Wednesday, October 14, 2009

யார் தேசத் துரோகிகள் பார்ப்பனரல்லாதாரா? பார்ப்பனர்களா?


“நாம் எந்த விதத்தில் தேசத்துரோகிகள்? இந்த தேசத்துக்கு அன்னிய ஆட்சியென்பதை அழைத்து வந்தவர்கள் யார்? அவர்களுக்கு இங்கு என்றும் நிலைபெறும்படியான ஆட்சிக்கு கட்டடம் கட்டிக் கொடுத்து அவற்றிற்கு தூண்களாய் நின்றவர்கள் யார்? சரித்திரங்களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள்.


நாம் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையிலோ, ஆதிதிராவிடர் என்கின்ற முறையிலோ, முஸ்லீம்கள் என்ற முறையிலோ இந்து தேசத்துக்குத் துரோகம் செய்தாக ஏதாவது ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்டட்டும். நாம் உடனே அதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளத் தயாராய் இருக்கிறோம். வெள்ளைக்காரர்களைத் தங்கள் தெய்வம் என்றும், விஷ்ணுவின் அம்சம் என்றும் அவர்களும் தாங்களும் ஒரே ஜாதி என்றும், அவர் முகச்சாயலும் தங்கள் முகச்சாயலும் ஒரே மாதிரி இருக்கிறது என்றும், அவர்களும் தாங்களும் ராசியாய் போய் இந்த நாட்டில் நிரந்தரமாக வாழவேண்டும் என்றும் நேற்று வரையிலும் சொல்லிக் கொண்டிருந்த கூட்டத்தார்கள் யார்? பார்ப்பனர்களா? அவர்கள் ஒழித்த மற்றவர்களா என்று யோசித்துப் பாருங்கள்.


இன்று கூட பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட விடுதலை கேட்டாலும் சரி, அதற்கு ஆக என்ன தியாகம் செய்ய தீர்மானித்தாலும் சரி, எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்கப்புறம் நடப்பதென்ன? அதில் எங்கள் பங்கு என்ன? என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு நாங்களும் கையொப்பம் போடுகிறோம்.


அதற்குச் சக பார்ப்பனர்கள் எத்தனை பேர் சாகிறார்களோ அதற்கு இரண்டு பங்கு உயிர் கொடுக்கின்றோம். பிறகு யார் தேசபக்தர்கள்? யார் கோழைகள்? யார் தேசத்தைக் காட்டிக் கொடுத்து கக்கூசில் போய் ஒளிந்து கொள்பவர்கள்? என்று பார்க்கலாம். அதை விட்டுவிட்டு உண்மைக் காரணம் என்ன என்பதை மறைத்துவிட்டு எங்களைக் கோழைகள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் சொல்லி விடுவதாலேயே எங்களை ஒழித்துவிடுவது என்று நினைத்தால் அது முடியுமா? என்று தான் கேட்கின்றேன்”.


சேலம் -பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு ”குடி அரசு” 14-06-1936

No comments: