறு நெறிப்படுத்தி யிருக்கின்றன என்பதனை அகழ்வு ஆய்வு செய்தார்.


பின் நவீனத்துவம் எழுப்பும் பிரச்சனைகள் ஒன்று, அறிவுக்கும் உண்மைக்கும் உள்ள உறவு பற்றியதாகும். பெரும்பாலும் எல்லா தத்துவங்களும் அறிவு என்பது உண்மையோடு நேரடியான உறவைக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தி வந்துள்ளன. ஆனால், பின் நவீனத்துவம் அவ்வாறு கருதவில்லை. இதை மறுக்கின்றது.

இரண்டாவது, தனிமனித மையம் குறித்த பிரச்சனையாகும். தத்துவ வரலாறு முழுக்க தனிமனித மையம் என்ற கருத்தாக்கம் ஊடாடி வந்துள்ளதை அறியலாம். இதையும் பின் நவீனத்துவம் மறுப்பதைக் காணலாம்.
மூன்றாவது பிரச்சனை ஒட்டுமொத்தப்படுத்தல் என்ற கருத்தாக்கம் ஆகும். பின் நவீனத்துவம், பிரபஞ்ச முழுமைக்கும், சமூகம் முழுமைக்குமான தத்துவக் கருத்தாக்கங்களை கேள்விக்குள்ளாக்குகின்றது.


நான்காவது பிரச்சனை அறிவே அதிகாரம் என்பதாகும். சமூக வரலாற்றில் அறிவு உற்பத்தி ஏற்றதாழ்வான சமூக அமைப்பை நியாயப்படுத்துவதாகவும் அதிகாரத்தின் கருவியாகவும் செயல்பட்டு வந்திருக்கின்றது என்று பின் நவீனத்துவ அறிஞர் பூக்கோ கூறுவதைக் காணலாம். பின் நவீனத்துவம் பகுத்தறிவை ஏற்காது.


ஐந்தாவது அதிகாரம் பற்றிய பிரச்சனையாகும். அரசு போன்ற சுரண்டல் வடிவங்கள் மட்டுமின்றி குடும்பம் , கல்வி நிறுவனம், சமயம் , பிற சமூகக் கலாச்சார நிறுவனங்கள் அனைத்திலுமே அதிகாரம் செயல்படுவதாக பூக்கோ கூறுகின்றார். அறிவு எப்போதும் அதிகாரத்துடனே நெருக்கமாக இருக்கும் என்பது பின் நவீனத்துவத்தின் கூற்றாகும்.


பின் நவீனத்துவச் சிந்தனைகள், சமூகக் கலாச்சார வாழ்வில் வழக்கிலிருக்கும் அடக்குமுறையின் நுட்பமான வடிவங்களை அடையாளப்படுத்தவும் விமர்சிக்கவும் செய்கின்றது.

நவீனத்துவத்தை மறுத்து பின் நவீனத்துவம் வளர்ந்தது எனலாம். நவீனத்துவம் வளர்த்துவிட்ட கருத்தாக்கங்களை எல்லாவற்றோடும் முரண்பட்டு மறுத்து விடுகின்றது எனக் கண்டோம்.
வரலாறு, பண்பாடு, தேசிய அடையாளம் போன்ற பெருங்கதை யாடல்களை நவீனத்துவம் வளர்த்து விட்ட கருத்தாக்கங்களாகும். ஆனால் பின் நவீனத்துவம் இது போன்ற பெருங்கதையாடல்களை மறுத்துக் கூறி உள்ளூர் கதையாடல்களை முன்வைக்கின்றது. இந்த வகையில் மார்க்சியத்தையும் பெருங்கதையாடல்கள் வரிசையில் சேர்த்து விடுகின்றது.
அதுமட்டுமின்றி, அறிவியல், வரலாறு, தேசிய ஒற்றுமை போன்ற பெருங்கோட்பாடுகளை புறக்கணித்து உள்ளூர் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கின்றது. வரலாறானது உடைந்த துண்டு துண்டான நிகழ்வுகளின் ஒன்று சேர்க்கப்பட்ட கலவைதான் என அது கூறுகின்றது.


ஒருங்கிணைக்கப்பட்ட அறிவுக்குப் பதிலாக துண்டாடப் பட்ட புத்தியையும், அடையாள ஒற்றுமைக்குப் பதிலாக பல சிதறுண்ட அடையாளத்தையும், பின் நவீனத்துவம் முன் வைக்கின்றது.
உயர்ந்த, தாழ்ந்த பண்பாடுகள் எதிர்வு நிலையில் பாகுபட்டவையாக பார்ப்பதை மறுத்து உயர்ந்த, தாழ்ந்த பண்பாடுகளுக்கு இடையிலான பாகுபாடு மறைந்து போவதாக பின் நவீனத்துவம் கூறுகின்றது.


இவ்வாறு பின் நவீனத்துவத்தின் கூறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அடுத்ததாக பின் நவீனத்துவ கருத்தாக்கங்களை உருவாக்கிய அறிஞர்களையும் அவர்களது பங்களிப்புகளையும் பார்க்கலாம்.
சொற்களும் அவை பிறப்பிக்கின்ற அர்த்தங்களும் எப்போதும் நிரந்தரமாக காலா காலத்திற்கும் ஒரே அர்த்தத்தை கொண்டிருக்க முடியாது. மாறாக, முடிவில்லாத அர்த்தங்களை கொண்டவையாக இருக்கும். ஒரு சொல்லைப் படைத்த படைப்பாளி கொண்டிருக்கும் அர்த்தம் தற்காலிக ஒரு வெளிப்பாடாகும். அது பின் வாசிக்கின்ற ஒவ்வொருவரின் வாசிப்பிற்கேற்ப புதிய புதிய அர்த்தங்கள் அச்சொல்லில் இருந்து சுரந்துக் கொண்டே இருக்கும். ஒரு எழுத்தினுள் இரண்டு முறை ஒரே மாதிரி பயணிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் அது பல்வகைப்பட்ட அர்த்த வெளிப்பாடுகள் பிறந்துக்கொண்டே இருக்கும்.


ஒரு சொல்லை விளக்க வருகின்ற அச்சடிக்கப் பட்ட அகராதியனது அர்த்தச் சுரத்தலை நிறுத்திவிடும் தன்மை கொண்டதாக இருக்கின்றது. ஆனால் மொழிக்குள் சொற்களின் அர்த்தமானது, தொடர்ச்சியான மாற்றங்களைப் புதுப்பிக்கும் விளையாட்டை நிகழ்த்திக் கொண்டே யிருக்கின்றன. இதுதான் கட்டுடைத்தல் என்ற பின் நவீனத்துவக் கருத்தாக்கம் ஆகும்.


இவ்வாறாக நிலையான ஒற்றைத் தன்மைக்கு மாறாக முடிவுறாத பன்மைத் தன்மையைத் தான் பின் நவீனத்துவம் கோருகின்றது. இத்தகைய மொழி விளையாட்டை நிகழ்த்திய அல்ஜீரியா நாட்டை சேர்ந்த, பின் அமைப்பியல்வாதியும் பின் நவீனத்துவத்துவ அறிஞரும் ஆன தெரிதா ஆவார்.

முதலாளித்துவ உற்பத்தியையும் தொழில் நுட்பத்தையும் இணைத்ததாக பிற்கால முதலாளித்துவம் இருந்ததைத் தனது நூலில் லியோதார்த் குறிப்பிடுகிறார். முந்தைய முதலாளித்துவ உற்பத்தி முறையின் அதிகாரம் தொழிற்சாலையை மையப்படுத்தியதாக இருக்க, இன்றைய உற்பத்தி முறையின் அதிகாரம் தகவலை மையமாகக் கொண்டிருப்பதை அவர் முன்வைக்கின்றார்.


அடுத்ததாக பின் நவீனத்துவத்தை மார்க்சிய தர்க்கத்தின் வழியில் கோட்பாட்டு உருவாக்கம் செய்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.


பின் நவீனத்துவத்தை முதலாளியக் காலகட்டதின் ஒரு தருணமாக பிரெடெரிக் ஜேம்சன் போன்றவர்கள் வரையறுக்கிறார்கள். இவர் ஒரு அமெரிக்க மார்க்சியர். இவர் பின் நவீனத்துவத்தை மார்க்சிய தர்க்கத்தின் வழியில் கோட்பாட்டு உருவாக்கம் செய்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய "பின் நவீனத்துவம்: பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கம்" என்ற நூலில்தான் பின் நவீனத்துவத்தின் கூறுகளை விரிவான முறையில் விமர்ச்சித்துள்ளார்.


ஜேம்சனை தொடர்ந்து, பின் நவீனத்துவம் குறித்து கோட்பாட்டு உருவாக்கத்தில் ஈடுபட்டவர் டெர்ரி ஈகிள்டன் என்ற பிறிதொரு மார்க்சியராவார். இவர் தன் "பின் நவீனத்துவத்தின் பிரமைகள்" என்ற நூலில் மூலம் தனது விமரிசனத்தை முன் வைத்தார்.

கடந்த இருபது ஆண்டுகளாக பின் நவீனத்துவத்தைக் கோட்பாட்டு உருவாக்கம் செய்யும் முயற்சி மார்க்சியர்களிடையே நடைபெற்று வருகின்றது. இம்முயற்சியை மேற்கிலும் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் ஈடுபட்டு வருவதைக் காணயியலும்.


தமிழகத்திலும் கூட பின் நவீனத்துவக் கோட்பாடுகள் அரசியல், இலக்கியம் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம். அதேபோன்று பின் நவீனத்துவக் கோட்பாடுகளை விமரிசனம் செய்யும் போக்கும் தமிழக மார்க்சியர்கள் இடையே இருந்து வருகின்றது.


இத்தகைய விமரிசனப் போக்கை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களின் அணுகுமுறைகள் இரு வகைகளில் அமைகின்றன. ஒன்று, பின் நவீனத்துவத்தை முற்றிலும் எதிர்நிலையில் நின்று விமர்சிக்கிற நிலைபாடு. நிறுவனமயமான கட்சிகளைச் சேர்ந்த மரபு மார்க்சிய வாதிகள் இத்தகைய நிலைபாட்டைக் கொண்டிருக்கின்றனர்.


இரண்டாவது, முழுக்க ஏற்காமலும், நிராகரிக்காமலும் அணுகுகின்ற நிலைப்பாடு. நிறுவனமயமான கட்சிகளைச் சாராத மார்க்சிய அறிஞர்கள் பின் நவீனத்துவத்தை விமரிசன கண்ணோட்டத்தில் அணுகுவதோடு, மார்க்சியத்திற்கும் இதற்கும் நிலவும் பொதுவான அம்சங்களை இனங்கண்டு, அங்கீகரிக்கவும் செய்கின்றனர்.


நன்றி- ( philosophical debates )