Monday, December 26, 2011

அண்ணா ஹசாரே : ஊடகத்தால் ஊதப்படும் போலி புரட்சி


தொலைக்காட்சிகளில் நாம் பார்ப்பதுதான் புரட்சி என்றால், அதுதான் சமீபத்தில் நடந்தவற்றிலேயே தர்மசங்கடமான, தெளிவற்ற புரட்சியாக இருக்க முடியும். ஜன் லோக்பால் மசோதா குறித்த எப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்குள் இப்போது எழுந்தாலும், அதற்கான விடைகள், இப்படியாகத்தான் கிடைக்கும். பெட்டிக்கு நேராக டிக் செய்து கொள்ளுங்கள், அ) வந்தே மாதரம். ஆ) பாரத் மாதாகீ ஜெய். இ) அண்ணாதான் இந்தியா, இந்தியாதான் அண்ணா. ஈ) ஜெய் ஹிந்த்.

முழுக்க முழுக்க வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு வழிமுறைகளில் போராடி வரும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், ஜன் லோக்பால் மசோதாவுக்கும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது – அது, இந்திய அரசியல் அமைப்பை தூக்கி எறிவது. இதற்காக ஒருதரப்பினர் கீழிருந்து மேலாக, இழப்பதற்கு ஏதுமற்ற வறியவர்களிலும் வறியவர்களான ஆதிவாசி மக்களை இராணுவமயப்டுத்தி ஆயுதமேந்தி போராடுகிறார்கள். மறுதரப்பினர் மேலிருந்து கீழாக, ரத்தம் சிந்தாத காந்திய வழியில், புதிதாக வார்தெடுத்த புனிதரின் தலைமையில், நகர்புற – முக்கியமாக மேட்டுக்குடியினரில் பெரும்பாலானவர்களை உள்ளடக்கிய படையைக் கொண்டு போராடுகிறார்கள். (இந்த விஷயத்தில் அரசாங்கம்மும் தன்னை தூக்கியெறிவதற்கு இயன்ற அனைத்தையும் செய்து துணை நிற்கிறது)

ஏப்ரல் 2011ல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அண்ணா ஹசாரே முதல்முறையாக ஆரம்பித்த காலகட்டத்தில், அடுத்தடுத்து வெளியாகிவந்த மிகப்பெரிய ஊழல் செய்திகளால் தனது நம்பகத்தன்மை ஆட்டம் கண்டு வந்ததை உணர்ந்திருந்த இந்திய அரசாங்கம், மக்களின் அதிருப்தியை திசை திருப்ப, அண்ணாவின் குழுவை (டீம் அண்ணா) – இந்த ‘சிவில் சமூக’ குழுவால் தேர்வு செய்யப்பட்ட வணிகச் சின்னம் இது – ஊழலுக்கு எதிரான புதுச்சட்டத்தின் வரைவுக்குழுவில் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. ஆனால், சில மாதங்களிலேயே இந்த கூட்டு வரைவுக் குழுவை கைவிட்டுவிட்டு, எவ்வகையிலும் பயனில்லாத, ஓட்டைகள் நிரம்பிய தனது சொந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

பிறகு, ஆகஸ்ட் 16ம் தேதி காலையில், அண்ணா ஹசாரே இரண்டாவது முறையாக தனது காலவறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே, சட்டத்துக்கு புறம்பான எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபடுவதற்கு முன்னரே, கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்கான போராட்டம் என்பது, போராடுவதற்கான உரிமை தொடர்பான போராட்டமாகவும், ஜனநாயகத்துக்கான போராட்டமாகவும் உருமாறியது. இந்த ‘இரண்டாவது சுதந்திர போராட்டம்’ தொடங்கிய சில மணித்துளிகளில் அண்ணா விடுதலை செய்யப்பட்டார். ஆனால், தந்திரமாக சிறையை விட்டு செல்ல மறுத்த அவர், திகார் சிறைச்சாலையின் மரியாதைக்குரிய விருந்தினராக தங்கி, உண்ணாவிரதத்தை ஆரம்பித்து, பொது இடங்களில் உண்ணாவிரதம் இருப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தார். மூன்று நாட்களுக்கு மக்கள் கூட்டமும், தொலைக்காட்சிகளின் வாகனங்களும் சிறைக்கு வெளியே குழுமியிருக்க, அனைத்து தேசிய தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்புவதற்காக ஹசாரேவின் வீடியோ செய்திகளை ஏந்தியபடி அண்ணாவின் குழுவினர் உயர் பாதுகாப்பு வசதி கொண்ட அச்சிறைக்கு உள்ளும் வெளியிலுமாக மின்னலென பறந்துக் கொண்டிருந்தனர். (வேறு யாருக்கேனும் இந்த பேரின்ப வாழ்வு கிடைக்குமா?)

இதற்கிடையில், தில்லி மாநகராட்சி ஆணையத்தை சேர்ந்த 250 தொழிலாளர்களும், 15 லாரிகளும் (டிரக்குகள்), 6 கனரக மண் சீராக்கும் வாகனங்களும் கடிகாரத்துக்கு ஓய்வு தராமல் வாரயிறுதியில் நடைபெறவிருக்கும் கண்கவர் காட்சிக்காக ராம்லீலா மைதானத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தன.

இப்போது உள்ளங்கையும், உள்ளங்காலும் பரபரக்க, பக்தி முற்றிய நிலையில் அண்ணாவின் பெயரை உச்சரிக்கும் கூட்டம் குழுமியிருக்க, வானுயர்ந்த கேமராக்கள் கண்சிமிட்டியபடி படம் பிடிக்க, இந்தியாவின் விலைமதிப்பில்லாத மருத்துவர்கள் பராமரிக்க, மூன்றாவது முறையாக அண்ணா ஹசாரேவின் காலவறையற்ற உண்ணாவிரதம் தொடங்கியது. ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றே’ தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் நமக்கு சொல்கிறார்கள்.

அண்ணா ஹசாரேவின் போராட்ட வழிமுறைகள் காந்திய வழியாக இருக்கலாம், ஆனால், அவரது கோரிக்கைகள் நிச்சயம் அப்படியானதல்ல. அதிகாரத்தை ஒன்றுகுவிக்காமல் பகிர்ந்தளிக்கச் சொல்லும் காந்தியின் கருத்துகளுக்கு முரணாக ஜன் லோக்பால் மசோதா அரக்கத்தனமான, எதேச்சதிகார, ஒருமுகப்படுத்தப்பட்ட அதிகார மையத்தை கோரும் ஊழல் தடுப்பு மசோதாவாக இருக்கிறது. இதில், கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பூதாகரமான ஜனநாயகத்தை நிர்வகிக்க, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிய, காவல்துறையின் அதிகாரத்துடன் பிரதமர் முதல் நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள், அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரை குறித்தும் துப்பு துலக்கி விசாரிக்கவும், கண்காணிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் உள்ளது. இதற்கென்று சொந்தமாக சிறைச்சாலைகள்தான் இருக்காது. மற்றபடி சுதந்திர நிர்வாக அமைப்பாக இயங்கி ஏற்கனவே வரைமுறையில்லாமல் ஊதிப் பெருகி, மக்களுக்கு பதில் சொல்லும் கடமையற்று இருக்கும் இப்போதைய ஊழல் அமைப்பை எதிர் கொள்ளும் இன்னொரு நிர்வாக அமைப்பாக செயல்படும். அதாவது கட்டுப்படுத்த முடியாத ஒரு விலங்காக இதுநாள்வரை இருந்த ஜனநாயகமற்ற அமைப்பு, இனி இரண்டாக பெருகியிருக்கும்.

இந்த ஜன் லோக்பால் மசோதா மூலம் ஊழல் ஒழியுமா இல்லையா என்பது ஊழலை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்தது. ஊழல் என்பது வெறும் சட்ட ரீதியான நிதி ஒழுங்கின்மை – லஞ்சம் சார்ந்ததா அல்லது வெளிப்படையாக பளிச்சென்று தெரியும் ஏற்றத் தாழ்வுமிக்க சமூகத்தில் நடைபெறும் பணப் பரிமாற்றம் வழியாக அதிகாரமானது தொடர்ந்து சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருப்பவர்களின் கரங்களில் குவிந்து வருவதை குறிக்கிறதா?

உதாரணமாக வணிக வளாகங்கள் நிரம்பிய நகரத்தில் தெருவில் கூவிக் கூவி விற்பது தடை செய்யப்பட்டுள்ளதாக கற்பனை செய்து கொள்வோம். தெருவில் கூவி விற்பவர்களின் வாடிக்கையாளர்கள் வணிக வளாகங்களில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் அளவுக்கு ‘தகுதி’ படைத்தவர்கள் அல்லர். எனவே அவர்களுக்கு தேவையான பொருட்களை தெருவில் விற்பவர்களிடமிருந்து அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். இந்த ‘சட்டப்புறம்பான’ வியாபாரத்துக்காக தெருவில் கூவிக் கூவி விற்பவர், நடைபாதை காவலருக்கும் நகராட்சியை சேர்ந்தவருக்கும் ஒரு தொகையை லஞ்சமாக கொடுப்பார். இது அவ்வளவு பெரிய கொடுமையா? எதிர்காலத்தில் ஜன் லோக்பாலின் பிரதிநிதிக்கும் சேர்த்து அவர் ஒரு தொகையை கொடுக்க வேண்டியிருக்குமா? அடித்தட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகள், அமைப்பு ரீதியாகவே உறைந்துள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவதில் அடங்கியிருக்கிறதா அல்லது ஏற்றத்தாழ்வுகளுக்கு கட்டுப்பட்டு இணங்கிப் போகச் செய்யும் இன்னொரு அதிகார அமைப்பை உருவாக்குவதில் இருக்கிறதா?

அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் இடம் பிடித்திருக்கும் முழக்கங்கள், சைகைகள், நடன அமைப்புகள், தேசிய வெறி, காற்றில் அழகாக அசைந்தாடும் தேசியக்கொடிகள் ஆகியவை அனைத்தும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்கள், உலககோப்பை வெற்றி ஊர்வலம், மற்றும் அணுகுண்டு சோதனை வெற்றிக் கொண்டாட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்டவை; அவற்றை நினைவுபடுத்துபவை. இவையெல்லாம் அண்ணாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கவில்லையென்றால் நாம் உண்மையான இந்தியர்கள் இல்லையென்று நம்மை நோக்கி எச்சரிக்கின்றன. நாட்டில் இதைத்தவிர வேறு எதுவும் உருப்படியான செய்தி இல்லை என்பதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன போலும்.

‘இந்த உண்ணாவிரதம்’ சர்வநிச்சயமாக மணிப்பூரில் ஒருவரை சந்தேகப்பட்டாலே இராணுவத்துக்கு அவரை கொல்ல அனுமதியளிக்கும் AFSPA என்ற அடக்குமுறைச் சட்டத்தை திரும்ப்ப் பெற வலியுறுத்தி 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஜரோம் சர்மிளாவின் போராட்டத்தைப் போன்றதல்ல. (இன்றும் ஐரோம் சர்மிளாவுக்கு பலவந்தமாக உணவு செலுத்தப்படுகிறது). கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பத்தாயிரக்கணக்கில் கிராம மக்கள் தொடர்ந்து வரிசையாக நடத்தி வரும் உண்ணாவிரதம் போன்றதும் அல்ல.

(ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஆதரித்து ராம்லீலா மைதானத்தில் குழுமியிருக்கும்) ‘மக்கள்’, ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் மணிப்பூர் மக்களின் உணர்வுகளை கொண்டவர்களல்ல. ஜெகத்சிங்பூர் அல்லது கலிங்காநகர் அல்லது நியாம்கிரி அல்லது பாஸ்டர் அல்லது ஜெய்தாபூரில் ஆயுதமேந்திய காவலர்களையும், சுரங்கக் கொள்ளையர்களையும் அன்றாடம் எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் போன்றவர்களுமல்ல. போபால் விஷவாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களோ அல்லது நர்மதா அணையினால் இடம்பெயர்ந்த மக்களோ கூட அல்ல. அல்லது நொய்டாவின் விவசாயிகள் போலவோ அல்லது பூனா/அரியானா அல்லது நாட்டின் எந்தபகுதியிலாவது தங்கள் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் விவசாய மக்களும் அல்ல.

‘இந்த மக்கள்’, ரசிகர் பட்டாள மக்கள். தனது ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று ஒரு 74 வயது முதியவர் மிரட்டுவதை கண்குளிர பார்க்கும் கண்களுடன் வந்திருக்கும் ‘மக்கள்’. இயேசு கிறிஸ்து, அப்பத்தையும் மீனையும் பன்மடங்கு பெருக்கி பசித்தவர்களுக்கு உணவளித்தது போல், பல ஆயிரக்கணக்கான மக்கள் நமது தொலைக்காட்சி ஊடகங்களால் பெருக்கி காட்டப்படுகிறார்கள். ‘லட்சக்கணக்கான குரல்கள் ஒலித்தன’ என்கிறார்கள் நம்மிடம். ‘அண்ணாதான் இந்தியா’வாம்.

மக்களின் குரல் என்றும் புதிதாக வார்த்தெடுத்த புனிதர் என்றும் சித்தரிக்கப்படும் இந்த மனிதர் உண்மையில் யார்? விசித்திரம் என்னவென்றால் இதுவரை இவர் இந்த நாட்டில் பற்றி எரியும் எந்தப் பிரச்னை குறித்தும் கருத்து சொல்லி நாம் கேட்டதில்லை. அவரது ஊருக்கு அருகாமையில் நிகழும் விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றியோ அல்லது சற்று தொலைவில் நடக்கும் பசுமை வேட்டைப் பற்றியோ இவர் எதுவும் பேசியதில்லை. சிங்கூரைப் பற்றியோ, நந்திகிராம், லால்கர் அல்லது போஸ்கோ விவசாயிகளைப் பற்றியோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களால் எதிர்காலம் சூன்யமானவர்களைப் பற்றியோ இவர் முணுமுணுத்தது கூட இல்லை. மத்திய இந்தியாவின் வனப் பகுதிகளில் இராணுவத்தை பரவி நிறுத்த அரசு திட்டமிட்டிருந்த நேரத்தில், இந்திய அரசின் நோக்கம் குறித்தெல்லாம் அவர் எந்த கவலைகளும் வெளியிட்டதில்லை.

ஆனால், ராஜ் தாக்கரேவின் இனவெறிக் கொள்கையான ‘மராட்டியம் மராட்டியர்களுக்கே’ என்ற மாராத்திய பாசத்தை ஆதரிக்கிறார். குஜராத்தை ‘வளர்ச்சி மாநிலம்’ என்று வியந்தோதியவர், 2002ல் இஸ்லாமிய மக்கள் கொன்றொழிக்கப்பட்டது குறித்து எதுவும் சொல்லவில்லை. (இதையொட்டி சில கண்டனக் குரல்கள் எழுந்ததும் தனது வார்த்தைகளை அண்ணா திரும்பப் பெற்றுக் கொண்டாரே தவிர, உண்மையான தனது பாராட்டு மனநிலையை அல்ல)

இவ்வளவு இரைச்சல்களுக்கு இடையிலும் அறிவுத் தெளிவுடைய பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமையை எப்படி உணர்ந்து செய்வார்களோ அப்படியே உண்மையான சில பத்திரிகையாளர்கள் பணியாற்றுகிறார்கள். அதனால்தான் ஆர்எஸ்எஸ் உடனான அண்ணாவின் பழைய பாசப்பிணைப்புக் கதையை நாம் அறிய முடிகிறது. அண்ணாவின் கிராம சமூகமான ‘ராலேகான் சித்தி’யில் கடந்த 25 வருடங்களாக கிராம பஞ்சாயத்துகளோ அல்லது கூட்டுறவு சங்க தேர்தல்களோ நடைபெற்றதேயில்லை என்று அக்கிராமத்தை ஆய்வு செய்த முகுல் ஷர்மா சொல்வதை கேட்க முடிகிறது. ‘ஹரிஜன்’களை குறித்து அண்ணாவின் மனபாவத்தை அறிய முடிகிறது: ‘ஒவ்வொரு கிராமமும் ஒரு சக்கிலியனை, கொல்லனை, குயவனைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கனவு. அவர்கள் தத்தமது கடமையை செய்துகொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு கிராமம் தன்னிறைவு பெறும். இதைத்தான் ராலேகான் சித்தியில் நாங்கள் நடைமுறைபடுத்தியிருக்கிறோம்’.

‘அண்ணாவின் குழுவினர்’ (டீம் அண்ணா), இட ஒதுக்கீடு திட்டத்தை எதிர்ப்பவர்களான யூத் ஃபார் ஈக்வாலிட்டி என்ற அமைப்பினருடன் இணைந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? கோகோ – கோலாவினாலும் லேமான் பிரதர்சாலும் மிக தாராளமாக நிதியுதவி செய்யப்பட்ட பல தன்னார்வக் குழுவினர்தான் இந்த பிரச்சார போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார்கள். ‘அண்ணா குழு’வின் புகழ் பெற்ற நபர்களான, அர்விந்த் கேஜ்ரிவால், மனீஷ் சிசோடியா-வால் நிர்வகிக்கப்படும் ‘கபீர்’ அமைப்புக்காக கடந்த மூன்று வருடங்களில் போர்டு பவுண்டேசனிடமிருந்து 400,000 டாலர்களை பெற்றிருக்கிறார்கள். ‘ஊழலுக்கெதிரான இந்தியா’ பிரச்சாரத்துக்கு நிதி வழங்கியவர்களின் பட்டியல் இன்னும் ஆச்சரியமான அதிர்ச்சியை தரக்கூடியது. சொந்தமாக அலுமினிய சுரங்கங்கள் வைத்திருக்கும் இந்திய நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை கையகப்படுத்தி இருப்பவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள், பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள் என்று அனைவரும் அடக்கம். இதில் பலர் மீது ஊழலுக்காகவும் மற்றும் வேறு சில குற்றங்களுக்காகவும் விசாரணை இப்போதும் நடந்துக்கொண்டிருக்கிறது.

ஜன் லோக் பால் மசோதா சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தை நினைவுபடுத்தி பாருங்கள். உலக அரங்கில் விக்கிலீக்சின் மூலம் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துக் கொண்டிருந்தது. இந்திய அளவில், முக்கியமான பன்னாட்டு நிறுவனங்கள், உயர் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் பலர், 2ஜி உள்ளிட்ட பிரமாண்டமான ஊழல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் அம்பலப்படுத்தியிருந்தன. அதோடு, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள், பொதுச்சொத்தின் ஆயிரக்கணக்கான கோடிகளை பல்வேறு வழிகளில் கபளீகரம் செய்ததும் வெளிச்சத்துக்கு வந்திருந்தன.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, தரகு வேலை செய்யும் பத்திரிகையாளர்களின் முகத்திரை கிழிந்ததுடன் கார்ப்பரேட் இந்தியாவின் முக்கிய தலைவர்களும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தருணம் நெருங்கி இருந்தது. ஊழலுக்கெதிரான போராட்டத்துக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்குமா என்ன?

அரசாங்கம் தனது கடமைகளிலிருந்து விலகிக்கொள்ள, கார்ப்பரேட்டுகளும் தன்னார்வக் குழுவினரும் அந்த இடங்களில் தங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் (தண்ணீர் வசதி, மின்சாரம், போக்குவரத்து, தொலைதொடர்பு, சுரங்கங்கள், மருத்துவம், கல்வி); தனியாருக்குச் சொந்தமான ஊடகங்கள் தங்களது முழு ஆற்றலையும் செலவழித்து பொது மக்களின் சிந்தனையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இந்த கார்ப்பரேட்டுகள், ஊடகங்கள், தன்னார்வ குழுவினர்கள் தாமாகவே ஜன் லோக் பாலின் வரம்புக்குள் வருவார்கள் போலிருக்கிறதே என்று நினைத்தோம். ஆனால், அவ்வாறு இல்லையாம். அவர்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கிறது ஜன் லோக்பால் மசோதா.

அரசின் ஊழலுக்கும், கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கும் ஆப்படிக்கும் போராட்டத்தில், குற்றவாளிகள், மற்ற எல்லோரையும் விட அதிகமாக குரலெழுப்புவதன் மூலம் தங்களை தாங்களே அதன் பிடியிலிருந்து சாதுர்யமாக விடுவித்துக்கொள்கின்றனர். அதைவிட மோசம் இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் பொது வட்டத்திலிருந்து அரசாங்கம் இன்னமும் பின்வாங்க வலியுறுத்தி அதன் மீது கணைகளை வீசுகிறார்கள். அது நடந்தால்தான் பொது நிறுவனங்கள் மேலும் தனியுடமை ஆகும். பொது கட்டமைப்புகளில் தனியார் இன்னமும் கை வைக்க முடியும். இந்தியாவின் இயற்கை வளங்களை கபளீகரம் செய்ய முடியும். அந்தக் கட்டம் வரும்போது, கார்ப்பரேட் ஊழல் நியாயப்படுத்தப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிடும். அதற்கு ‘தரகு கமிசன்’ என்றும் பெயர் வைக்கப்பட்டுவிடும்.

20 ரூபாயில் தங்கள் அன்றாட வாழ்க்கையை கடத்தும் 83 கோடி மக்களுக்கு, இந்த மசோதாவினால் உண்மையாகவே ஏதும் பயனிருக்கிறதா? இது அவர்களை மேலும் ஏழ்மைக்கும் வறுமைக்கும் போராட்டத்தை நோக்கியும் தள்ளுமே தவிர வேறு எந்த பயனுமில்லை.

மக்களின் சார்பாக கிரிமினல்களும் கோடீஸ்வர அரசியல்வாதிகளுமே நிரம்பியிருக்கும் பாராளுமன்றங்களின் முழுதோல்விதான் இந்த அருவெறுக்கத்தக்க நெருக்கடியை போலியாக உப்பிபெருக்குகிறது. சாதாரண மக்களால் இங்கு ஒரேயொரு ஜனநாயக அமைப்பைக் கூட நெருங்கமுடியாது.

தேசக்கொடி ஒயிலாக அசைவதைப் பார்த்து மனம் மயங்கிவிடாதீர்கள். நமது இறையாண்மையை கார்ப்பரேட்டுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்தப் போகும் யுத்தத்துக்குள் நாம் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த யுத்தம் சொந்த நலனுக்காக ஆப்கானிஸ்தானில் யுத்தபிரபுக்கள் நிகழ்த்திய யுத்தம் போன்ற உக்கிரத்தை கொண்டதாக இருக்கும். இந்தியாவில் இதைதான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

_________________________________________________

- நன்றி: அருந்ததி ராய்,

Thursday, December 8, 2011

வெளிநாட்டு பணத்தில் கொழி(ழு)க்கும் ஆர்.எஸ்.எஸ்




கூடங்குளம் திட்டத்தை எதிர்ப்போருக்கு வெளிநாட்டுப் பணம் வருவதாக ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் குருமூர்த்தி ‘தினமணி’ நாளேட்டில் கட்டுரை எழுதியுள்ளார். பார்ப்பனர்கள் கட்டுப்பாடாக கூடங்குளம் திட்டத்தை வலிந்து ஆதரித்து வருகிறார்கள். குருமூர்த்தியின் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் அமெரிக்காவிலிருந்து பணம் பெற்று வருகிறது என்பதை ஆதாரங்களுடன் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ அம்பலப்படுத்துகிறது

இந்திய வளர்ச்சி மற்றும் புனர் வாழ்வு நிதியம் (India Development and Relief Fund – IDRF) என்ற ஒரு அமைப்பு அமெரிக்காவில் 1989 இல் பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு வரிச் சலுகைக்கான சட்டம் 501(2) (3) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் நோக்கமாக, இந்தியாவின் கிராம வளர்ச்சி, பழங்குடியினர் நலம் மற்றும் நகர்ப்புற ஏழைகள் நலன் என்பவை நிர்ணயிக்கப்பட்டன. 2000-த்தில் – இந்த நிறுவனம் திரட்டிய தொகை 3.8 மில்லியன் அமெரிக்க டாலர், வினியோகிக்கப் பட்டுள்ளது. ‘அவுட்லுக்’ வார இதழ் (ஜூலை 22, 2002) வெளியிட்ட ஒரு கட்டுரையில், இந்த நிறுவனத்துக்கும் சங் பரிவார் அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலமாக்கியிருந்தது. உடனே அய்.டி.ஆர்.எப்., இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுத்தது. தங்களுக்கும் எந்த ‘இசத்துக்கும்’, தத்துவத்துக்கும், கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அந்த மறுப்பு அறிக்கை கூறியது. ஆனால், ஆவணங்களைத் துல்லியமாக பரிசீலித்துப் பார்க்கும்போது, அய்.டி.டி.ஆர்.எப்.க்கும், சங்பரிவார்களுக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகள் திட்டவட்டமாகத் தெரிகின்றன. அதற்கான ஆதாரங்கள் கீழே தரப்படுகின்றன.

அய்.டி.ஆர்.எப். நிறுவனம் அமெரிக்காவின் பல்வேறு மாநில அரசுகளிடம், தங்களுக்கு, வரிச் சலுகைக்கான சான்றிதழ் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளது. அதற்கு ‘படிவம் 1023’ என்று பெயர். அதில், இந்தியாவில் கீழ்க்கண்ட 9 முக்கிய நிறு வனங்கள், இந்தியாவில் தங்களின் பிரதிநிதிகளாக செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விகார் பாரதி (பீகார்)

சுவாமி விவேகானந்தா கிராம வளர்ச்சிக் கழகம் (தமிழ்நாடு)

சேவா பாரதி (டெல்லி)

ஜனசேவா வித்யா கேந்திரா (கருநாடகம்)

வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (ம.பி.)

வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (குஜராத்)

வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (நாகர் ஹவேலி)

கிரிவாரி வனவாசி சேவா டிரஸ்ட் (உ.பி.)

ஜி. தேஷ்பாண்டே வனவாசி வஸ்திகிரா (மகாராஷ்டிரா)

- மேற்குறிப்பிட்ட 9 நிறுவனங்களுமே சங் பரிவார் அமைப்புகள்தான். இதை ஆர்.எஸ்.எஸ். நடத்தும் இணையத்தளங்களிலே காண முடியும். உதாரணமாக விகாஸ் பாரதி, சங் நீரூற்றிலிருந்து கிளம்பிய நீரோட்டம் என்றும், விவேகானந்தா கிராம வளர்ச்சிக் கழகம், தமிழ்நாட்டில் விசுவ இந்து பரிஷத்தின் தோழமை அமைப்பு என்றும், ஆர்.எஸ்.எஸ். இணைய தளங்களில் விவரிக்கப் பட்டுள்ளது.

இந்த அமைப்புகளின் கீழ் – 67 துணை அமைப்புகள் இந்தியாவில் செயல்படுவதாகவும், அய்.டி.ஆர்.எப்., அறிவித்திருக்கிறது. ஆக மொத்த முள்ள 75 நிறுவனங்களில், 60 நிறுவனங்கள் சங் பரிவார்களோடு தொடர்புள்ள நிறுவனங் களாகும்.

அந்த நிறுவனங்களில் பதிவாகியுள்ள அய்.டி.ஆர்.எப். நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நிகராக இந்து சேவக் சங் (எச்.எஸ்.எஸ்.) என்ற அமைப்பை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்கள். பீஷ்ம அக்னி ஹோத்ரி, ஜெதீந்தர் குமார், ராம்ஜெஹானி, வினோத் பிரகாஷ் ஆகிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள்தான் அமெரிக்கா வில் நடத்தி வருகிறார்கள். பீஷ்ம அக்னி ஹோத்ரி, ஜெதீந்தர் குமார், ராம்ஜெஹானி, வினோத் பிரகாஷ் ஆகிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள்தான் அமெரிக்காவில் அய்.டி.ஆர்.எப். நிறுவனர்கள். இவர்கள் அமெரிக்காவின் ஆர்.எஸ்.எஸ்.சான எச்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களாகவும் செயல்படு கிறார்கள். அய்.டி.ஆர்.எப்.பின் பொதுச் செயலாளராக இருக்கம் ஷியாம் கோகல் காந்தி என்பவர் சான்பிரான்சிஸ்கோவில் – எச்.எஸ்.எஸ். பொறுப்பாளர். அய்.டி.ஆர்.எப்.பின் ஆலோசகராக இந்தியாவில் செயல்படுபவர் ஷியாம் பாரன்டே எனும் பார்ப்பனர். இவர்தான், வெளிநாடுகளில் சங் பரிவார் நடவடிக்கைகளுக்கான அமைப்பாளர் ஆர்.எஸ்.எஸ்.சின் ‘அப்சர்வர்’ பத்திரிகையில் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க வாழ் பார்ப்பனர்கள் 1980களிலிருந்து – ‘இந்துத்துவா’வைத் தீவிரப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினர். இந்தியாவிலிருந்து 1990களில் – அமெரிக்காவுக்கு குடியேறிய ஏராளமான பார்ப்பனர்கள், இதில் தீவிரம் காட்டினர். குறிப்பாக, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, வடக்கு-கிழக்கு பகுதிகளிலும், தெற்குப் பகுதி மாநிலங்களான புளோரிடா, டெக்சாஸ் மாநிலங்களிலும், இந்துத்துவா அமைப்புகள் வலிமையாக கால் பதித்தன. இந்த இந்துத்துவா அமைப்புகள், இந்தியாவில் சங் பரிவார்களுக்குத் துணை நிற்பதோடு அய்.டி.ஆர்.எப். வழியாக, பெருமளவு நன்கொடைகளைத் திரட்டித் தந்து வருகின்றன.

மத வேறுபாடு இல்லாமல் இந்தியர்களின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய இந்திய வளர்ச்சி (எய்டு) அமைப்பு, குழந்தைகள் மறுவாழ்வு (கிரஸ்), இந்திய வளர்ச்சிக் கழகம் (அய்.டி.எல்.) போன்ற பல பொதுவான தொண்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்பட்டாலும், அய்.டி.ஆர்.எப்., இவைகளை அங்கீகரிப்பது இல்லை. சங் பரிவார் களுடன் தொடர்புடைய அமைப்புகளை மட்டுமே சேவை நிறுவனங்களாக அது அங்கீகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய தீவிரவாதத்தைத் தடுக்கவும், இந்திய முஸ்லிம்கள், சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதி களுடன் தொடர்பு கொண்டிப்பதாகவும், குறும் படங்களைத் தயாரித்து, திரையிட்டு நிதி திரட்டும் வேலைகளை அமெரிக்க ஆர்.எஸ்.எஸ்.சான எச்.எஸ்.எஸ்.சும், அய்.டி.ஆர்.எப்.பும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

நிதி ஒதுக்கீடு : எதற்கு?

‘வளர்ச்சி’, ‘புனர்வாழ்வு’ என்ற பெயரில் இந்தியாவுக்கு அய்.டி.ஆர்.எப். அனுப்பிய தொகையில் பெரும் பகுதி, சங் பரிவார்களின் திட்டங்களை அமல்படுத்துவதற்கும் – மதப் பகைமையை வளர்ப்பதற்குமே பயன்பட்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

1994 முதல் 2000 வரை அய்.டி.ஆர்.எப். இந்தியாவுக்கு அனுப்பிய தொகையில் 75 சதவீதம் (3.2 மில்லியன் டாலர்), ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பு களுக்கே அனுப்பப்பட்டுள்ளது. எந்த ஒரு மைனாரிட்டி அமைப்புகளுக்கும் உதவிடவில்லை. அனுப்பிய தொகையில் 70 சதவீதம் – ஆதிவாசிகளை, இந்து மதத்துக்கு மாற்றவும், அதற்குத் தயார் செய்வதற்கான கல்வி, விடுதிகளை நடத்தவுமே செலவிடப்பட்டு இருக்கிறது. 8 சதவீதம் மருத்து வத்துக்கும், 15 சதவீதம் புனர்வாழ்வு திட்டங் களுக்கும், 4 சதவீதம் கிராம வளர்ச்சிக்கும் செல விடப்பட்டு இருக்கிறது. (ஆதாரம்: அய்.டி.ஆர்.எப். – ஆண்டறிக்கை – இணையதளத்திலிருந்து) ‘புனர் வாழ்வுப்பணி’ என்ற பெயரில் செலவிடப்பட்ட தொகைக்கூட – மத அடிப்படையிலேயே செலவிடப் பட்டிருக்கிறது. குஜராத் பூகம்பத்தின்போது – புனர் வாழ்வு நிதியிலிருந்து செலவிட்ட தொகையை, பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு மட்டுமே ஒதுக்கினார்கள். இதேபோல் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வங்க தேச இந்துக்கள், ராணுவம் மற்றும் போராளிகள் தாக்குதலுக் குள்ளான காஷ்மீர் இந்துக்கள் என்று இந்துக்களுக்கு மட்டுமே, இந்நிறுவனம் உதவிகளைச் செய்துள்ளது. இவைகளில் பாதிக்கப்பட்டவர்கள் கிறித்தவர், முஸ்லிம்கள் இருந்தாலும்கூட ‘நிவாரண உதவிகள்’ மதத்தின் அடிப்படையிலேயே செய்யப்பட்டன.

குஜராத் பூகம்பத்தின்போது ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பகுதியைப் புறக்கணித்தன என்று குல்தீப் நய்யார் எழுதினார். (பைனான்சியல் எக்ஸ்பிரஸ், பிப்.21, 2001) இந்து அல்லாத தொண்டு நிறுவனங்கள், நிவாரணப் பணியில் ஈடுபட வந்தபோது, சங் பரிவார் அமைப்புகள் அவைகளைத் தடுத்து நிறுத்திவிட்டன. (கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர், ஜன.31, 2001)

ஆதிவாசிகள் – மதமாற்றம்

இந்தியாவின் பழங்குடி மக்களை ஆதிவாசிகள் என்ற பெயரில் தான் அழைப்பது வழக்கம்; ஆனால், இந்தியாவின் பூர்வீகக் குடிகள் ஆரியர்கள்தான் என்று வரலாற்றைப் புரட்ட விரும்பும் ‘சங் பரிவாரங்கள்’ இவர்களை ஆதிவாசிகள் அதாவது பூர்வீகக் குடிகள் என்று அழைப்பதில்லை. மாறாக ‘வனவாசிகள்’ என்று அழைக்கிறார்கள். பழங்குடியினரான ஆதிவாசிகள், இயற்கையை வழிபடக் கூடியவர்கள். அவர்கள் இந்துக்கள் அல்ல. இந்து சாதி அமைப்பால் கடந்த நூற்றாண்டில் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் மீது மதங்கள் திணிக்கப்பட்டன. பலர் கிறிஸ்தவர்களானார்கள். அண்மைக்காலமாக, இந்த மக்களை ‘இந்துக்களாக’ மாற்றும் முயற்சிகளில் சங் பரிவார் தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக பழங்குடியினருக்கான கல்வித் திட்டங்களையும், நல் வாழ்வுத் திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. இதற்கான பெரும் நிதி அய்.டி.ஆர்.எப். போன்ற அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது.

பழங்குடியினரை இந்து மதமாற்றம் செய்வதற்கே – அமெரிக்காவின் பணம் அய்.டி.ஆர்.எப். வழியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதற்கு ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமம்’ என்ற அமைப்புக்கு நிதி உதவி செய்து வருவதாக அய்.டி.ஆர்.எப். ஒப்புக் கொண்டுள்ளதை ஏற்கனவே சுட்டிக் காட்டினோம்.“கிறிஸ்தவர்களாக்கப்பட்ட – வனவாசிகளை இந்த மதத்துக்கு மாற்றுவதற்காகவே வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் 1950களில் தோற்றுவிக்கப் பட்டது. அந்த வழியில் பழங்குடியினரின் கிறிஸ்தவ மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தி, அவர்களை இந்துக்களாக மாற்றுவதில், எங்கள் அமைப்பு வெற்றிகளைக் குவித்து வருகிறது” – என்று ஆர்.எஸ்.எஸ். வெளியீடே எழுதியிருக்கிறது. பழங்குடியினரை இந்துக்களாக மாற்றி, தேசிய நீரோட்டத்துக்குக் கொண்டு வந்து, சமூக விரோத, தேச விரோதிகளிடமிருந்து, அவர்களைக் காப்பாற்றி யுள்ளதாக, ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்துக்கு’ – அய்.டி.ஆர்.எப். நிறுவனமே, தனது ஆவணங்களில் புகழாரம் சூட்டி மகிழ்கிறது.

மத பழங்குடியினரை மதம் மாற்றுவதோடு மட்டுமல்ல; அவர்களை ‘இந்துராஷ்டிரம்’ அமை வதற்கான போராளிகளாகப் பயிற்சி தரும் நட வடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள்; அதற்கும் அமெரிக்காவின் பணம் வருகிறது; அமெரிக்காவின் ‘அய்.டி.ஆர்.எப்.’பிடமிருந்து நிதி உதவி பெறும் ‘சேவா பாரதி’ – தனது அறிக்கை ஒன்றில் – இதை உறுதிப்படுத்துகிறது. பழங்குடி யினரில் சில ஆண்களையும், பெண்களையும் தேர்வுசெய்து அயோத்தியில் உள்ள ‘ஸ்ரீராமகதா பிராவச்சான்’ என்ற ராமாயணப் பயிற்சி மய்யத்துக்கு அனுப்பி சாமியார்களைக் கொண்டு 8 மாத பயிற்சி தந்து, பிறகு அவர்களைக் கிராமங்களுக்கு அனுப்பி பிரச்சாரகர் களாகப் பயன்படுத்துவதாக சேவா பாரதி கூறுகிறது.

இது மட்டுமல்ல, ஆதிவாசிகளை, இந்துக்களாக மதம் மாற்றும் நிகழ்ச்சி, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்கும் பயன்படுகிறது என்று, சங் பரிவார் தலைவர்களே கூறுகிறார்கள். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் – “ஏகல் வித்யாலயா” என்ற பள்ளிகள், அமெரிக்க நிதி உதவியோடு நடத்தப்படுகின்றன. பழங்குடியினரை இந்துக்களாக மாற்றுவதில் – இந்தப் பள்ளிகள் பெரும் பங்காற்றுகின்றன. இத்தகைய பள்ளிகளைத் தொடங்கியதன் மூலமே, பீகாருக்குள் தாங்கள் வலிமை பெற முடிந்தது என்றும், பீகாரில் தாங்கள் மேற்கொண்ட இந்த முயற்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரிய வாய்ப்பை உருவாக்கியது என்றும், குஜராத்திலும் அதே சோதனைகளைத் துவங்கி – காங்கிரஸ் கோட்டைகளைத் தகர்ப்போம் என்றும் ஜார்கண்ட் பகுதியைச் சார்ந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் கவுஷிக் பட்டேல் கூறியிருக்கிறார். (ஆதாரம்: ‘தி டெலிகிராப்’ நாளேடு, ஜூலை 4, 2000)

- ஆக, அமெரிக்கப் பணம், மதமாற்றத்துக்கு மட்டுமல்லாமல், பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்து வதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மதக் கலவரங்களை உருவாக்கவும்….

அமெரிக்காவிலிருந்து சங் பரிவார்களுக்கு வரும் பணம், இந்தியாவில் மதக் கலவரங்களை நடத்துவதற்கும் பயன்படுகிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. சுருக்கம் கருதி, அமெரிக்க நிதி உதவியோடு செயல்படும் அமைப்புகள் தந்துள்ள ஒரு சில ஒப்புதல் வாக்கு மூலங்களை மட்டும் சுட்டிக்காட்டலாம். மேற்கு குஜராத்தில் வாகை எனுமிடத்தில் அமெரிக்க உதவியோடு ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமம்’ நடத்தும் பள்ளியில் சிவாஜியின் படத்துக்குக் கீழே, “சிவாஜி மட்டும் இல்லாவிட்டால் நாம் அனைவரும் ‘சுன்னத்’ செய்யப்பட்டிருப்போம். சிவாஜி தான், நம்மைக் கட்டாய மதமாற்றத்திலிருந்து காப்பாற்றினார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ மதத்தின் முதல் தலைமுறையினரான அந்த மாணவர்கள் இப்போது ‘இந்து’க்களாக மாற்றப்பட்டுள்ளனர். ஒரு இளம் ஆர்.எஸ்.எஸ்.காரர் அந்தப் பள்ளியை நடத்துகிறார். கலவரத்துக்கான வெறியை இதன் மூலம் தூண்டிவிடுகிறார்கள் என்று, பள்ளியை நேரில் பார்வையிட்டுத் திரும்பிய வரலாற்று ஆய்வாளர் அஜய்சிங் எழுதியிருக்கிறார். (ஆசியா வீக், மார்ச் 26, 1999)

அமெரிக்க உதவி பெறும் வனவாசி கல்யாண் பரிஷத்தை நடத்தும் சுவாமி அசீமானந்த் என்பவர் – ஒரு ஆதிவாசிக்கூட கிறிஸ்தவராக இருக்கக் கூடாது என்று கூறி, அனைவரையும் இந்துக்களாக்கும் தீவிர வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதை, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டின் – செய்தியாளர் அருண் வர்கீஸ் அம்பலப்படுத்தினார். (‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பிப்.11, 1999)

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாஷ்பூரில் உள்ள வனவாசி கல்யாண் நிறுவனத்தினரால், கிறிஸ்தவ ஆதிவாசிகள் தாக்கப்படுவதையும், மன உளைச்ச லுக்கு உள்ளாக்கப்பட்டதையும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் கண்டன ஊர்வலம் நடத்தியதையும் ஒரு டாக்குமென்டரி படமே அம்பலப்படுத்தியது. (Fishers of Men, Documentary by Ranjankanth and Padmavathy Rao, 1997)

அமெரிக்க வாழ் இந்தியரின் உதவியோடு, இந்தியாவில் கலவரங்களும் வெறுப்புகளும் தூண்டிவிடப்பட்டதற்கு இவை சில உதாரணங்கள். அவர்களின் உதவியோடு நடத்தப்படும் நிறுவனமான வித்யாபாரதி நடத்தும் பள்ளிகளின் பாடத் திட்டங்களில் வரலாறுகள் திருத்தப்பட்டு, இந்து மதவாத உணர்வுகள் தூண்டி விடப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

நிதி பெறும் நிறுவனங்கள்

அய்.டி.ஆர்.எப். எனும் அமெரிக்கா வாழ் பார்ப்பனர்கள் நடத்தும் நிறுவனத்திடமிருந்து நிதி உதவி பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை 184, மாநில வாரியாக நிதி பெறும் நிறுவனங்களின் பெயர்களையும் – நிதியையும், அதன் இணையத் தளங்களில் காண முடிகிறது. இதில் தமிழ்நாட்டில் நிதி உதவி பெறும் நிறுவனங்களையும் பெற்றுள்ள தொகையையும் மட்டும் கீழே தருகிறோம்:

பாரத் கல்சுரல் டிரஸ்ட் – திருச்சி (45,980 டாலர் – மதத்துக்காக)

கிராமகோயில் பூசாரிகள் பேரவை – சென்னை (2,250 டாலர் – மதத்துக்காக)

நவஜோதி சாரிட்டி டிரஸ்ட் – சென்னை (2,250 டாலர் – மதத்துக்காக)

சிவாலயா – சென்னை (6,650 டாலர் – மதம்-கல்வி)

ஸ்ரீராம தனுஷ்கோடி அபய ஆஞ்சநேயர் சேவா டிரஸ்ட் (9,500 டாலர் – மதத்துக்காக)

சாமி விவேகானந்தா ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி (82,290 டாலர் – மதம்-கல்விக்காக)

ஆயுர்வேதிக் டிரஸ்ட் (கோவை) – (2,410 டாலர் – மதம்-சமூக நலனுக்காக)

யுனிக் பவுண்டேன் டிரஸ்ட் (திருவண்ணாமலை) – (9,035 டாலர் – மதம்-சமூக நலனுக்காக)

வெர்சல் சாரிட்டபிள் டிரஸ்ட் (சென்னை) – (17,500 டாலர்)

விவேகானந்தா கேந்திரா ராக் மெமோரியல் (கன்னியாகுமரி) – (74,885 டாலர் – மதம் – சமூக கல்விக்காக)

ஆரோவில் – ஆரோவில் லேண்ட் பன்ட் – 301,420 டாலர்

அர்பிந்தோ ஆக்ஷன் – 4,750 டாலர்

ஆர்டார்தோ ஆஸ்ரம் – 2,500 டாலர்

அமெரிக்காவின் அய்.டி.ஆர்.எப். வழங்கியுள்ள மொத்த நிதியில்

82.4 சதவீதம் (2,684,915 டாலர்) சங் பரிவார் அமைப்புகளுக்கும்,

8.1.சதவீதம் (2,64,660 டாலர்) மத நடவடிக்கை களுக்கும்,

2.2 சதவீதம் (70,620 டாலர்) மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கும்,

7.4 (2,49,785 டாலர்) சதவீதம் ‘தெரியாத நடவடிக்கைகளுக்காகவும்’ ஒதுக்கப்பட்டுள்ளது.

மதநடவடிக்கைகள், கல்விப் பணிகள், நிவாரணப் பணிகள் என்றபெயரில் வாங்கப்பட்ட நிதியும், சங் பரிவாரங்களின் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்பட் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Sabarang Communication/SACW/ தளத்திலிருந்து)

பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே அணுமின் நிலையம்; மக்களுக்கல்ல


அணுமின் சக்தி உற்பத்தி – பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கே தவிர, மக்களுக்கல்ல; பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்காக, மக்களுக்கு ஆபத்தான திட்டங்கள் தேவையா, என்று கேட்கிறார் கட்டுரையாளர். இவர் ஒரு மின் பொறியாளர். மனித இனத்தின் வளர்ச்சிக்கு சோசலிச சிந்தனையின் வழிபட்ட அரசும், மின் சக்தியும் அவசியம் என்று மாமேதை லெனின் சோவியத் விடுதலையின்போது குறிப்பிட்டார். அணுமின் சக்தி பேரழிவை உள்ளடக்கியது என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அணுமின் சக்தியின் தேவை குறித்து பேசுவோர் இதனை குறைத்து மதிப்பிடுவது கவலையளிக்கிறது. அணுமின் சக்தியை எதிர்ப்பவர்கள் அறிவியல் பார்வையற்றவர்கள் எனவும் பொது மக்களின் அச்சங்களை அரசு போக்க வேண்டும் எனவும் அவர்கள் பேசுகின்றனர்.

இந்நாட்டில் உற்பத்தியாகும் மின்சக்தி நம் மக்களின் தேவைகளுக்கு, வேலை வாய்ப்பிற்கு, உள்நாட்டு நுகர்வுக்கான உற்பத்திக்கு என முன்னுரிமை கொடுத்து திட்டமிடுவதை விடுத்து, “ஏற்றுமதிக்கான பொருளாதார நோக்கில் செலவிடப்படுகிறது என்பதை உணர மறுப்பது, உலகமயமாக்கல் கருத்தியலின் வெற்றியாகும். எடுத்துக்காட்டாக, சென்னை துறைமுகத்திலிருந்து தினமும் 300 மகிழுந்துகள் ஏற்றுமதியாகின்றன. இது 16 இலட்சம் யூனிட் செலவில் உருவானது!

இது போலவே மென் பொருள் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் (பி.பி.ஓ.), பன்னாட்டு நிறுவனங்கள், மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள், மால்ஸ் எனும் பேரரங்குகள், கேளிக்கை-விற்பனை அரங்குகள் என சென்னை பகுதியில் அமைந்துள்ள 1000க்கும் மேற்பட்ட குளீரூட்டப்பட்ட கட்ட டங்கள் நாளொன்றுக்கு பல லட்சம் யூனிட்டுகள் மின் சக்தியை நுகர்கின்றன.

இந்தியாவில் தனி மனித ஆண்டு மின் நுகர்வு 704 யூனிட்டுகள். மக்கள் தொகையில் 33ரூ பேர் மின் இணைப்பற்றவர்கள். இந்த நுகர்வு ஐரோப்பியர் களின் நுகர்வில் 11ரூ மட்டுமே. எனவே இந்திய ஆட்சியாளர்கள் உரத்து கூச்சலிடும் மின் சக்தி தேவை என்பது யாருடைய நலன்களுக்காக என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

நம் நாட்டில் 65ரூ, மக்கள் வேளாண் துறையை சார்ந்துள்ளனர். அவர்களது உற்பத்தி திறனையும் உற்பத்தியையும் பெருக்கவும், நெசவாளர்களுக்கு உதவவும் செலவாகும் மின்சக்தி மிகக் குறைவு என்பது திட்டமிடலின் குறைபாடு. இது பெரு வாரியான மக்களுக்கெதிரான செயல் என்பது தெளிவாகும்.

இந்தியா உலக மக்கள் தொகையில் 17%, எரி சக்தி பயன்பாடு 4%, அமெரிக்கா உலக மக்கள் தொகையில் 5% மட்டுமே. ஆனால் எரி சக்தி பயன்பாடோ 24%. உலகின் மிக பணக்கார நாடான, தொழில் நுட்பத் திறனில் முன்னோடியான, அமெரிக்கா தனது தேவையில் 10ரூ க்கும் குiறாகவே அணுமின் சக்தியை உற்பத்தி செய்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக ஒரு அணு மின் நிலையத்தைக்கூட கட்டவில்லை. படிப்பறிவால் உலகின் முன்னோடியாக உள்ள அந்நாட்டு மக்களின் அச்சத்தைப் போக்க அமெரிக்க அரசினால் இயலவில்லை. வேண்டுமானால் நமது பிரதமர் மன்மோகன்சிங் தனது குழுவை அனுப்பி அச்சம் தவிர்க்க அமெரிக்காவுக்கு உதவலாம். அதன் மூலம் அன்னிய செலாவணியை ஈட்டலாம்.

இந்தியாவில் தற்போது அணுமின் சக்தி 2.70% மட்டுமே. மின் சக்தியை கடத்துவதிலும், விநியோ கிப்பதிலும் ஏற்படும் இழப்பு 25% (உலகத் திறன் 9% மட்டுமே). இதை மேம்படுத்துவதின் மூலம் 16% இழப்பை மிச்சப்படுத்தலாம். இதுபோல மின் திறன் மேம்பாடுகளின் மூலம் குறைந்தது 15% மிச்சப் படுத்தலாம்.

நீர் மின் நிலையங்கள் 90,780 மெகாவாட் நிறுவ வாய்ப்புள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனப் பகுதி 2 லட்சம் சதுர கிலோ மீட்டர். இங்கு சூரிய மின் சக்தி நிலையங்கள் அமைக்கலாம்.

மன்மோகன் சிங், சோனியா காந்தி வழிகாட்டு தலின்படி, உலக மயமாக்கல் போர்வையில் இந்தியாவை மேலைநாடுகளின் சந்தைக்காடாக மாற்றி வருகிறார். இதை பா.ஜ. கட்சியும் ஆதரிக்கிறது என்பதை விக்கி லீக்ஸ் பலமுறை அம்பலப் படுத்தியிருக்கிறது. வரும் 20 ஆண்டுகளில், 40 ஆயிரம் மெகாவாட் அணுமின் நிலையங்களை, 6.4 லட்சம் கோடி ரூபாயில் அமைக்க இந்தியா திட்டமிட் டிருக்கிறது. இது வெளிநாட்டு நிறுவனங்களின், மக்களின் நன்மைக்கே உதவும் என்பது தெளிவு.

அணுமின் நிலைய விபத்துக்களில் சில:

1. 4 மே 1987 இல் கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது (Core rupture)). 2 ஆண்டுகள் மூடப்பட்டது. செலவு 300 மில்லியன் டாலர்.

2. 10 செப்டம்பர் 1989 – தாராப்பூர் ஐயோடின் கசிவு – கதிர்வீச்சு பாதுகாப்பு அளவைவிட 700 மடங்கு அதிகம். செலவு 78 மில்லியன் டாலர்.

3. 3 பிப்ரவரி 1995 – கோட்டா ராஜஸ்தான் – ஹீலியம்/கனநீர் கசிவு. 2 ஆண்டுகள் மூடல் – செலவு 280 மில்லியன் டாலர்.

4. 22 அக். 2002 – கல்பாக்கம் – 100 கிலோ – சோடியம் (கதிர் வீச்சு) கசிவு – செலவு 30 மில்லியன் டாலர்.

எல்லா உற்பத்தி நிகழ்வுகளிலும் விபத்துகள் என்ற தாங்கக்கூடிய அழிவு என்பதை உள்ளடக்கியதாக உள்ளது உண்மைதான். ஆனால், அணுமின் நிலையங்களில் பேரழிவு நிகழ வாய்ப்புள்ளது.

இது இயற்கை சீற்றங்களினால் மேலும் உயரும் என்பது உண்மை. இம் மின் நிலையங்களில் பெறப்படும் கழிவுப் பொருட்களின் பாதியை சரிசெய்யவே 25000 ஆண்டுகளாகும். இது பாதுகாப்பா? வருங்கால சமுதாயத்திற்கு நாம் விட்டுச் செல்லும் பேராபத்தா?

அணுமின் நிலையத்தில் உற்பத்தி இலக்கை அடைய பல மணி நேர இயக்கத்திற்கு பின்னரே இயலும். இதை கிரிட்டிக்கல் என குறிப்பர். இதன் இயக்கத்தை நிறுத்தவும் பல மணி நேரமாகும். எனவேதான் இந்நிலையத்தை base load station என்று அழைப்பர். சுனாமியின்போது ‘ரியாக்டரை’ குளிர்விப்பது என்பது மிகவும் சிக்கலானது என்பதை ஜப்பானில் புகுசிமா அணுமின்நிலைய விபத்தின் போது அறிய முடிந்தது.

இதன் கதிர்வீச்சு 200-300 கி.மீ. அளவுக்கு போனது. இது கல்பாக்கம் / கூடங்குளத்துக்கும் பொருந்தும். எனவே உலக மயமாக்கல், ஏற்றுமதி பொருளாதாரம் என்ற மாயையிலிருந்து விலகி நமது மண்ணுக்கேற்ற பொருளாதாரம், பெருவாரியான மக்களின் உழைப்பு சார்ந்த உற்பத்தி முறைக்கு முன்னுரிமை என்று திட்டமிட்டால், அணுமின்சக்தி இல்லாமலேயே நாம் சிறப்பாக வாழ முடியும்.

- பெரியார் தளம்-

நீதி கடை சரக்கா?


இந்திய நீதித்துறை தனது தரத்திலிருந்து தாழ்ந்துபோய்விடாமல் இருக்க வேண்டுமென்றால், ஜனநாயகம் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேற்கத்திய நீதிபதிகளைப் போல போலிமுடி, உடைகள் ஆகியவற்றுடனான தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, திறந்த புத்தகமாக நீதிபதிகள் இருக்க வேண்டும்.

நீதிபதி ஜெரோம் பிராங்க் இவ்வாறு எழுதினார். “ஜனநாயகத்தில், அரசின் எந்த ஒரு கிளையின் செயல்பாடுகளை மக்களுக்கு பரிச்சயமாக்குவது அறிவுபூர்வமற்றதாக எப்போதுமே இருக்காது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் தவிர்க்க முடியாமல் ஏற்படக் கூடிய தவறுகளை, ஒப்புக்கொள்ளாத மக்களை குழந்தைகள் போன்று நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். இத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்க, இந்த அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை மக்களுக்கு சொல்லுவதே சரியானதாக அமையும்“ என்று குறிப்பிட்டார்.

நீதித்துறை ஊழலால் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது என்று எந்தவித நம்பத்தகாத கொள்கைகளையும் கண்டுபிடிக்க அனுமதிக்கக்கூடாது. நீதிமன்றங்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், தவறுகளுக்கு பொறுப்பேற்பதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் தண்டிக்கும் அதிகாரமுள்ள ஆணையத்தின் வழிகாட்டுதலில் இவை இயங்க வேண்டும். நீதித்துறையின் புகழைக் குலைக்கும் வகையில் ஒரு நீதிபதி ஊழலில் ஈடுபட்டால் கூட அவரை வெளியேற்ற வேண்டும்.

தற்போது நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை என்னைப் பொறுத்தவரை அரசியல் சட்டரீதியாகத் தேவையற்றது. உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதில் சுயேட்சையான தன்மை வேண்டுமென்று 1998ல் ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கூறியது. இதனடிப்படையில் இருப்பதில் மூத்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவே தேர்வை செய்ய வேண்டும் என்று முடிவானது. நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அமைச்சரவையிடமிருந்து பறிக்கப்பட்டு நீதிபதிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.

நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்கு நிபுணத்துவம் தேவை. இதில் மூத்த நீதிபதிகளாக இருக்கட்டும் அல்லது இளைய நீதிபதிகளாக இருக்கட்டும், அவர்களுக்கு போதிய பயிற்சி கிடையாது. சோசலிச-மதச்சார்பற்ற-ஜனநாயகக் கருத்துகளில் நம்பிக்கையற்றவர்களையும், வர்க்க ரீதியாக பாரபட்சம் காட்டக்கூடியவர்களையும் ஒருபோதும் நீதிபதிகளாக நியமிக்கக்கூடாது. நிர்வாகமும், சட்டமன்றங்களும் தங்கள் எல்லையைத் தாண்டும்போது நீதிபதிகள் அவர்களைத் திருத்துகின்றனர். ஆனால் நீதிபதிகள் தவறு செய்யும்போது அவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் சட்ட ரீதியான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதற்காக தெளிவான சட்ட வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும்.

சலுகைகளை மட்டுமே எதிர்நோக்கும் பூஷ்வா தொழிற்சங்கத்தைப் போல நீதித்துறை இயங்குகிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் 180 நாட்களும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 210 நாட்களும் மட்டுமே வேலை செய்கின்றனர். வழக்குகள் தேங்கிப்போய் மலைபோல் குவிந்து கிடக்கிறது. ஆனால் நீண்ட விடுமுறைகளை ஒழிக்க நீதிமன்றங்கள் அக்கறை கொள்வதில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாலை நேரங்களிலும் வழக்குகளை விசாரிக்க சில நீதிபதிகள் தயாராக உள்ளனர் என்பதும் உண்மையே.

வழக்கை விசாரிக்க பல நாட்களை சில நீதிபதிகள் எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் எடுத்துக் கொண்டால் வழக்கே முடிந்துவிடும் என்ற நிலையில், சில நீதிபதிகள் ஒத்திவைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். காலந்தாழ்த்துதல் மற்றும் யோசிக்காமலேயே அதிவிரைவில் செயல்படுதல் ஆகிய நீதிபதிகளுக்கு இருக்கக்கூடாத செயல்பாடுகள் அவர்களை தொற்றிக் கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளோ அல்லது மேற்பார்வை செய்வதற்கான ஏற்பாடுகளோ இல்லை.

உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க முடியும் என்பதில் நாள் கணக்கில், மாதக் கணக்கில், வருடக்கணக்கில் தள்ளிப் போடும் வழக்கம் உள்ளது. சில சமயங்களில் தீர்ப்பே வராத நிலையும் ஏற்பட்டுள்ளது. இவற்றை தணிக்கை செய்வதற்கோ அல்லது பொறுப்பேற்றுக் கொள்ளச் செய்வதற்கோ எந்தவழிமுறையும் இல்லை. குறித்த நேரத்திற்குள் நீதிமன்றங்களே தங்கள் வேலைகளை செய்யாவிட்டால், நிர்வாகத்தின் பணிகளை குறித்த நேரத்திற்குள் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தால் எவ்வாறு கூற முடியும்?

தீர்ப்புகளை வழங்காமலேயே இருக்கும் நீதிபதிகள், அதற்கு பொறுப்பேற்காமல் இருப்பது மட்டுமல்ல, பதவி உயர்வும் பெற்று சென்று விடுகிறார்கள். இது குறித்தெல்லாம் தேர்வுக்குழு விசாரிக்காது. தேர்வு செய்யும் முறை வழக்கறிஞர்கள், மக்கள் மன்றங்கள் மற்றும் மக்களுக்கு தெரிந்து விடாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடிமகன்களிலிருந்து ஒருபடி மேலே தங்களை வைத்துக் கொள்ள, தங்களைப் பற்றிய விபரங்களை வெளியிடாமல் இருக்கும் உரிமையை நீதிபதிகள் கோருகிறார்கள். இரும்புத் திரை ஒன்றை விரித்துக் கொண்டு அமரவே அவர்கள் விரும்புகிறார்கள். ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்றிருந்தாலும், நீதித்துறை கடமை தவறுவது மீதான கருத்துகளுக்கு வாய்ப்பூட்டு போடும் முயற்சியிலும் நீதிபதிகள் இறங்கிவிடுகிறார்கள்.

பேராசை பிடித்த காலத்தில், கலாச்சாரமும் வர்த்தகமயமாகியுள்ளது. சம்பள உயர்வு குறித்த தொழிலாளர்களின் கோரிக்கைகளெல்லாம் தேங்கிக்கிடக்கின்றன. பொருளாதாரம் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது. ஏராளமானோர் வேலையின்மையை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சலுகைகளை பெருமளவில் அதிகப்படுத்த வேண்டும் என்று சில நீதிபதிகள் கோருகிறார்கள். இல்லாதவர்களின் எண்ணிக்கையும், மனித உரிமைகளை பல வகைகளில் இழந்தவர்களும் இந்தியாவில் அதிகம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இத்தகைய ஊழல்வாத செயல்களால், ஜனநாயகக் குடியரசில் சோசலிச ரீதியிலான நீதியை வழங்குவதிலிருந்து இவர்கள் தகுதியிழந்துவிடுகிறார்கள். பொறுப்பேற்றுக் கொள்ளாத சுதந்திரம் என்பதால் பல நீதிபதிகள் தங்கள் மனச்சாட்சியையே இழந்துவிட்டார்கள் என்ற உண்மை அப்படியே தொக்கி நிற்கிறது. சலுகைகளை மட்டுமே எதிர்பார்க்கக்கூடிய பூஷ்வா தொழிற்சங்கங்களைப் போல நடந்து கொள்வது இப்பிரச்சனைகளைத் தீர்த்து விடாது. நீதி வழங்கும் தரத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, முறையீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்து சமூக ரீதியிலான தீர்ப்பை வழங்க வேண்டும்.

நீதித்துறை என்பது மக்கள் கையில் இருக்கும் பெரும் கருவியாகும். ஒரு சில தலைமை நீதிபதிகள், அதை மக்கள் கண்களிலிருந்து மறைக்க முயல்வதால் வெறும் கூடுகளாக மாறிவிடாது. இந்திரா காந்தியின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு நான் தடைவிதித்தபோதும் சரி, அல்லது முழுமையான தடையை விதிக்க மறுத்தபோதும் சரி, அச்சத்தாலோ அல்லது சலுகைகளைப் பெறுவதற்காகவோ நான் சரணாகதி அடைந்துவிடவில்லை. எனது கடமையை நான் நிறைவேற்றினேன். ஆனால் அதற்குப்பிறகு அவசர நிலை என்ற பெரும் பேரழிவு ஏற்பட்டு, அனைத்து மனித உரிமைகள் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவை பறிக்கப்பட்டன. நான் அளித்த தீர்ப்பு மூன்று பேர் கொண்ட பெஞ்சால் மாற்றிய மைக்கப்பட்டது.

நிறைவாக, நீதிமன்றம் என்பது மறைந்து கொண்டு இயங்கும் கோழை அல்ல. வெளிப்படையான மற்றும் அச்சமின்றித் தனது கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு அமைப்பாகும். ரகசியம் என்பது நீதித்துறையைப் பொறுத்தமட்டில் பொருத்தமில்லாத ஒன்றாகும். இல்லையென்றால் ஜனநாயகமே கேலிக்குள்ளாகும். ஏழைகள் ஒரு சர்வாதிகார ஆட்சியை எதிர்கொள்ள நேரிடும். மக்களின் சக்தியால் உருவாகியுள்ள நமது குடியரசில், இப்படி ஒரு நிலையை அனுமதிக்கக் கூடாது. இந்திய நீதித்துறைக்கு இன்னும் மக்களிடத்தில் உள்ள மதிப்பை குலைக்கக்கூடிய வகையில், உச்சநீதிமன்றத் தில் ஏழு ஆண்டுகள் எனது வாழ்க்கையைக் கழித்த நான் சொல்லிவிடக் கூடாது. நமது சமூகத்தில் இந்திய நீதித் துறைக்கு என்று உயர்ந்த இடம் உள்ளது.

நீதி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் என்று அனைத்து வகையான அம்சங்களையும் நிலைநிறுத்தும் வகையில் தீர்ப்புகளை வழங்கிட வேண்டும். நீதி வழங்குவது ஒன்றும் பல அடுக்குகளைக் கொண்ட பெரு வர்த்தகமோ அல்லது வணிகமயமாக்கலோ அல்ல. நாட்டின் ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தைகளின் பெரும் நம்பிக்கையே நீதி வழங்குதலாகும்.

-வி.ஆர்.கிருஷ்ணய்யர்
நன்றி : ‘தி இந்து’ (பிப்.19)