Monday, May 12, 2008

இந்து மதம் எங்கிருந்து வந்தது?

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி. இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்துநதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழிறங்குகிறாள் சிந்து......அது அந்தக்கால ஆப்கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம்போய் வெளியே வருவார்கள்.பூமியே புதிராக தெரிந்தது. அவர்களுக்கு நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது யார்? நடுங்கினர். இந்தப் பயத்தாங் கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள். அவர்களின் மூளைக் குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர். விளைவு...?கண்டு பிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான் உற்றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் ஜரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங்கப்படுகிறது. ஆரியர்களில் ஒரு பகுதிதான் ஜரோப்பாவுக்கு நகர்ந்தது).இயற்கை தான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான். நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்கு நாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள் உண்டாயிற்று வேதம். உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.‘இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ சந்தோஷமாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும்” -வகுத்தது வேதம்.“Civilisation never born, but, it is the heritage of humanity” என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம்.முதலில் இயற்கையைப் பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனை செய்து உற்றுப் பார்த்த மனிதனான ரிஷி அறிவுரை சொன்னான். பயப்படாதே.. நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவோம். நதிகளைப் பயன்படுத்துவோம். இயற்கை நமக்காகத்தான் வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது.ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும்...இம் மனிதர்களிடையே இப்படித்தான் வேத மதம் பிறந்தது. இந்த நல்லெண்ணச் சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.அதற்கு என்ன செய்தார்கள்? பிரித்தார்கள். மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை. ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து... அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு.ஆள்பவன் ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான். ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் க்ஷத்திரியர்கள். உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள். பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே....அதிலுள்ள கருத்துகளை கட்டளைகளை கர்மாக்களை நாம் தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும். எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது. இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன. ரிசா, குபா, க்ரமு என்கிற நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கான் தேச நதிகள் என்பதால் வேதகாலம் பெரும்பாலும் ஆப்கான் பகுதியில் தான் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கின்றன வேதத்தில் மூழ்கியிருந்தோரின் முடிவுகள்.வேதம் பிராமணர்கள் கைக்கு போனதும் அறமும் தர்மமும் கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்ததால்.. வேத மதம் பிராமண மதம் ஆயிற்று. ஆரிய மதம் வேதமாகி வேத மதம் பிராமண மதமாகி, காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க, அப்போது இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்?இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? படிப்படியாகப் பார்ப்போம்.ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து ‘சகதி’ அந்தஸ்தோடு கிடக்கிறது. புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப் பக்கம் வந்துவிட்டான். திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந்தாள். ‘கொஞ்சம் கை குடுங்கோ... வந்துடறேன்’ என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம் தான்.இதேபோலத்தான் அன்று... ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்? நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் மிக குறைவே. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கது தான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.மனு?வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டது தான் மனுதர்மம். பிராமணன், ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை...” இப்படிப் போகிறது மனு. வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே’ வேலை செய்தது. ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.‘அடே... குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு’ என்ற வேதத்தை மனு திரித்து... “இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்... இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்கவேண்டும்” என பிளவு செய்தது.ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னோம் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.“பால்யே பிதிர்வஸே விஷ்டேதுபாணிக்ரஹா யௌவ் வனேபுத்ரானாம் பர்த்தரீ ப்ரேதுநபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்”“பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்.” இப்படி ‘பெண்ணுரிமை’ பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது. “பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே...” பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ‘பூம் பூம்’ மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள். வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. “கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்...” என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.பல நூறு வருடங்கள். ஒரு கிரிமினல் போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன் ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதிபத்ய’ சூழ்நிலையில்தான்... இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.“கடவுள் பெயரை சொல்லியும்... கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே? உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்? வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்...” என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.இன்றைக்கு அணு குண்டு வெடி சோதனைக்கே ‘புத்தர் சிரித்தார்’ என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புத்தரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன?

சிந்தனை செய் மனமே!*

2 comments:

tamilraja said...

தொட்டு விடாம இன்னும் எழுதுங்க மாப்ளே!!

tamilraja said...
This comment has been removed by the author.